Sunday, August 31, 2025

தனித்தமிழ் அரசியல்வாதிகளுக்கு:

 

தனித்தமிழ் புதிய அறிவியல் கலைச்சொற்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியுள்ளது. ஆனாலும் கூட தமிழறிஞர்களால் மேலிருந்து செய்யப்படும் தூய்மையாக்கத்தால் கீழிலிருந்து உருவாகும் மொழியின் மாற்றங்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தமுடியாது. மொழிகள் மாறாதவை அல்ல, மொழிகளுக்கும் இயங்கியல் உள்ளது. சங்க காலத்துத் தமிழில் இன்று நாம் பேசுவதில்லை. ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தை இன்று யாரும் வழக்கில் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் பேசும் தமிழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்வரும் வருங்கால சந்ததியினருக்கு முழுவதுமாகப் புரியப்போவதில்லை. தமிழ் மட்டுமல்ல, காலப்போக்கில் எல்லா மொழிகளுமே மாற்றங்களுக்கு உட்படுகிறது. இப்போது வழக்கத்தில் உள்ள தமிழை முற்றிலுமாக தூயத்தமிழாக்கும் முயற்சி அறிஞர்கள் மட்டத்தில் மட்டுமே நிற்குமே தவிர அது மக்கள் மொழியின் மைய நீரோட்டத்தில் கலக்கப்போவதில்லை. இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இயக்க மறுப்பியல் அணுகுமுறையாகவே இருக்கும்.

முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எப்படி வங்கியாளர்கள் பணவியல் கொள்கையை மாற்றித் தடுக்கமுடியாதோ, அதே போல் மக்கள் மொழியின் இயங்கியல் போக்கில் ஏற்படும் மாற்றங்களை தனித்தமிழ் அறிஞர்களால் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடமுடியாது.

பல்கலை வல்லுநர்களாக பல ஆசிரியர்கள் இருக்கிறன்றனர், அவர்கள் தனித்தமிழிலும் வல்லுநராக இருக்கின்றனர், அறிவியல், சமூக அறிவியலிலும் வல்லுநர்களாக இருக்கின்றனர். ஆனாலும் கூட இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது ஒரே நேரத்தில் தனித்தமிழையும், சமூக அறிவியலையும் கற்பித்தால் என்ன நடக்கும். மாணவர்களுக்கு தனித்தமிழும் புரியாது, சமூக அறிவியலும் புரியாது. இதே நிலை தான் தனித்தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களாலும் உருவாக்கப்படுகிறது. ஆகவே மொழிப்பாடத்தையும் அரசியல் பாடத்தையும் ஒரே நேரத்தில் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

அரசியல் பொருளாதாரம் என்பது சமூக அறிவியல். பெருவாரியான மக்களை அரசியல்வயப்படுத்துவதற்கு  அரசியல் பொருளாதாரத்தை மக்கள் மொழியில் பேசவேண்டியதும், எழுதவேண்டியதும் அவசியமாக உள்ளது. அரசியல் செயல்பாட்டாளர்கள் தனித்தமிழை பயன்படுத்தும் போது அவர்களின் கருத்தியல் மக்களால் உள்வாங்கப்பட்டு பௌதிக சக்தியாக மாறுவதற்கு அதுவே தடையாக உள்ளது. அரசியல் செயல்பாட்டாளர்களின் வீச்சையும் தனித்தமிழ் குறைக்கிறது.

தனித்தமிழ்வாதிகள் பிற மொழிச்சொற்களை மட்டுமல்லாது பெயர்கள், ஊர்கள் என விதிவிலக்கில்லாது அனைத்தையுமே தூயத்தமிழாக்கம் செய்கின்றனர். உதாரணமாக நியூயார்க், நியூ ஹாம்ப்ஸையர் ஆகியவற்றை புதுயார்க், புதுஹாம்ப்சையர் என்றே குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்தால் கிரீன்லாந்தை, பச்சை நிலம் என்றும், ஐஸ்லாந்தை பனி நிலம் என்றும் தமிழாக்கம் செய்ய நேரிடும் அவை குழப்பத்திற்கே வழிவகுக்கும். டிராவிட் என்பதை திராவிடர் என்றும், ஷேக்ஸ்பியர் என்பதை உலகாட்டி என்றும் மொழிபெயர்க்க நேரிடும். அறிவியல் அலகுகளான கிலோகிராம், மீட்டர் ஆகியவற்றை எப்படி நாம் அப்படியே பயன்படுத்துகிறோமோ அது போலவே பிற மொழி பெயர்களையும், இடங்களையும் பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.

தொல்காப்பியத்தில் உள்ள விதிகள் நன்னூலில் மாற்றப்படவில்லையா, அதே போல் தேவை ஏற்பட்டால் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இலாபம், உரொட்டி என சொல்லின் முதலில் லகரம், ரகரம் வந்தால் முன்னால் உயிரெழுத்து சேர்க்கும் விதிமுறையை இன்றைக்கும் பயன்படுத்தவேண்டுமா?. அறிவியல் அலகான லிட்டர் என்பதை லிட்டர் என்றே பயன்படுத்துகிறோமே தவிர இலிட்டர் என்று பயன்படுத்துவதில்லையே.

கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டை பெரும்பாலான தனித்தமிழ்வாதிகள் அறவே தவிர்க்கின்றனர். "ஸ, ஜ, ஹ, ஷ, க்ஷ, ஸ்ரீ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் தமிழின் ஒலி அமைதி மீறப்படுவதாகக் கருதுகின்றனர். இதனால் ஹூண்டாயை ஊண்டாய் என்றும், ஹாங்காங்கை ஆங்காங்க் என்றும் ஜூலையை யூலை என்றும் எழுதுகின்றனர். ஹைட்ரஜனை அய்டுரசன் என்றும், ஹீலியத்தை ஈலியம் என்றும் அழைப்பது தவறு தான். மொழியின் ஒலி அமைதியைப் பற்றி எல்லாம் இவ்வளவு கவலை அடைந்தால் தமிழ்மொழி அறிவியல் மொழியாவதற்கு அது தடையாகவே இருக்கும்.

நாம் புரட்சியாளர்கள். முற்போக்கான சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம், சமூகத்தின் அரசியல் பொருளாதரத்தையே புரட்டிப் போட முயற்சிக்கிறோம். ஆனால் மொழி என்று வந்துவிட்டால் மட்டும் பின் வாங்குகிறோம். மொழியில் இயல்பாக உருவாகும் சிறு மாற்றத்தைக் கூட நம்மால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என இயங்கியல் சொல்கிறது. மற்ற எல்லாவற்றிலும் நாங்கள் இடதுபக்கம், ஆனால் மொழியில் மட்டும் வலதுபக்கம் என்பது போலத்தான் இருக்கிறது மொழியின் இயங்கியலை ஏற்க மறுக்கும் தனித்தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களின் இறுக்கமான நிலைப்பாடும்.

 


Saturday, August 30, 2025

சிறையில் பூத்த செம்மலர் (9)

 

நான் பொதுமக்களில் ஒருவராக இந்த விமர்சனங்களை முன்வைக்கவேண்டியுள்ளது, சில கேள்விகளையும் கேட்கவேண்டியுள்ளது. தியாகுத் தோழரை மட்டுமே குறிவைத்து தாக்குவதற்காகவோ, காயப்படுத்துவதற்காகவோ இவற்றை நான் இங்கு முன்வைக்கவில்லை. அரசியல் செயல்பாட்டாளர்களாக இருக்கும் தனித்தமிழ்வாதிகள் அனைவருக்குமே மக்களில் ஒருவராக நான் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன்.

நான் தாய்மொழி-தமிழ்வழிக்கல்வியை மட்டுமே ஆதரிப்பவர். நானும் ஆங்கிலச் சொற்கள் இல்லாமல் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என்பதை ஆதரிப்பவர் தான். நானும் மணிப்பிரவாள நடையில் எழுத விரும்பவில்லை  தான்.  ஆனாலும் கூட ஏற்கெனவே மக்களின் பேச்சு மொழியிலும், உரை நடைகளிலும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து விட்ட சில பிறமொழிச் சொற்களை முற்றிலுமாக நீக்கவேண்டியது அவசியம் என்று நான் கருதவில்லை. ஏனெனில் நகரமயமாக்க சூழலில் மொழிக்கலப்பு என்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடமுடியாது.

தனித்தமிழ் இயக்கங்களுக்கானக் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். ஆனாலும் கூட மக்களை அரசியல்வயப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடும் போது மொழி அதற்கு தடையாகக் குறுக்கே நிற்பது நல்லதல்ல. அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, சமஸ்கிரதமாக இருந்தாலும் சரி, தனித்தமிழாக இருந்தாலும் சரி. ஏனெனில் தனித்தமிழ் உரைகளும், உரைநடைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளும்படியாக இல்லை. அவற்றை புரிந்துகொள்வதற்கே சிறிது நேரம் தேவைப்படுகிறது. நமது கருத்துக்களையும், உண்மைகளையும், உணர்வுகளையும் தங்குதடையின்றி பகிர்வதற்குத்தான் மொழியே தவிர தடைபோடுவதற்கல்ல. எளிய மக்களின் தடையற்ற புரிதலுக்கு தனித்தமிழ் தடையாகவே உள்ளது. சமூகநீதியின் அடிப்படையில் தான் தனித்தமிழ்வாதிகள் ஒரு மொழிக்கொள்கையை ஆதரிக்கின்றனர், ஆங்கிலவழிக்கல்வியை எதிர்க்கின்றனர். ஆனால் அந்த சமூகநீதிக்கே தனித்தமிழ் ஒரு வகையில் தடையாகவும் உள்ளது. எளிய மக்களைத் தனித்தமிழ் அந்நியப்படுத்துகிறது. மக்களிடமிருந்து அந்நியப்பட்ட தனித்தமிழ் பிரிவினைவாதத்துக்கும் வழி வகுக்கிறது. அதீத மொழிப்பற்றால் தனித்தமிழ்வாதிகள் தங்களை அறியாமலே, தங்கள் நோக்கங்களுக்கே புறம்பாகும் விதத்தில் தனித்தமிழ் மேட்டுமைவாதத்துக்கே (Tamil elitism) வழிவகுக்கின்றனர்.

தூய்மைப்படுத்துகிறோம் என்ற பேரில் வழக்கில் உள்ள அனைத்தையுமே தனித்தமிழாக மாற்றும் எல்லையற்ற முயற்சி முக்கியமாக அரசியல் களத்தில் நம் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தி மலுங்கவைக்கிறது. மொழி என்பது உணர்வு அடிப்படையிலானது, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள சொல்லை ஒரு தனித்தமிழ் சொல்லால் பதிலீடு செய்கிறீர்கள் என்றால் புதிய சொல்லால் பழைய சொல் தந்த அதே உணர்வை பதிலீடு செய்யமுடியாது. உதாரணமாக “சமூகம்” என்பதற்கு பதிலாக “குமுகம்” என்ற சொல்லை தனித்தமிழ்வாதிகள் முன்வைக்கிறார்கள். “வர்க்கப் போராட்டம்” என்பதற்கு பதிலாக “வகுப்புப் போராட்டத்தை” முன்வைக்கிறார்கள். “தேசம்” என்பதற்கு பதிலாக “தேயம்” என்ற சொல்லை முன்வைக்கிறார்கள்.

“சமூக நீதித் தமிழ்த்தேசம்” என்பது தூயத் தமிழில் “குமுக நீதித் தமிழ்த்தேயம்” என்று மாறலாம். ஆனால் “குமுக நீதித் தமிழ்த்தேயம்” என்பது எனக்கு எந்த அரசியல் உணர்வையும் கொடுக்கவில்லை. “வர்க்கப் போராட்டம்” என சொல்லும் போது உருவாகும் அரசியல் உணர்வை “வகுப்புப் போராட்டம்” மந்தப்படுத்துகிறது. “சமூகம்” என சொல்லும்போது ஏற்படும் உணர்வை “குமுகம்” நீர்த்துப்போக வைக்கிறது.

மக்களில் ஒருவராக இவற்றைக் கேட்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். மக்களுக்காக தேசமா? இல்லை தேசத்திற்காக மக்களா? என்ற கேள்விக்கு மக்களுக்காகத் தான் தேசம் என்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும், இடதுசாரிகளாகவும் உள்ளனர். தேசத்திற்காக தான் மக்கள் என்பவர்கள் வலதுசாரிகளாகவும், முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இதே போல் நம் முன் உள்ள பெரிய கேள்வி இது தான்? மக்களுக்காக மொழியா? இல்லை மொழிக்காக மக்களா? தலைக்காக குல்லாவா? இல்லை குல்லாவுக்காக தலையா? காலுக்காக செருப்பா? இல்லை செருப்புக்காக காலா? குல்லா பத்தவில்லை என்பதற்காக யாரும் தலையை வெட்டிக்கொள்ளமாட்டார்கள். அது போலத்தான் மக்களுக்காகத் தான் மொழியே தவிர மொழிக்காகவே மக்கள் அல்ல. மக்களுக்காகவே போராடுபவர்களாக இருந்தாலும் கூட, மொழிக்காகத் தான் மக்கள் என்று கருதுபவர்கள் ஒரு விதத்தில் தேசத்திற்காகத் தான் மக்கள் என்று கருதுபவர்களுடன் ஒன்றுபடுகிறார்கள். எந்த விதத்தில் ஒன்றுபடுகிறார்கள்? சமூக இயங்கியலை மறுக்கும் விதத்தில் ஒன்றுபடுகிறார்கள்.

அரசியல் கட்சிகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை 1. பிற்போக்கான  கட்சிகள் (reactionary parties) , 2. மாற்றத்தை விரும்பாது இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் “கன்சர்வேடிவ்” கட்சிகள் (conservative parties). 3. முற்போக்கான சமூக மாற்றத்துக்காகக் களமாடும் கட்சிகள் (progressive parties). வருணாசிரம தர்மத்தை மீண்டும் நிலை நிறுத்த நாசவேலைகளில் ஈடுபடும் பாஜக ஒரு பிற்போக்கான கட்சி.  2. இன்றுள்ள முதலாளித்துவ அமைப்பையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அப்படியே பாதுகாக்க விரும்பும் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் மாற்றத்தை விரும்பாத இன்றைய நிலையையே தக்கவைத்துக்கொள்ள விரும்பும் கட்சிகளாக உள்ளன. 3. முற்போக்கான சமூக மாற்றத்துக்கான இடதுசாரி, தலித், சாதியொழிப்புக் கட்சிகளின் தனித்தியங்கும் கூட்டணியை இனிமேல் தான் உருவாக்கவேண்டியுள்ளது.

இந்த மூன்றுவிதமான கட்சிகளில் முதல் இரண்டு வகையானக் கட்சிகளாக உள்ள பிற்போக்கானக் கட்சிகளும், மாற்றத்தை விரும்பாதக் கட்சிகளும் சமூக இயங்கியலை மறுப்பவையாக உள்ளன. அதே போலத்தான் அதி தீவிர மொழிப்பற்றால் மொழிக்காகவே மக்கள் என்று தங்களை அறியாமலேயே கருதுபவர்களும் மொழியின் இயங்கியலையும், அதன் வழியாக சமூக இயங்கியலையும் மறுப்பவர்களாகவே உள்ளனர்.

(தொடரும்)


Friday, August 29, 2025

சிறையில் பூத்த செம்மலர் (8):

 


தியாகுத் தோழரிடமிருந்து நான் எதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்பதைப் பற்றி இப்போது சொல்கிறேன். அதற்கு ததேவி இயக்கத்தில் சேர்வதுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதைப் பற்றியும் சொல்லவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.

ததேவி இயக்கத்தில் சேர்வதற்கு முன்:

எங்கள் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து இருக்கும். என் அப்பா ஏதெசு கம்யூனிஸ்ட் எழுத்தாளர், என் அம்மா கல்பனா தேவி பெண்ணியம் படித்தவர். நான் பத்தாம் வகுப்பு விடுமுறையின் போதே புரட்சித் தலைவர்கள் கார்ல் மார்க்ஸும், எங்கெல்ஸும் சேர்ந்து எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை”யைப் படித்துவிட்டேன்”. அதை படிக்குமாறு அப்பாவோ, அம்மாவோ என்னிடம் சொல்லவில்லை. அதை படித்ததிலிருந்தே என்னை நான் ஒரு கம்யூனிஸ்டாகவும், சர்வதேசியவாதியாகவுமே கருதிக் கொள்வேன். இயக்கத்தில் சேர்வதற்கு முன்பே நான் லெனின், ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டேன், மூலதனம் உட்பட கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸின் முக்கிய படைப்புகளையும், அம்பேத்கரின் முக்கியமான நூல்களையும் படித்துவிட்டேன். பெர்ண்ஸ்டைன், கார்ல் காவுத்ஸ்கியின் வலது பாதையோ, சே குவேராவின் இடது தீவிரப் பாதையோ எனது பாதை இல்லை எனவும், லெனினது இடது மையப் பாதையே எனது பாதை என்ற தெளிவும் எனக்கு இருந்தது. தமிழ்நாட்டின் சுயாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டது தெரிந்திருந்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கூட்டாட்சி சாத்தியமில்லை என தெரிந்திருந்தும் கூட சோசலிசத்தில் கூட்டாட்சி சாத்தியப்படும் என்றே கருதினேன். உடனடி சோசலிசம் என்பதே உவப்பானதாக இருந்தது.

சர்வதேசியவாதியாக என்னைக் கருதிக்கொண்ட நான் தமிழ்த்தேசியத்தை பிற்போக்குத் தனமாகவும் குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடாகவுமே பார்த்தேன். பிற இனங்களின் மீதான வெறுப்பின் மீதும், தமிழின அடிப்படைவாதம், தமிழ் மொழி அடிப்படைவாதத்தின் மீதும் கட்டமைக்கப்பட்டதாகவே தமிழ்த்தேசியத்தை நான் கருதினேன்.

தமிழ் மக்களின் உரிமைகளின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவேண்டிய தமிழ்த்தேசியத்தை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

ஒருவர் தனது கொள்கையின் அடிப்படையில் தான் அரசியல் கட்சியில் சேரவேண்டும். ஆனால் எனது கொள்கையோடு ஒத்து செயல்படும் சிறந்த அரசியல் கட்சியை அப்போது என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. கட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் நான் த.தே.வி.இயக்கத்தில் சேரவில்லை. தியாகு தோழர் தமிழ்த்தேசியவாதி என்பதற்காக நான் அவருடன் சேர்ந்து செயல்பட நினைக்கவில்லை. தியாகு தோழர் மார்க்சியர் என்பதால் மட்டுமே அவரது தலைமையில் இயங்கும் த.தே.வி இயக்கத்தில் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தேன்.

ததேவி இயக்கத்தில் சேர்ந்ததுக்குப் பின்:

ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவம் வீழ்த்தியதிலிருந்தே மொழிவழித் தேசங்கள் உருவாகின. ஆனால் காலானியாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து இந்திய தேசம் உருவானதன் விளைவாக தமிழ்த்தேசம் உருவாவதே மறுக்கப்பட்டுள்ளது. இது எனக்கு முன்னர் உறைக்காமல் இல்லை.  ஆனாலும் கூட இந்தியக் கூட்டாட்சி ஜோதி காணும் கனவில் நான் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை என்பதை நான் பின்னர் தான் புரிந்துகொண்டேன்.

இந்தியா என்பது அரசு சமூகமே தவிர தேசிய சமூகம் அல்ல. தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதையும் நான் தியாகு தோழரிடம் கற்றுக்கொண்டேன். இந்தியாவை யுஎஸ்.எஸ்.ஐ ஆக மாற்றலாம் என்று அப்போது நினைந்திருந்தேன். ஆனால் இப்போது நான் இந்தியாவை மியூசியத்தில் வைக்கப்பட்ட பிரஸ்யாவாகவே பார்க்கிறேன்.

வெறுப்பு, இன அடிப்படைவாதம், மொழி அடிப்படைவாதம் இவற்றுக்கு மாறாக தமிழ் மக்களின் உரிமைகளின் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படவேண்டிய தமிழ்த்தேசியத்தை நான் த.தே.வி இயக்கத்தில் சேர்ந்துகொண்ட பிறகே கற்றுக்கொண்டேன்.

என்றுமே நான் ஈழவிடுதலைக்கு ஆதாரவாளர் தான். ஆனாலும் கூட ஈழவிடுதலை குறித்த தெளிவான புரிதல் எனக்கு முன்னர் இல்லை. இங்குள்ள செய்தித்தாள்களில் இலங்கையைப் பற்றிய செய்திகள் எப்போதாவது தான் வரும். அதுவும் தப்பு தப்பாகத் தான் வரும். ஆபேல்  ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆபேல் இதழ்கள், செய்தி அரசியல்- ஆபேல் நீதியின் பாதை நிகழ்வுகளின் மூலமாகவே என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசத்திற்கான முழு இறையாண்மை இல்லாத தமிழ்நாட்டால் ஈழ இன அழிப்பைத் தடுக்கமுடியவில்லை என்பதையும், ஈழவிடுதலைக்கும், தமிழ்த்தேசியத்துக்கும் உள்ள இடையுறவையும் நான் தியாகு தோழரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “ஈழம் மெய்ப்படும்” புத்தகம் தான்.

சிறைகளுக்கு வெளியில் நடக்கும் காவல்துறை அக்கிரமங்கள் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் சிறைகூடங்களுக்குள்  நடக்கும் காவல்துறை அடக்குமுறைகள் தெரிந்துகொள்ள முடியாத படி மூடிமறைக்கப்படுகிறது. சிறைகளுக்குள் நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் நான் தியாகு தோழரிடம் கற்றுக்கொண்டேன்.

முன்னெல்லாம் நான் எழுதும் போது வாக்கியங்களைப் பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பேன். அந்த பிழையைத் தோழர் தான் எனக்கு சுட்டிக்காட்டினார். உரைநடைத் தமிழையும், பேச்சுவழக்குத் தமிழையும் பிழையின்றி எழுதுவதற்கும் நான் தியாகு தோழரிடம் கற்றுக் கொண்டேன்.

சட்டமன்றங்களில் நம்பிக்கையில்லாத தியாகு தோழர் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு காணாமற் போனவர்கள் நாளன்று ஐநாவுக்கு மனுக்கொடுக்க யுனிசெப் அலுவலகம் போய் வருவார். நடப்பிலிருக்கும் முதலாளித்துவ அமைப்புகளின் வழியாகவும் மாந்த உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தியாகுத் தோழரிடம் கற்றுக்கொள்ளலாம்.

 (தொடரும்)


Thursday, August 28, 2025

சிறையில் பூத்த செம்மலர் (7)

 


தியாகுத் தோழர் அனைவரையும் சமமாகவே மதித்து நடப்பவர். அரசியலில் உனக்கு அனுபவமோ, அறிவோ பத்தாது என்றோ, நான் உன்னை விட சீனியர் -மூத்தவன், நீ நேத்து வந்த கத்துக்குட்டி என்பது போல நேரடியாகவோ, இல்லை குறிப்பால் உணர்த்தியோ, மறைமுகமாகவோ எந்த விதமான “ரேகிங்கையும்” தியாகு தோழர் இதுவரை செய்ததில்லை. பல “தலைவர்கள்” தம்மைச் சுற்றி அதிகாரத்தாலும், இறுமாப்பாலும் கோட்டை கட்டி அனைவரும் எளிதில் அணுகமுடியாத படி உச்சியில் நிற்பர். அவர்கள் அதீத மரியாதைகளையும், கீழ்ப்படிதலையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருப்பர். தியாகுத் தோழர் அதற்கு நேர்மாறானவர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுக முடியும், அவரிடம் இயல்பாக பேசவும் முடியும், இயல்பாகப் பழகவும் முடியும். பொதுவாக தனிநபர்களை ஜனநாயகர் என்று குறிப்பிடுவதை நான் தவறாகவே கருதுகிறேன். ஏனெனில் ஜனநாயகம் என்பது தனி நபர் சம்மந்தப்பட்டது அல்ல, தனிநபரால் கட்டமைக்கப்படுவதும் அல்ல. ஒட்டு மொத்த சமூகத்தால் மட்டுமே ஜனநாயகத்தை உருவாக்கமுடியும். ஆனாலும் கூட தியாகு தோழரை எல்லா சிறந்த பண்புகளையும் உடைய ஜனநாயகன் என்று சொன்னாலும் தகும்.

எனது எழுத்துக்களில் அயோக்கியர்களை விமர்சிக்கும் போது நான் அவனே இவனே என்று கூட திட்டுவதுண்டு, நான் எக்காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் தியாகு தோழர் அப்படி கிடையாது. எதிரிகளைக் கூட பெரும்பாலும் அவர் ஒருமையில் அழைக்கமாட்டார். தனது பேரக்குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் அவர் ஒருமையில் அழைத்து நான் பார்த்ததில்லை. யாரையும் அவர் எடுத்தெறிஞ்சு பேசியதையும் நான் பார்த்ததில்லை. வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல, வீட்டுக்கு உள்ளேயும் கூட அவர் தன் துணைவியாரை அவங்க இவங்கண்ணு தான் சொல்லுவார்.

தியாகு தோழரை விமர்சனம் செய்தாலோ, இல்லை அவரிடம் ஏதாவது புதிய பரிந்துரைகள் செய்தாலோ அவர் முகம் சுளிக்கமாட்டார். முதலில் அதை காது கொடுத்து கேட்பார். சில சமயங்களில் விவாதங்களால் நேரம் தான் விரயம் எனப்படும் வேளைகளில் அவர் நமது விமர்சனங்களை “கருதிப் பார்க்கிறேன்”, “கருத்தில் கொள்கிறேன்” என்று சொல்லும் அளவுக்குப் பண்பாளராய் நடந்து கொள்வார்.

தியாகு தோழர் அபாரமான நினைவாற்றல் கொண்டவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களையெல்லாம் கூட நேற்று நடந்தது போல விலாவாரியாக கதை போல சொல்வார். இது போல அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

தியாகு தோழர் வீட்டு வேலைகளை இழிவாகப் பார்க்க மாட்டார். தோழர் சமையல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுவேலைகளை செய்வதையும் நான் நேரிலே பார்த்துள்ளேன். சிறையில் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் போது சமையல் செய்ய கற்றுக் கொண்டதாக தோழர் கூறியிருக்கிறார். தியாகு தோழர் கோடம்பாக்கத்தில் இருக்கும் போது நான் வேலை நிமித்தமாக தோழர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது ஈழத் தோழர் ஆறுமுகம் கோபாலும் தியாகு தோழருடன் தங்கியிருந்தார். ஈழத்தமிழில் அவர் கதைக்கக் கேட்டது இனிமை. எனக்கு ஈழத்தமிழ் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தியாகு தோழர் சுவையான தக்காளி சாதம்  செய்து எங்கள் இருவருக்கும் அவரே பரிமாறினார். அன்று நான் தியாகு தோழரிடம் கேட்டேன். “தோழர் நம்ம நாட்டுல ஏற்கெனவே கம்யூனிசம் வந்துருச்சுண்ணு வெச்சுக்குவோம், அப்போ நீங்க என்ன வேலை பாப்பீங்க, ஒங்களுக்கு என்ன வேலை பார்க்க விருப்பம்”ணு கேட்டிருந்தேன். தியாகு தோழர் அதற்கு ஆசிரியர் வேலை பார்ப்பேன்”ணு பதிலளித்தார். இந்த கேள்வியை எல்லா கம்யூனிஸ்டுகளிடமும் கேட்க எனக்கு ஆசையாய் இருக்கும்.

தியாகு தோழர் சமைத்த சாம்பார் சாதத்தையும் நான் சாப்பிட்டிருக்கிறேன். தியாகு தோழர் கீழ்க்கட்டளையில் இருந்தபோது அவர் கையாலே அவித்த சோளக்கருதை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்ததை என்றுமே மறக்கமுடியாது. எனக்கு சோளத்தட்டையில் உள்ள சாறும் பிடிக்குமென்பதால் நான் சோளத்தட்டையையும் தின்றுவிட்டேன். சோளக்கருது என்றால் எனக்கு நிரம்ப பிடிக்கும்.

(தொடரும்)


Wednesday, August 27, 2025

ஹெகலின் பிறந்த நாள்

இயங்கியலின் தந்தையான நமதருமை ஹெகலுக்கு 325வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤

எல்லா மொழிகளும் தோல்வியுற்றன ஹெகலின் முன்...

தம் கண்களைத் தாழ்த்தின ஹெகலின் முன்...

அவரின் சிந்தனா முறைக்கு முன், அவரின் இயங்கியலுக்கு முன்...

ஓவியம், சிற்பம் என மாந்தரின் எல்லா நிலையான பிம்பங்களும்

ஹெகலிடம் முறையிட்டன விடுதலைக்காக...

ஓ அன்பனே ஹெகல் எங்களை விடுவி!

எங்கள் தளைகளை உடை!

நாங்கள் இயங்குருவாகிறோம்!

All Languages failed before Hegel....

their eyes lowered before Hegel...

before his thought process...

before his dialectics...

All the static impressions of humans;

paintings, sculptures etc.... cried to Hegel for freedom,

O dear Hegel free us!!... shatter our fetters!

Let us be the becoming...

சிறையில் பூத்த செம்மலர் (6)

 

தியாகு தோழர் சிறப்பாசிரியராகவும், கனடாவில் வசிக்கும் ஈழத் தோழர் ஆறுமுகம் கோபால் ஆசிரியராகவும் ஒருங்கிணைந்து, 2020 ஜூலை மாதத்திலிருந்து ஈழத்தமிழர்களுக்கான உரிமைக் குரலாக “ஆபேல்” என்ற மின்னிதழை வெளியிட முடிவுசெய்தனர். மாதமிருமுறை வெளிவரும் இருமொழியேடான “ஆபேல்” மின்னிதழின் வடிவமைப்பாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். 2022 ஜூலை வரை ஆபேல் மின்னிதழ் எங்களால் வெளியிடப்பட்டது.

சூழலியல் பாதுகாப்புக்காகவும், சூழலியல் உரிமைகளுக்காகவும் சிறப்பாக செயல்படும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வுக் கூட்டத்தில் நான் இருமுறை பங்கேற்றுள்ளேன்.

2024 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு பொதுமேடை சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் “வாக்குப்பதிவு எந்திரமும், தேர்தல் ஜனநாயகமும்” என்ற தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு மின்னணு வாக்கு எந்திரம் (EVM)  குறித்து என் கருத்துக்களை பதிவுசெய்ததோடு ஜனநாயகமான தேர்தலை உறுதிசெய்ய மற்ற நாடுகளைப் போல் நாமும் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பவேண்டியது மிக மிக அவசியம் எனவும் வலியுறுத்தினேன்.

2024 ஏப்ரல் 5 அல்-குத்ஸ் தினத்தன்று எஸ்டிபிஐ இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைத்த பாலஸ்தீன ஆதரவு நாள் நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசியது மறக்க முடியாத அனுபவம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-இந்தியாக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு பொதுமேடை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த வாக்கு சேர்க்கும் பரப்புரை இயக்கத்தில் நானும் பங்கேற்றேன். பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் நாங்கள் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் அளித்தும், உரைகளாற்றியும் திமுகவுக்கு வாக்குகளைச் சேர்த்தோம்.

2024 நவம்பர் 27 காலை சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தியாகு தோழர், மகிழன் தோழர், மதியவன் தோழர், தேவதாஸ் தோழர் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். நாங்கள் தமிழ் மக்கள் உரிமை முன்னணியை அறிவித்து அறிமுகம் செய்தோம். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம், தமிழத் தேச மார்க்சியக் கழகம் ஆகிய மூன்று இயக்கங்கள் கூடி உருவானதே தமிழ் மக்கள் உரிமை முன்னணி. தமிழ்நாடு தழுவிய அரசியல் இயக்கமாக தமிழ் மக்கள் உரிமை முன்னணியை தொடங்கியதாகவும் முன்னணியின் தோழர்கள் நாங்கள் அறிவித்தோம். அதே நாள் மாலை கொளத்தூரில் ஒருங்கிணைக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்றதையும் மறக்கவே முடியாது.

2024 டிசம்பர் 25 வெண்மணித் தியாகிகள் தினத்தன்று வெண்மணி சென்று அஞ்சலி செலுத்தியதையும் ஒரு நாளும் மறக்கவே முடியாது.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை எல்லாம் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் பதிவுசெய்வதை வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே செய்வதாகக் கருதவேண்டியதில்லை; அவை ஆவணப்படுத்தலுக்கும், பரப்புரைக்கும், கவன ஈர்த்தலுக்கும், மிகவும் அவசியமானவையே என்று தான் நான் கருதுகிறேன். ஆனாலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது எனக்கு அந்த நினைப்பே இருக்காது. முதலில் மொபைலை நான் கையில் வைத்திருக்கவே மாட்டேன். அதனால் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் படமெடுத்து சமூக வலைதளங்களில் போடும் பழக்கம் இதுவரை எனக்குக் கிடையாது.

(தொடரும்)


Tuesday, August 26, 2025

சிறையில் பூத்த செம்மலர் (5)


2019 நவம்பர் 7 அன்று ததேவி இயக்கத்தின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்ட நவம்பர் புரட்சி தினக் கருத்தரங்கத்தில் “அன்றும் இன்றும் புரட்சி” என்ற தலைப்பில் நான் உரையாடினேன்.

2019 டிசம்பர் 19 அன்று வள்ளுவர்க்கோட்டத்தில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தில் த.தே.வி. இயக்கத்தின் சார்பில் நானும் கலந்துகொண்டு பேசினேன். சிஏஏவுக்கு எதிரான முன்னணியைக் கட்டமைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். அதற்கு பின் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களிலும், ஷாகின்பாக் போராட்டங்களில் இயக்கத் தோழர்களுடன் நானும் பங்கேற்றேன்.

அதற்கு பின் 2020 ஜனவரியில் குடியுரிமைப் பரப்புரை இயக்கத்தில் எங்கள் இயக்கத் தோழர்களுடன் நானும் பங்குவகித்தேன். பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து நமக்கு அவசியம் தமிழ்க் குடியுரிமை வேண்டும் என்ற விழிப்புணர்வை நாங்கள் உருவாக்கினோம்.

அதற்கு பின் கொரோனா தாக்கம் ஏற்பட்டதால் த.தே.வி இயக்கத்தின் சார்பில் ஸூம் இணையவழி வகுப்புகள் ஒருனிணைக்கப்பட்டன. தியாகு தோழர் என்னை சூழலியல் வகுப்புகள் எடுக்குமாறு சொன்னார். ஓர் உயிரியல் மாணவராக சூழலியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் நான்  உணர்ந்திருந்தால் என்னால் அந்த கோரிக்கையை மறுக்கமுடியவில்லை ஆகையால் வாரா வாரம் சூழலியல் இணைய வழித் தொடர் வகுப்புகளை எடுத்தேன். தியாகு தோழர் சூழலியல் வகுப்புகளைக் கட்டுரைகளாகவும் எழுதச் சொல்லியிருந்தார். நான் எழுதிய சூழலியல் கட்டுரைகளை உரிமைத் தமிழ்த்தேசம் இதழிலும் வெளியிட்டோம். அதனுடன் டாலருக்கு வாந்த வாழ்வு என்ற தொடர்க் கட்டுரையையும், கியூபாவின் புரட்சிப் பெண்கள் என்ற தொடர் கட்டுரையையும், நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் என்ற தொடர்க் கட்டுரையையும் எழுதிவந்தேன்.

தியாகு தோழர் சூழலியல் விழிப்புணர்வுக்காக “சூழல் அரண்” என்ற அரங்கை உருவாக்கிப் பணிபுரிய சொன்னார். ஆரம்பத்தில் என்னால் மறுக்கமுடியவில்லை என்பதால் முகநூலில் சூழல் அரண் பக்கத்தை உருவாக்கி தொடர்ந்து பதிவிட்டும் வந்தேன். அதற்கு பிறகு தோழர் சூழலியல் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து எழுத சொன்னார். அமைப்புக் கூட்டத்தில் சூழல் அரண் குறித்த கேள்வி வரும்போது என்னால் சூழல் அரணில் தொடர்ந்து செயல்படமுடியாது தோழர். நீங்க சொன்னதுக்காக தான் சூழலியல் வகுப்புகளை எடுத்தேன், சூழலியல் கட்டுரைகளையும் எழுதினேன் தோழர். இதுக்கு மேல் என்னால் முடியாது. எனக்கு அது மன அழுத்தத்தைத் தருது என்றும் சொல்லிவிட்டேன்.

நான் எழுதிய கட்டுரைகளை “சூழலியல் அடிப்படைகள்” என்ற தலைப்பில் நூலக்கவேண்டும் என்று தியாகு தோழர் சொல்லியிருந்தார். நானும் அவற்றைத் தொகுத்து தோழருக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு நான் எழுதிய மூன்று தொடர்க் கட்டுரைகளையுமே நூலாக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் கூட அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதால் நான் எழுதிய “டாலருக்கு வந்த வாழ்வு” என்ற தொடர் கட்டுரையை நூலாக்கவேண்டும் என்பது தான் எனது விருப்பமாக இருந்தது. நான் அதை தொகுத்தி எழுதி ஓராண்டிற்கும் மேல் ஆகியும் விட்டது. ஆனாலும் தோழர் சூழலியல் அடிப்படைகள் புத்தகத்தையே வெளியிட நினைத்தார். தியாகு தோழர் பெரும்பாலும் என்னிடம் அதிர்ந்து பேசியதே கிடையாது. ஒரு முறை ஃபோனில் மட்டுமே என்னை அதட்டிப்பேசினார். எப்போது என்றால் நான் “டாலருக்கு வந்த வாழ்வு” கட்டுரைகளை நூலாக வெளியிடுவதைப் பற்றி கேட்ட போது தான் அப்படி அதட்டிப் பேசினார். அதனால் அதற்கு பின் நான் அந்த பேச்சையே எடுக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் ஆளுநர் முற்றுகைப் போராட்டத்தின் போது சைதாப்பேட்டையில் நாங்கள் சிறைப்படுத்தப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட போது தோழர்கள் அதையே பரப்புரைக்கான மேடையாகவும் பயன்படுத்திக் கொண்டனர். அதுவே சூழலியல் அடிப்படைகள் நூல் அறிமுக நிகழ்வாகவும் மாறியது.

டாலருக்கு வந்த வாழ்வு தொடர்க்கட்டுரைகளை நான் விடைகொடு டாலர் என்ற தலைப்பில் புத்தகமாக தொகுத்திருந்தேன். டாலர் ஏகாதிபத்தியத்தைப் பற்றி எனது புத்தகம் பேசும் கருத்துக்களை தமிழ்நாடு, இந்திய அளவில் இதுவரை யாரும் எழுதவில்லை. ஒப்பீட்டளவில் சூழலியல் அடிப்படைகள் நூல், விடைகொடு டாலர் நூலை விட மிகவும் பெரியது. அதை விட இதற்கு செலவு குறைவு தான். அது அச்சுக்கு வராதது எனக்கு பெருங்கவலையும், மனச்சோர்வையும் அளித்தது. கடைசியில் 2021 டிசம்பரில் அமேசான் கிண்டிலில் நான் எழுதிய மூன்று புத்தகங்களையும் வெளியிட்டேன்.

புத்தகக் கண்காட்சிகள் ஆண்டு தோரும் வரும், போகும் ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. என்னால் புத்தகத்தை வாங்கவும் முடியாது, நான் எழுதியதை புத்தகமாக வெளியிடவும் முடியாது. இருந்தாலும் கூட புத்தக உலகிலிருந்து அந்நியமாக்கப்பட்ட மார்க்சிய எழுத்தாளராக நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.

(தொடரும்)    

Monday, August 25, 2025

சிறையில் பூத்த செம்மலர் (4)

 

எஸ்.எஸ்.இ.ஆர் (Society for social and economic research) அமைப்பும்,  நாலெட்ஜ் காமன்ஸ் (Knowledge commons) அமைப்பும் இணைந்து ஒருங்கிணைக்கும் நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை நான் முகநூலில் பார்த்தேன். அதில் கலந்துகொள்ளவேண்டும் என்று நான் அதிக ஆர்வத்துடன் இருந்ததால் விண்ணப்பித்திருந்தேன். பயிற்சியில் கலந்துகொள்ள நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், 2019 செப்ரம்பர் 21 – அக்டோபர் 4 வரை ஹிமாச்சல் பிரதேசத்தின் நக்வெய்னில் பயிற்சி வகுப்புகள் நிகழும் என்ற மின்னஞ்சலையும் பெற்றேன். அது வேறொரு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அதில் கலந்துகொள்ள தியாகு தோழர் என்னை அனுமதிப்பாரா? மாட்டாரா? என்று எனக்கு தோழரிடம் கேட்கவே தயக்கமாக இருந்தது. அந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள டெபாசிட் தொகையும் கட்டவேண்டியிருந்தது அப்போது என்னிடம் காசில்லை. நான் என் அக்கா அஜந்தா (எ) வால்காவிடம் கேட்டேன். அக்கா தோழரிடம் சொல்லிவிட்டார். அப்போதெல்லாம் “தமிழர் உரிமைப்போர் முழக்கம்! சமூக நீதித் தமிழ்த்தேசம்” என்று தோழர் முழுக்கமிட்டு முடிக்கும் அறிவுக்குரல் உரைகளை காணொளியாக்கிக் கொடுத்தது அக்கா தான். தோழரை அக்கா தலைவர் என்று தான் விழிப்பார். தியாகு தோழர் நக்வெய்ன் பள்ளிக்கு நான் செல்வதற்கு முழு அனுமதி தந்ததோடு நிதியுதவியும், பயணத்துக்கான உதவியும் செஞ்சாங்க. அதன் பின் என் தம்பியும் பயணத்துக்கு நிதியுதவி அளித்தார். தோழரின் அந்த உதவியை என்னால் என்றுமே மறக்கமுடியாது.

நான் நக்வெய்ன் செல்ல சென்னை வந்தபோது மகிழன் தோழர் தான் இரண்டு தோழர்களுடன் ரயில் நிலையத்துக்கு வந்து என்னை அழைத்துச் சென்றார். அப்போது தான் நான் எங்கள் அமைப்புச் செயலாளரான மகிழன் தோழரை முதன் முதலில் சந்தித்தேன். நாங்கள் கோடம்பாக்கத்தில் அப்போதிருந்த தியாகு தோழரின் வீட்டுக்குச் சென்றோம். சுதா தோழரையும், பாரதித் தோழரையும், குழந்தைகள் லெனின், பொருநையையும் அதே நாளில் தான் நான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று மாலை தியாகு தோழர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து என்னை நக்வெயினுக்கு வழியனுப்பிவைத்தார்.

நாங்கள் பயிற்சி பெற்ற அப்பள்ளியானது முதல் நக்வெய்ன் மார்க்சியப் பள்ளி என்றே அழைக்கப்பட்டது. எங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மாணவர்களையும், சமூக செயல்பாட்டாளர்களையும் பயிற்றுவிப்பதே அப்பள்ளியின் நோக்கமாக இருந்தது.  அதன் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நியூஸ்கிளிக் நாளிதழின் ஆசிரியர் தோழர் பிரபிர் புர்க்கயஸ்தா. பாஜக அரசு தோழர் பிரபிர் புர்க்கயஸ்தாவை எந்த அடிப்படையும் இல்லாமல் சிறையிலடைத்து நியூஸ்கிளிக் நாளிதழின் செயல்பாடுகளை பொருளாதார ரீதியாக முடக்கிப் போட்டதும் அதற்குபின் இரண்டாவது மார்க்சியப் பள்ளியைத் தொடர முடியாமல் போனதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.

 நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியிலிருந்து திரும்பி வந்த நான் அக்டோபர் 7ஆம் தேதி மார்க்ஸ் நூலகத்தில் எனது பயிற்சி அனுபவத்தைத் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டேன். நக்வெய்ன் பள்ளியில் பெற்ற பாடங்கள் அனைத்தையும் “உரிமைத்தமிழ்த்தேசம்” மின்னிதழில் கட்டுரைகளாகவும் வெளியிட்டேன். என் தம்பி அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் இருந்ததால் சென்னையில் இருந்தே பணிகளைத் தொடர்ந்தேன்.

அக்டோபர் இறுதியில் தியாகு தோழர் தான் எழுதிய காசுமீரம் யாருக்கு? என்ற நூலுக்கு அணிந்துரை அளிக்குமாறு என்னிடம் கேட்டிருந்தார். காஷ்மீருக்காக குரல் கொடுக்கும் எத்தனையோ அறிஞர்கள், மூத்த தோழர்கள் இருக்கும் போது “என்னடா தோழர் நம்மளைப்போய் அணிந்துரை எழுத சொல்லுறாங்களே”ண்ணு நான் ஆச்சரியத்தால் திகைத்துப்போனேன். என்னால் முடிந்த அளவுக்கு காஷ்மீர் குறித்து புதிய தகவல்களை அளிக்கும் விதத்தில் “உறைக்கும் உண்மைகள்” என்ற தலைப்பில் அணிந்துரை எழுதிக் கொடுத்தேன். இப்போது இன்னொரு விசயத்தையும் சொல்லவேண்டும். தியாகு தோழரின் மார்க்சியம் அனா ஆவண்ணா புத்தகத்தைப் படித்த நான் அதற்கு அணிந்துரை எழுதியிருந்த தோழர் மதியவன் இரும்பொறையை அவரது பெயரை வைத்தும், அவர் அணிந்துரை எழுதிக்கொடுத்துள்ளார் என்பதை வைத்தும் மிகவும் மூத்த தோழராக இருப்பார் என்றே நினைத்திருந்தேன். அவர் தியாகுத் தோழரின் எடுத்துக்காட்டான இளைய மாணாக்கர் என்பது எனக்கு பிறகு தான் தெரிய வந்தது. இளைஞர்களை ஊக்குவிப்பதில் தியாகு தோழருக்கு நிகரில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

(தொடரும்)


Sunday, August 24, 2025

சிறையில் பூத்த செம்மலர் (3)

 

தியாகு தோழருடனான தோழமை எவ்வாறு தொடர்ந்தது என்பதைப் பத்தி இப்போது சொல்கிறேன். தியாகு தோழர்  தான் எழுதிய “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலைப் படித்துவிட்டு மதிப்பாய்வு அளிக்குமாறு என்னிடம் கேட்டிருந்தாங்க. நான் 2019 ஜுன் 3ஆம் நாள் தோழருக்கு மின்னஞ்சலில் மதிப்புரையை அனுப்பியிருந்தேன். அதற்கு பின் அதே ஜூன் மாதத்தில் 22 ஆம் நாளில் திருவாரூரில் நடைபெற்ற “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலிற்கான அறிமுகவிழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றி பேசுமாறு என்னைக் கேட்டிருந்தார். அப்போது தான் எனக்கும், எனது அக்கா அஜந்தா (எ) வால்காவுக்கும்  தியாகு தோழரை முதன் முதலாக அவரது சொந்த ஊரான திருவாருரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அந்த நூல் அறிமுக நிகழ்வில் “மார்க்சியம் அனா ஆவன்னா” நூல் குறித்து பேசினேன். தோழர் தான் எழுதிய “சுவருக்குள் சித்திரம்” புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. பிறகு அதே போல் பட்டுக்கோட்டையிலும், திருத்துரைப்பூண்டியிலும், தஞ்சாவூரிலும் நடைபெற்ற அப்போது தான் நூல் அறிமுக நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேசினேன். தியாகு தோழர் எனக்கு “கம்பிக்குள் வெளிச்சம்” புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. இந்த இரண்டு பெரிய புத்தகங்களையும் அன்பளிப்பாகப் பெற்றது உண்மையிலேயே எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான். அந்த புத்தகங்களைப் படித்த பிறகு நான் தோழரிடம் சொன்னேன் “தோழர்! இப்ப உள்ள இளைஞர்கள் இந்த புத்தகங்களைப் படிச்சா ஒங்களை தமிழ்நாட்டின் சேகுவேராண்ணு சொல்லுவாங்க தோழர்”.

 தியாகு தோழருடன் சேர்ந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வத்தில நான் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் உறுப்பினராகவும் ஆகிவிட்டேன். தோழர் தியாகுவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு இயங்கும் தமிழ்த்தேச விடுதலை இயக்கம் அமைப்பின் மாத இதழாக “தமிழ்த் தேசம்” இதழை அச்சிட்டு வெளியிட்டது. அந்த இதழ் அச்சில் வருவது இடையில் நின்று போனதாகவும் அந்த பணியை மீண்டும் தொடரவேண்டும் என்றும் அதை மின்னிதழ் வடிவிலாவது கொண்டுவரவேண்டும் எனவும் என்னிடம் கூறியிருந்தார். தோழர் “ஒரு மொழிக்கொள்கை” பற்றி ஒரு கட்டுரை எழுதுமாறு சொன்னார். நான் தாய்மொழி வழிக் கல்வியை மட்டுமே ஆதரிக்கும் நபர் என்ற அடிப்படையிலேயே  “ஒரு மொழிக்கொள்கை” பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தேன். குழந்தைகளுக்கு தாய்மொழி வழிக்கல்வியே அளிக்கவேண்டும் என்பதும் முதல் மொழியாக தாய் மொழியையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலந்தையும் பயிலவேண்டும் என்பதுமே அன்றும் இன்றும் கல்வி மொழி குறித்த எனது நிலைப்பாடாக இருந்தது.

“தமிழ்த்தேசம்” மாத இதழின் தொடர்ச்சியாகவே 2019 ஆகஸ்டு மாதத்திலிருந்து “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழைக் கொண்டு வந்தோம். தோழர் என்னை “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்ற சொன்னாங்க.

2019 ஆகஸ்ட் மாதத்தில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் க.கா.ரா. லெனின் அவர்கள் பட்டுக்கோட்டையில் “பேரழிவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில் ஒருங்கிணைத்திருந்த பயிற்சி வகுப்புகளில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரழுத்த விரிசலின் தீமைகளைப் பற்றியும், அணு உலை, அணுக் கழிவு சேமிப்பின் அபாயங்கள் குறித்தும் பாடம் எடுத்தேன். தியாகு தோழரும் அரசியல் பாடம் எடுத்தாங்க.

“உரிமைத் தமிழ்த்தேசம்” இதழை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளியிட்டோம். 2023ல் தியாகு தோழர் தாழி மடல் வாயிலாக செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். 2023 ஜூனிலிருந்து இன்று வரை தொடர்ந்து தினசரி நானும் தாழி மடலுக்காகவே எழுதி வருகிறேன். உரிமைத்தமிழ்த்தேசம்” மின்னிதழுக்காகவும், தாழி மடலுக்காகவும் இதுவரை மொத்தம் 1,500க்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

(தொடரும்)


Saturday, August 23, 2025

கொரில்லாப் போர்முறை:

 


கொரில்லா நடவடிக்கைகள், ஆயுதப் போராட்டங்கள் குறித்த சரியான மார்க்சிய நிலைப்பாட்டை புரட்சித் தலைவர் லெனினிடமிருந்து கற்றுக்கொள்வோம். கொரில்லா நடவடிக்கைக் குறித்து லெனின் பின்வருமாறு கூறுகிறார்.

கொரில்லாப் போர்முறை:

“கொரில்லா நடவடிக்கை பற்றிய கேள்வி நமது கட்சிக்கும், பெருந்திரளான தொழிலாளர்களுக்கும் மிகவும் ஆர்வத்துக்கு உரியதாக உள்ளது. இந்தக் கேள்வியை நாம் பலமுறை கையாண்டுள்ளோம், இப்போது நாம் உறுதியளித்தபடி எங்களது கருத்துக்களின் முழுமையான அறிக்கையை வழங்க முன்மொழிகிறோம்.

I

நாம் ஆரம்பத்திலிருந்தே தொடங்குவோம். போராட்ட வடிவங்கள் பற்றிய கேள்வியை ஆய்வு செய்வதில் ஒவ்வொரு மார்க்சியரும் முன்வைக்க வேண்டிய அடிப்படைக் கோரிக்கைகள் என்ன? முதலாவதாக, மார்க்சியம் இயக்கத்தை எந்த ஒரு குறிப்பிட்ட வடிவ போராட்டத்துடனும் பிணைக்கவில்லை என்பதிலிருந்து சோசலிசத்தின் அனைத்து பழமையான வடிவங்களிலிருந்தும் வேறுபடுகிறது. மார்க்சியம் மிகவும் மாறுபட்ட போராட்ட வடிவங்களை அங்கீகரிக்கிறது;

மேலும் மார்க்சியம் அவற்றை "இட்டுக்கட்டுவதில்லை", ஆனால் இயக்கத்தின் போக்கில் தாமாகவே எழும் புரட்சிகர வர்க்கங்களின் போராட்ட வடிவங்களை பொதுமைப்படுத்தி, ஒழுங்கமைத்து, விழிப்புடனான வெளிப்பாட்டை மட்டுமே அளிக்கிறது. அனைத்து சுருக்க சூத்திரங்களுக்கும் அனைத்து கோட்பாட்டு செய்முறைக் குறிப்புகளுக்கும் முற்றிலும் எதிராக மார்க்சியம், நடந்து கொண்டிருக்கும் வெகுஜனப் போராட்டத்திற்கு ஒரு கவனமான அணுகுமுறையைக் கோருகிறது, இது இயக்கம் வளரும்போது, ​​மக்களின் வர்க்க உணர்வு வளரும்போது, ​​பொருளாதார அரசியல் நெருக்கடிகள் கூர்மையாகும்போது, ​​தொடர்ந்து புதிய மிகவும் மாறுபட்ட பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்கான முறைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, மார்க்சியம் எந்த வகையான போராட்டத்தையும் நேர்மறையாக நிராகரிக்கவில்லை.

எந்த சூழ்நிலையிலும் மார்க்சியம், சாத்தியமான போராட்ட வடிவங்களுடன் மட்டுமே தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை, குறிப்பிட்ட காலகட்டத்தில் பங்கேற்பாளர்களுக்குத் தெரியாத புதிய போராட்ட வடிவங்கள், சமூக நிலைமை மாறும்போது தவிர்க்க முடியாமல் எழுகின்றன என்பதை அது அங்கீகரிக்கிறது. வேறு விதமாகச் சொன்னால், இந்த வகையில் மார்க்சியம், வெகுஜன நடைமுறையிலிருந்து கற்றுக்கொள்கிறது, மேலும் "முறைப்படுத்துபவர்கள்" கண்டுபிடித்த போராட்ட வடிவங்களை அவர்களின் ஆய்வுகளிலிருந்து தனிமைப்படுத்தி மக்களுக்குக் கற்பிக்க எந்த உரிமையும் கோரவில்லை. உதாரணமாக, சமூகப் புரட்சியின் வடிவங்களை ஆராயும்போது, ​​வரவிருக்கும் நெருக்கடி, நாம் இப்போது முன்னறிவிக்க முடியாத புதிய போராட்ட வடிவங்களை அறிமுகப்படுத்தும் என்பதை நாம் அறிவோம் - என்று காவுட்ஸ்கி கூறினார்.

இரண்டாவதாக இந்தக் கேள்வியை, குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலையிலிருந்து பிரித்துப் பார்ப்பது, இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளத் தவறியதைக் காட்டுகிறது. பொருளாதார பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில், அரசியல், தேசிய-கலாச்சார, வாழ்க்கை மற்றும் பிற நிலைமைகளில் உள்ள வேறுபாடுகளைப் பொறுத்து, பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னணிக்கு வந்து போராட்டத்தின் முக்கிய வடிவங்களாகின்றன; இத்தோடு இணைந்து, இரண்டாம் நிலை, துணை வடிவப் போராட்டங்களும் மாற்றத்திற்கு உட்படுகின்றன. குறிப்பிட்ட இயக்கத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், குறிப்பிட்ட போராட்டத்தின் தூலமான சூழ்நிலையை விரிவாக ஆராயாமல், எந்தவொரு குறிப்பிட்ட போராட்ட வழிமுறையைப் பயன்படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்க முயற்சிப்பது, மார்க்சிய நிலைப்பாட்டை முற்றிலுமாக கைவிடுவதாகும்.

இந்த இரண்டு முக்கிய தத்துவார்த்த முன்மொழிவுகளின் மூலமே நாம் வழிநடத்தப்பட வேண்டும். மேற்கத்திய ஐரோப்பாவில் மார்க்சியத்தின் வரலாறு, மேலே சொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் எண்ணற்ற உதாரணங்களை வழங்குகிறது. ஐரோப்பிய சமூக-ஜனநாயகம் - தற்போது நாடாளுமன்றவாதத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் போராட்டத்தின் முக்கிய வடிவங்களாகக் கருதுகிறது; அது கடந்த காலத்தில் கிளர்ச்சியை (insurrection) அங்கீகரித்தது, ரஷ்ய கேடட்கள் மற்றும் பெஸ்ஸாக்லாவ்ட்சி போன்ற முதலாளித்துவ தாராளவாதிகளின் கருத்து இருந்தபோதிலும் கூட, எதிர்காலத்தில் நிலைமைகள் மாறினால் அதை அங்கீகரிக்கத் தயாராகவும் உள்ளது .

 எழுபதுகளில் சமூக ஜனநாயகம் பொது வேலைநிறுத்தத்தை ஒரு சமூக நிவாரணியாக, முதலாளித்துவத்தை ஒரே அடியில் அரசியல் அல்லாத வழிமுறைகளால் தூக்கியெறியும் வழிமுறையாக அதை நிராகரித்தது - ஆனால் சமூக ஜனநாயகம் வெகுஜன அரசியல் வேலைநிறுத்தத்தை (குறிப்பாக 1905 இல் ரஷ்யாவின் அனுபவத்திற்குப் பிறகு) சில சூழ்நிலைகளில் அவசியமான போராட்ட முறைகளில் ஒன்றாக முழுமையாக அங்கீகரிக்கிறது. சமூக ஜனநாயகம் நாற்பதுகளில் தெரு வழியடைப்பு சண்டையை அங்கீகரித்தது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திட்டவட்டமான காரணங்களுக்காக அதை நிராகரித்தது, மேலும் பிந்தைய கருத்தைத் திருத்துவதற்கும், தெருமறிப்புச் சண்டையின் தேவையை ஒப்புக்கொள்வதற்கும் முழுமையான தயார்நிலையை வெளிப்படுத்தியது, இது மாஸ்கோவின் அனுபவத்திற்குப் பிறகு, கே.காவுட்ஸ்கியின் வார்த்தைகளில், தெருமறிப்புச் சண்டையின் புதிய தந்திரோபாயங்களைத் தொடங்கியது.”

-Lenin collected works vol 11; pp 213-215

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...