Sunday, December 31, 2023

பொம்மைகளின் புரட்சி (27):

குக்குவோட அப்பா: அதுக்கு இவ்ளோ சீக்கிரமாவா போவனும், இன்னும் இருட்டா இருக்கு பாரு, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம், நீ அதுவரைக்கும் தூங்கிக்கிட்டுரு, நானே எழுப்பிவுடறேன்……

குக்கு: மாட்டேன் போ, சீக்கிரமா போனா தான் நெறைய பறவைகள பார்க்கலாம்னு நீ தான சொன்ன, இப்ப என்னடான்னா இழுத்து போத்திக்கிட்டு தூங்கிக்கிட்டு இருக்க…

குக்குவோட அப்பா: அதுக்காகவா இவ்ளோ சீக்கிரம் எழுந்துருச்ச, இப்ப பறவைகளே தூங்கிக்கிட்டுருக்குமே, அப்புறம் நாம எப்டி பார்க்கமுடியும்…

குக்கு: மணி அஞ்சரை ஆயிருச்சுப்பா, சீக்கிரமா கெளம்பு,

 குக்குவோட அப்பா: சரி இதோ எழுந்துருச்சுட்டேன்… சத்த பொறு குக்கு ஒரு அஞ்சு நிமிசத்துல பொறப்படலாம், தண்ணீ மட்டும் குடிச்சுட்டு போலாம்…

குக்கு: நான் குடிச்சுட்டேனே, சரி நான் வெளில வெயிட் பண்றேன், வந்துரு சரியா...

குக்கு வேக வேகமா கையில பறவைகளோட படங்களை எடுத்துக்கிட்டு வெளில ஓடிட்டா...

 என்ன பார்க்க நீங்க ரொம்ப தூரம் போகவேணாம், நானே உங்ககிட்ட வாறேங்குற மாதிரி செடி கொடிகளுக்கிடையே பல வண்ணங்களோட அழகு கொஞ்சும் பறவை ஒன்னு இரை தேடிக்கிட்டுருந்துச்சு...

ஹா, இவ்வளவு அழகான பறவையா, இது தான் ரெயின்போ பறவையோ, இதுக்கு பேரு என்னவா இருக்கும், சரி இப்ப படங்கள்ல தேடிப் பார்த்து கண்டுபிடிக்குறதுக்குள்ள அது பறந்துபோயிடும், அப்புறமா கண்டுபிடிக்கலாம், இப்ப விடாம அந்த பறவைய பார்ப்போம்னு ஆடாம அசையாம ஒளிவு மறைவா நின்னு குக்கு அத பார்த்துக்கிட்டுருந்தா.

அந்த பறவையோட நெத்தியிலிருந்து உச்சந்தலை, பின் கழுத்துவரை கரும்  நிற பட்டை இருந்துச்சு, அத சுத்தி பறவையோட முகத்தோட இருபக்கமும் வெளிர்பளுப்பு மஞ்சள் நிறமா இருந்துச்சு, கண்ணு கருப்பு நிறத்தில் இருந்துச்சு, கண் வளையம் சாம்பல் நிறமா இருந்துது. அதுக்கு கீழ கண்ண சுத்தி மை போட்ட மாதிரி கரும் நிறப்பட்டை கழுத்து வரைக்கும் நீண்டுருந்துச்சு, கண்ணோட கரும்பட்டைக்கு கீழ உள்ள வெள்ளை நிறப்பட்டை அழகுக்கு மேலும் அழகு சேர்த்துச்சு, அந்த பறவையோட அலகு தடிமனா மேல இளஞ்சிவப்பு நிறத்துலயும் நுனி வரைக்கும் அடர் சாம்பல் நிறத்துலயும் இருந்துச்சு, அலகுக்கு கீழ தொண்டையும், கழுத்தும் வெள்ளையா இருந்துச்சு… கழுத்துக்கு கீழ மார்பகுதியும், வயிற்றுப் பகுதியும் அழகான மஞ்சள் நிறத்துல இருந்துச்சு… முதுகுப்பகுதியும் இறக்கையின் மேல் பகுதியும் வெளிர் பச்சை நிறத்துல இருந்துச்சு, இறக்கையின் கீழ் பகுதி இள நீல நிறமா இருந்துச்சு, அதில் ஓரிரு இடங்களில் வெள்ளைக் கோடுகள் காணப்பட்டுச்சு, இறக்கையோட நுனிப்பகுதி அடர் சாம்பல் நிறமா இருந்துச்சு, பறவையோட வால் குட்டியூண்டா கட்டை குட்டையா இருந்துச்சு, அந்த குட்டி வாலோட மேல் பகுதி கருப்பு நிறமாவும், கீழ்ப்பகுதி நீல நிறமாவும் இருந்துச்சு,  வாலுக்குக்கீழும், அடி வயிற்றுப்பகுதியும் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமா இருந்துச்சு… நீண்டு மெலிந்திருந்த அதன் கால்கள் வெளிர் இளஞ்சிவப்பு சாம்பல் நிறத்தில் இருந்துச்சு.

இயற்கையின் கலை வண்ணத்த எடுப்பா எடுத்துக்காட்டும் அந்த பறவை யாருன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்

(தொடரும்)

 

 

 

Saturday, December 30, 2023

சூதாடும் காட்டேரி (93):

 

ஒப்பந்த தேதியிலிருந்து வட்டி சேர்வது நின்றுவிடும்:

ஒப்பந்த தேதியிலிருந்தோ அல்லது பிணையமளித்தவர் கடன் தொகையை கட்டியபிறகோ பிணையத்தைப் பெற்றவர் சொத்தை திருப்பிக்கொடுக்க தவறுவாறெனில் கடன் தொகையைக் கட்டிய தேதியிலிருந்து வட்டி சேருவது நின்றுவிடும் என யாக்ஞவல்கிய ஸ்மிருதியில் (II-63) கூறப்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர் தன்வசப்படுத்திய சொத்தை சட்டவிரோதமாக வைத்திருப்பதன் மூலம் பலனடையலாம் என்ற நோக்கில் கடனாளியின் பிணைய மீட்பை தாமதப்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் பிணையம் கொடுத்தவர், பெற்றவரின் உரிமைகள்:

வட்டிவீதம் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, வட்டிக்கு பதிலாக பிணையத்தை கடன் கொடுத்தவர் அனுபவிக்குமாறு கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், கடன் கொடுத்தவர் அசலை போல் இருமடங்கு தொகையை பெற்றபின்பு அவர் பிணையத்திலிருந்து பெற்ற லாபம் வட்டியை விட அதிகமாக இருக்கும் போது அவர் பிணையத்தை கடனாளியிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதே போல் பிணையத்தில் இருந்து பெற்ற லாபம் குறைவாக வட்டித்தொகையை ஈடுசெய்ய முடியாமல் போகும் போது, அசல் தொகையையும் வட்டியையும் கட்டிய பிறகு மட்டுமே கடனாளியால் பிணையத்தை மீட்கமுடியும்.

பிணையத்தைப் பெற்றவர் அதை பயன்படுத்துவதற்கும், விற்பதற்கும் உள்ள கட்டுப்பாடுகள்:

கடன் கொடுத்தவர் கடனை அடைப்பதற்கான காலக்கெடு முடிவதற்குள் பிணையமாகப் பெற்ற சொத்தை விற்பதும், பிணையமாகக் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என நாரதஸ்மிருதியிலும், தர்மகோசாவிலும் குறிபிடப்பட்டுள்ளது.

 இதே போன்ற ஒரு விதியை பிரஹஸ்பதியும் அளித்துள்ளார். அதில் வட்டித்தொகை இருமடங்காவதற்கு முன்னோ, கடனை  அடைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னோ பிணையமாக கொடுக்கப்பட்ட பொருளை தவறாக கையாளக்கூடாது, அவ்வாறு செய்ய முயற்சிப்பாரெனில் தடுக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதியின் விளைவாக திரட்டப்படும் வட்டி அசல்தொகைக்கு சமமாகும் காலத்துடன் பிணையத்தை மீட்பதற்கான 10 நாள் கால அவகாசத்திற்கு முன்பு கால வரையறை இல்லாத சாதாரண பிணையத்தை கடன் கொடுத்தவர் விற்கவோ அல்லது பிணையமாக கொடுக்கவோ முடியாது. அதே போல் ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் பிணையம் கொடுக்கப்பட்டுள்ள போது பிணைய மீட்பு தடுக்கப்பட்டுள்ள காலக்கெடு வரை கடன் கொடுத்தவர் பிணையமாகப் பெற்ற சொத்தை விற்கவோ பிணையமாகக் கொடுக்கவோ கூடாது. கடன் கொடுத்தவர் பிணையமாகக் கொடுக்கப்பட்ட சொத்துக்கு உரிமையாளராவதற்கு முன் சொத்தை விற்பாரெனில் சட்டப்படி அவர் பிணையத்தை திருப்பிக்கொடுக்காமல் குற்றமிழைத்ததால் அதற்கான கடப்பாட்டுக்கு உட்பட்டவராவர். பயனுரிமை நல்கும் பிணையமாக இருக்கும் போது பிணையத்தை மீட்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லாததால் பிணையமாகக் கொடுக்கப்பட்ட பொருளை விற்பதற்கோ அல்லது பிணையமாகக் கொடுப்பதற்கோ கடன் கொடுத்தவருக்கு உரிமை இல்லை.

(தொடரும்)

Friday, December 29, 2023

பணம் பேசுறேன் (93):

 

குலா

பப்புவா நியூ கினியாவின் மில்னே பே மாகாணத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கு முறையான பரிமாற்ற அமைப்பே குலா பரிமாற்றம் எனப்படுகிறது. இது குலா வளையம் என்றும் அழைக்கப்படுகிறது,

  ட்ரோப்ரியாண்ட் தீவுகள் முழுவதும் வளையல்கள் மற்றும் கழுத்து ஆரங்கள் ஆகியவற்றை பரிமாற்றுவதற்கான வலையமைப்பு காணப்படுகிறது. இவை குலா பரிமாற்ற முறையின் (குலா வளையம்) ஒரு பகுதியாகவும், இந்த பரிமாற்ற முறை அரசியல் அதிகாரத்துடனும் தெளிவாக இணைக்கப்பட்டும் உள்ளது.

குலா வளையமானது ட்ரோப்ரியாண்ட் தீவுகள் உட்பட மாசிம் தீவுக்கூட்டத்தின் 18 தீவு சமூகங்களை உள்ளடக்கியது இதில் ஆயிரக்கணக்கான தனிநபர்கள் பங்கேற்கின்றனர். பங்கேற்பாளர்கள் சில நேரங்களில் குலா மதிப்புமிக்க பொருட்களான சிவப்பு ஓடு-வட்டு கழுத்து ஆரங்களை (வெகுன் அல்லது சோலவா) பரிமாறிக்கொள்வதற்காக படகுகளில் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்கிறார்கள், அவை வடக்கே வர்த்தகம் செய்யப்படும் (வளையத்தை கடிகார திசையில் வட்டமிடுதல்) மற்றும் வெள்ளை ஓட்டு வளையல்கள் (மவாலி) தெற்கு திசையில் வர்த்தகம் செய்யப்படுகிறது (எதிர் கடிகார திசையில் சுற்றல்). தொடக்கப் பரிசு ஒரு கை வளையல் என்றால், இறுதிப் பரிசு ஒரு கழுத்து ஆரமாக இருக்க வேண்டும். ஆரம்ப பரிசு கழுத்தாரமாக இருந்தால் இறுதிப்பரிசு கை வளையல்களாக இருக்கவேண்டும். குலா மதிப்புமிக்க பொருட்களின் பரிமாற்றம் கிம்வாலி எனப்படும் பிற பொருட்களின் பண்டமாற்று வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பதற்கான விதிமுறைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும். ட்ரோப்ரியான்ட் தீவுகளில் பரிவர்த்தனை தலைவர்களின் ஏகபோகமாக உள்ளது, டோபுவில் 100 முதல் 150 பேர் வரை குலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குலா மதிப்புமிக்க பொருட்கள் அனைத்துமே ஒருவரின் சமூக அந்தஸ்து மற்றும் கௌரவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே வர்த்தகம் செய்யப்படும் அத்தியாவசிய பயன்பாடாற்ற பொருட்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கவனமாக பரிந்துரைக்கப்பட்ட பழக்கவழக்கங்கள், மரபுகளை கொண்ட விழாக்கள் இந்த பரிமாற்றங்களை சூழ்ந்துள்ளன, இது பரிமாற்றத்தில் ஈடுபடும் இருதரப்பினரிடையே வலுவான, சிறந்த வாழ்நாள் உறவுகளை நிறுவுகிறது (கராய்டாயு, "பங்காளிகள்"). அத்தகைய கூட்டாண்மை விருந்தோம்பல், பாதுகாப்பு மற்றும் உதவி போன்ற வலுவான பரஸ்பர கடமைகளை உள்ளடக்கியது. முயுவின் கூற்றுப்படி, ஒரு நல்ல குல உறவு "திருமணம் போல்" இருக்க வேண்டும். இதேபோல், "ஒருமுறை குலாவில் என்றால், எப்போதும் குலாவில் தான்." என பப்புவாவைச் சுற்றி ஒரு பழமொழி உள்ளது.

குலா பரிமாற்றத்தில் கொடுப்பவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் செயலானது, மிகைப்படுத்தப்பட்ட அடக்கத்துடன் சேர்ந்து, கொடுக்கப்பட்டவற்றின் மதிப்பை தீவிரமாகக் குறைக்கிறது என மார்செல் மௌஸ் கூறியுள்ளார் (Marcel Mauss (1979), Sociología y Antropología, Ed. Tecnos, Madrid, பக்கம். 181)

குலாவின் மதிப்புமிக்க பொருட்கள் பெறுபவர்களின் கைகளில் நீண்ட காலம் தங்காது; மாறாக, அவை குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்ற கூட்டாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும், இதனால் அவை வளையத்தைச் சுற்றி தொடர்ந்து வட்டமிட வேண்டும்.

 (தொடரும்)

 

 

 

 

 

 

Thursday, December 28, 2023

சூதாடும் காட்டேரி (92):

 

சில சந்தர்ப்பங்களில் பிணையத்தை மீட்கும் உரிமை இழக்கப்படாது:

சரித்ரா பிணையத்துடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வட்டித்தொகையுடன் கடன் தொகையையும் கட்டிவிடவேண்டும் எனவும் தனிப்பட்ட இயங்குடைமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கடனில், அவர் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என யாக்ஞவல்கியா கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிணையம் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும், வட்டித்தொகை அசல் தொகைக்கு சமமாகும் சந்தர்ப்பத்திலும், காலவரையறை முடிவதற்குள் பிணையத்தை மீட்பதற்கான பொது விதிக்கு விலக்காக காலவரையறை முடிந்தபோதும் பிணையமானது சரித்ரா வகையினதாக இருக்கும்போது, மீட்புரிமை குறித்து மேற்கூறிய விதியின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனளித்தவரின் நற்குணங்களின் மீது முழு நம்பிக்கையுடன் குறைந்த தொகையை கடனாகப் பெறும் கடனாளி உயர்ந்த மதிப்புடைய பொருளை பிணையமாக அளிக்கும் போது அதுவே சரித்ரா பிணையம் ஆகும்  என மிதாக்ஷரா விளக்கம் அளித்துள்ளார். மேற்கூறிய விதி இதற்கு முற்றிலும் முரணான சந்தர்ப்பத்திற்கும் பொருந்தும், அதாவது கடனாளியின் நற்குணங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து கடனளிப்பவர் பெருந்தொகையை கடனாகக் கொடுக்கும் போதும் மதிப்பு குறைந்த பொருளை பிணையமாக பெறும் சந்தர்ப்பத்திலும் அவ்விதி பொருந்தும். அத்தகைய சந்தர்ப்பத்தில் கடனை நிறைவு செய்ய பிணையமாகக் கொடுத்தப் பொருளையே கடனளித்தவர் வைத்துக்கொள்ளலாம் என கடனாளி கூறமுடியாது. அத்தகைய சந்தர்ப்பத்தில் கடனளித்தவரின் அசல், வட்டிக்கு சாதகமாக அரசர் ஆணையை அறிவிக்கவேண்டும். கடன் தொகையிலிருந்து பிணையத்தின் மதிப்பை கழித்தபின் மீதமுள்ள தொகையையும் கடனாளியிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் இவ்விதி குறிப்பிடுகிறது.

பிணையம் சரித்ரா வகையினதாக இருக்கும் போது பிணையத்தை மீட்கும் உரிமை இழப்பு குறித்த  பொதுவிதியின் மேற்கூறிய விதிவிலக்கு தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியதை விட பொருந்தாத அளவில் அதிகமாக  பெறுவதை  தவிர்க்கும் விதமான நவீன தத்துவமான அநீதியான செல்வசெழிப்பிலிருந்து எடுக்கப்பட்டதே. கடனாளியை கடன் கொடுத்தவர் சுரண்டாமல் பாதுகாக்கவேண்டும் என்றும், அதே போல் கடன் கொடுத்தவர் கடனாளியால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவேண்டும் என்றும் பண்டைய சட்டமியற்றுபவர்கள் கவனம் செலுத்தியுள்ளதை இந்த விதி விளக்குவதாக ரமா ஜோய்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிணையம் ஒப்படைக்கப்பட்டவரின் மீட்பை அனுமதிக்கவேண்டிய கடமை:

கடனாளி பிணையத்தை மீட்க விரும்பும் போது அதை திருப்பி கொடுக்கவேண்டியது கடன் கொடுத்தவரின் கடமை என யாக்ஞவல்கியா ஸ்மிருதியில் (II-62) குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிணையத்தைத் திருப்பிக் கொடுக்கத் தவறுவாறெனில் அவர் திருட்டைப் போன்ற குற்றம் இழைத்தவராவார். கடன் கொடுத்தவர் வீட்டில் இல்லாதபோதும் கடனாளி தான் கட்ட வேண்டிய கடன் தொகையை அவர் வீட்டு உறுப்பினரிடம் அடைத்த பின் தானளித்த பிணையத்தை மீட்டுக்கொள்ளலாம். கடன் அடைக்கப்பட்ட பின்பு பிணையம் பெற்றவர் தரப்பிலிருந்து சொத்தை திருப்பிக்கொடுக்க வேண்டிய கடமையை இந்த விதி உருவாக்கியுள்ளது.

 பயனுரிமை நல்கும் பிணையத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் மீட்பதற்கு உரிமை இல்லை:

கடனை அடைத்த பின்பு பிணையத்தை மீட்பது குறித்த பொதுவிதிக்கு விலக்கும் பிரஹஸ்பதியால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீடோ, வயலோ அடமானம் வைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் இருக்கும் போது, எவ்வளவு காலம் அடமானம் வைக்கப்படும் என்ற குறிப்பிட்ட கால வரம்பும் விளக்கப்பட்டிருக்கும் போது அந்த கால வரம்பிற்கு முன்னர் கடனாளியால் தன்னுடைய பிணையத்தை மீட்கமுடியாது. அந்த காலவரம்பிற்கு முன்னரே கடன் கொடுத்தவரும் கடனாளியை கடனை அடைக்குமாறு நிர்ப்பந்திக்கமுடியாது. இரு தரப்பினரும் அந்த காலவரம்பிற்கு பிறகு தங்கள் விருப்பம் போல் அவற்றை செய்துகொள்ளலாம் அல்லது பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் அந்த கால வரம்பிற்கு முன்னரே செய்துகொள்ளலாம். மேற்கூறிய விதியின் படி கடனை திரும்ப வசூல் செய்வதற்கு பாதுகாப்பாக பெறப்படும் பயனுரிமை நல்கும் பிணையத்தில் கடனாளி தன் பிணையத்தை மீட்பதற்கான உரிமையையும், கடன் கொடுத்தவரின் கடனை அடைக்க கோருவதற்கான உரிமையையும் குறிப்பிட்ட காலவரம்பு முடிந்த பின்பு மட்டுமே செயலுக்குவரும்.

(தொடரும்)

Wednesday, December 27, 2023

பணம் பேசுறேன் (92):

 

கோஹா

 நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரிடையேக் காணப்படும் பரிசு வழங்கும் நிகழ்வான கோஹாவை உந்துதலாகக் கொண்டு நியூசிலாந்தில் கோஹா பந்தல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோஹா பந்தல்கள் பரிசுகளின் இடமாகவும், மனித நேயம், காருண்யம், பகிர்தலுக்கான இடமாகவும் உள்ளது. கோஹா பந்தல்கள் ஸ்டோக்ஸ் பள்ளத்தாக்கு சமூகத்தின் முன்முயற்சியாகும், 2012 முதல் கோஹா பந்தல்களின் வலையமைப்பு உள்ளூர் சமூகங்களில் வறுமையின் எதிர்மறையான விளைவுகளைத் தணிக்க உதவும் வகையில் வளர்ந்துள்ளது. முதலாவது கோஹா பந்தல் நியூசிலாந்தின் வாங்கனுயில் ஷெரான் சன்னெக்ஸ் மற்றும் மேகன் மனுகா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கோஹா பந்தலிலிருந்து எடுக்கப்படும் எதற்கும் கட்டணம் வசூலிக்கப்படாது. தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவு,  துணிமணிகள் எப்போதுமே அங்கு கிடைக்கும்.

கோஹா பந்தல்கள் மக்களுக்கு நன்கொடையாக ஆடைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை இலவசமாக வழங்கி மக்களுக்கு உதவும் இடங்களாக உள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையானதை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம் தங்களிடம் உபரியாக அல்லது தேவையாக இல்லாத உடைகள், வீட்டுப்பொருட்களை கோஹா பந்தலுக்கு நன் கொடையாக வழங்குகிறார்கள். இதை தேவைப்படுபவர்கள் அன்பளிப்புகளாக, பரிசுகளாக எடுத்துக்கொள்கின்றனர்.

கோஹா பந்தல் ஒரு பதிவுசெய்யப்பட்ட உணவு வங்கியாகவும் செயல்படுகிறது. தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து அவசரகால உணவுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் புதிய விளைபொருட்களை வழங்குவதற்கு சமூகத் தோட்டங்களையும் வைத்துள்ளனர், கோஹா பந்தல் வெள்ளிக்கிழமைகளில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் மதியம் 12 மணிக்கு அனைவருக்கும் இலவச உணவையும் வழங்குகிறது, தேவைப்படும் குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வீடற்றவர்களுக்கு மதிய உணவை வழங்குகிறது.

பள்ளிக் காலத்தில் எஞ்சியிருக்கும் பள்ளி மதிய உணவுகளையும் தோட்டத்தில் இருந்து காய்கறிகளையும் வழங்குகிறார்கள். பள்ளி பருவம் இல்லாத போது, தேவைப்படும் மக்களுக்கு புதிய பொருட்களை வழங்கப்படுகிறது.

கோஹா பந்தல்களில் உள்ள வாய்ப்புக் கடை வார நாட்களில் திறந்திருக்கும், மேலும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை நன்கொடையாகப் பெறலாம். பொம்மைகள், புத்தகங்கள், உடைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை இலவசமாக வாங்கலாம் அல்லது பொருட்களை நன்கொடையாகவும் வழங்கலாம்.

கோஹா பந்தல்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும், நன்கொடைகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் வாய்ப்புக் கடை செவ்வாய், புதன் மற்றும் வியாழன்களில் காலை 10-2 மணி வரை திறந்திருக்கும். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடுவதற்கும் நன்கொடையாகப் பெற்ற பொருட்களைப் பெறுவதற்கும் திறந்திருக்கும். கோஹா பந்தலிலிருந்து பெறுபவர்களும் தங்களால் இயன்றபோது கொடுக்கிறார்கள், நிச்சயமாக, கோஹா பந்தல்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள அமைப்பாக உள்ளது.

 (தொடரும்)

 

 

 

 

Tuesday, December 26, 2023

சூதாடும் காட்டேரி (91):

 

பிணையங்களை மீட்பதற்கான நிபந்தனைகள்:

யாக்ஞவல்கியாவின் விதி இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது; வட்டியை முறையாகக் கட்டிக்கொண்டிருக்கும் போது கடனாளியின் நலன்களை பாதுகாப்பதையும், வட்டித்தொகை அசல் தொகைக்கு சமமாகும் போது பிணையத்தை மீட்கப்படுவதை தவிர்ப்பதன் மூலம் கடன் கொடுத்தவரின் நலன்களையும் பாதுகாப்பதயும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

1.  பிணையம் கிரிட்டகாலா வகையாக இருக்கும் போது மீட்பு:

பிணையம் ஒரு கால வரைமுறையுடன் கொடுக்கப்பட்டிருக்கும் போது கடனாளி அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைக்கவேண்டும். அவர் கடனை அடைக்கத் தவறுவாறெனில் கடனளித்தவர் பிணையமாகக் கொடுக்கப்பட்ட சொத்தின் உரிமையாளராகிவிடுவார்.

2.  பிணையம் பயனுரிமை நல்கும் வகையாக இருக்கும் போது மீட்பு:

யாக்ஞவல்கியாவின் விதியின் படி ஒரு பயனுரிமை நல்கும் பிணையம் ஒரு போதும் இல்லாமல் போகாது. ஆகையால் கடனாளி தன் விருப்பம் போல் அசல் தொகையில் கட்டவேண்டிய நிலுவைத்தொகையை கட்டிவிட்டு எப்போது வேண்டுமானாலும் பிணையமாகக் கொடுத்த சொத்தை மீட்டுக் கொள்ளலாம். சப்ரோதாயா போக்யவதி வகை பிணையம் தானாகவே மீட்கப்படக்கூடியது, ஏனெனில் இந்த வகைப் பிணையத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அசலாகவும், மற்றொரு பகுதியை வட்டியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதால் அசல் தொகை முழுவதும் கட்டப்பட்டவுடனே தானாகவே பிணையம் மீட்கப்படக்கூடியதாகிவிடும். வருடா வருடம் கடனின் அளவு குறைந்துகொண்டே செல்வதால் இத்தகைய பிணையம் ஷயாவதி (மதிப்பில் குறையும் பிணையம்) எனப்படுகிறது. பிரஹஸ்பதியும் தானாகவே மீட்கப்படக்கூடிய இந்த பிணையம் குறித்துக் கூறியுள்ளார். ஆனால் அபிரதய போக்யாவில் பிணையத்திலிருந்து கிடைக்கும் லாபம் வட்டியாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் கடனாளி அசல்தொகையைக் கட்டிவிட்டு பிணையமாகக் கொடுத்த அல்லது அடகுவைத்த சொத்தை மீட்கவேண்டும். இத்தகைய பிணையத்தை மீட்பதற்கு காலவரையறை ஏதும் இல்லை என யாக்ஞவல்கியா கூறியுள்ளார். ஒரு முறை அடமானம் வைத்தால் அது எப்போதுமே அடமானமாகவே இருக்கும் என்ற தத்துவம் பயனுரிமை நல்கு பிணையத்தில் பொதிந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் பிணையத்தை மீட்கும் உரிமை இழக்கப்படாது:

சரிதா பிணையத்துடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வட்டித்தொகையுடன் கடன் தொகையையும் கட்டிவிடவேண்டும் எனவும் தனிப்பட்ட இயங்குடைமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கடனில், அவர் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என யாக்ஞவல்கியா கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிணையம் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும், வட்டித்தொகை அசல் தொகைக்கு சமமாகும் சந்தர்ப்பத்திலும், காலவரையறை முடிவதற்குள் பிணையத்தை மீட்பதற்கான பொது விதிக்கு விலக்காக காலவரையறை முடிந்தபோதும் பிணையமானது சரிதா வகையினதாக இருக்கும்போது மீட்புரிமை குறித்து மேற்கூறிய விதியின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Monday, December 25, 2023

பணம் பேசுறேன் (91):

 

கடோகா கொண்டாட்டத்தில் அனைவருக்கும் கவா பானம் தென்னம் சிரட்டை குவளைகளில் பகிரப்படுகிறது. நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து கவிதைகள் மற்றும் பாடல்கள் பாடுகின்றனர். கடோகாவில் சொல்லப்படும் கதைகள் (ஃபகமதாலா, ஃபகானா) ஃபுடுனாவின் வரலாற்றை விளக்கும் போர்வீரர்களின் செயல்களை விவரிக்கின்றன, இறுதியாக விருந்தினர்களுக்கு உணவளிக்கப்படுகிறது.

மானுடவியலாளர் அட்ரியானோ ஃபாவோல், மக்களின் உன்னதமான அழகியல் தேடலுக்கு கடோகா நிறைவளிப்பதாக வர்ணித்துள்ளார். ஒரு கடோகாவுக்கு தயார் செய்வதும், செயல்படுத்துவதும் குறிப்பிட்ட அழகியலுக்கான தேடலுக்கு பதிலாகிறது: "சூரியனின் முதல் வெளிர் விளக்குகளால் ஒளிரும் சிவப்பு நிற பன்றிகள் நிரம்பிய கிராம சதுக்கம், நெய்த தென்னை ஓலைகளால் நெய்யப்பட்ட கூடைகள், உள்ளூர் மைகளால் அலங்கரிக்கப்பட்ட பட்டை துணிகள் மற்றும் கடற்கரைக்கு அருகில் உயரும் துணிகளின் பதாகைகள் உள்ளூர் மக்களால் மிகவும் அழகு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பொது தலைவரால் பங்கேற்பாளர்களுக்கு முன் பாடப்படும் ஃபகாமிசிமிசி கவிதையால் இது கொண்டாடப்படுகிறது, கொண்டு வரப்பட்ட பல்வேறு பொருட்கள் உருவகங்களுடன் அந்த கவிதையில் வர்ணிக்கப்படுகிறது. இந்த "அழகான மற்றும் உன்னதமான" தேடலானது பங்கேற்பாளர்களின் ஆடைகள் மற்றும் கலைநுணுக்கங்கள் (மலர் கழுத்தணிகள், பச்சை குத்தல்கள், வாசனை திரவியங்கள்) ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது, மேலும் அன்றாட வேலையின் ஒரு வகையான மேன்மையான கலையாக உள்ளது என அட்ரியானோ ஃபாவோல் வர்ணித்துள்ளார்.

கோஹா

 நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரிடையே கோஹா என்ற கொண்டாட்டம் நடைமுறையில் உள்ளது.  கோஹா என்ற சொல்லை பரிசு, அன்பளிப்பு, வழங்கல், நன்கொடை அல்லது பங்களிப்பு என மொழிபெயர்க்கலாம்.

மாவோரி பாரம்பரியத்தின் பொதுவான அம்சமாக இருக்கும் பரஸ்பரமான பரிமாற்றங்களுகளின் எடுத்துக்காட்டாக கோஹா உள்ளது. கோஹா விருந்தினர்கள் (மனுஹிரி) விருந்தளிப்பவருக்கு (மாரே) பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக இது பெரும்பாலும் உணவின் வடிவத்தை எடுத்தாலும், டாங்கா-பொக்கிஷமான உடைமைகளும் வழங்கப்படுகிறது.

கோஹா கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவரின் சக்தியையும் பிரதிபலிக்கிறது, கொடுப்பவரால் என்ன கொடுக்க முடியும் என்பதைப் பிரதிபலிக்கிறது, மேலும் அவர்கள் பரிசளிக்கும் நபர் அல்லது குழுவின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது - எனவே நல்ல உறவுகளை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோஹாவின் இந்த பாரம்பரிய நடைமுறை நியூசிலாந்தில் மாவோரி சூழலில் இன்றும் செயலில் உள்ளது. . இது போன்று பரிசுகள் அளிப்பது நியூசிலாந்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுவான வழக்கமாக உள்ளது. இந்த வழக்கம், மாவோரி வழக்கத்தில் (டிக்கங்கா) வேரூன்றவில்லை என்றாலும் கூட, அதனால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது.

(தொடரும்)

 

 

Sunday, December 24, 2023

பொம்மைகளின் புரட்சி (26):

 

அன்னயிலிருந்து அம்மா, அப்பா ரெண்டு பேருமே மாத்தி மாத்தி நேரம் கெடைக்கும் போது  கல்வி கோபாலகிருஷ்ணன் தாத்தாவோட மிட்டாய் பாப்பாவ தினம் தினம் படிச்சு குக்குவுக்கு கதை சொன்னாங்க… அவளும் ரொம்ப குதூகலமா கதைய கேட்டா… ஒரு வாரத்துலேயே மிட்டாய் பாப்பா கதை முழுசையும் கேட்டு ரசிச்ச குக்கு, எறும்புகள், தேனீக்களோட வாழ்க்கை, அவங்கள பத்திய அறிவியல் உண்மைகள் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டா…

அதுக்கப்புறம் அம்மா, அப்பா ரெண்டு பேருமே நேரம் ஒழியும் போது மாத்தி மாத்தி குக்குவ நூலகத்துகும் அழைச்சுக்குட்டு போனாங்க…  அங்க கல்வி கோபாலகிருஷ்ணனோட பறக்கும் பாப்பா கதைய குக்குவுக்கு அவங்க படிச்சாங்க, அவளும் உன்னிப்பா கதைய கேட்டுக்கிட்டு இருந்தா… அது அவளுக்கு ஒரு சுற்றுலா போற மாதிரி இருந்துச்சு… உலகத்துல உள்ள பல நாடுகளுக்கு பறக்கும் பாப்பா பறந்து போகும் போது குக்குவும் அங்க பறந்து போனா, அந்த நாடுகளோட காலநிலை, மக்களோட கலாச்சாரம் பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டா, பறக்கும் பாப்பாவ படிச்சு கேட்டது அவளுக்கு ஒரு உல்லாச சுற்றுலாவா இருந்துச்சு… கதைய கேட்டதுலேயே அவளுக்கு உலகத்தையே சுத்தி பாத்த அனுபவம் கெடைச்சுச்சுன்னா பாத்துக்கங்களேன்…

அடுத்து கதை கேட்க வேண்டிய பட்டியல்ல இருக்குற கல்வி கோபாலகிருஷ்ணன் தாத்தாவோட மற்ற கதைகளான சுண்டுவிரல் சீமா, மந்திரவாதியின் மகன், கானகக் கன்னி, பாலர் கதைக் களஞ்சியம், பஞ்ச பூதங்களின் வரலாறு இதையெல்லாம் கேட்க எப்படா நேரம் வரும்னு ரொம்ப ஆவலோட குக்கு காத்துக்கிட்டுருந்தா....

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை குக்கு விடிய காலையிலேயே எழுந்துருச்சுட்டா, ஏன்னு கேக்குறீங்களா.... வெள்ளிக்கிழமை நூலகத்துல அப்பா அவளுக்கு பறவையியலாளர் சலீம் அலியோட இந்தியப் பறவைகள் என்ற புத்தகத்தையும் எடுத்துக்கொடுத்தாங்களா, அந்த புத்தகத்துல உள்ள எல்லா பறவைகளையும் குக்கு உன்னிப்பா பார்த்தாளா... எனக்கும் அந்த பறவைகளோட படம் எல்லாம் வேணும்னு குக்கு அடம்பிடிச்சாளா, அதுனால, நூலகத்துல உள்ள அந்த தாத்தா அவளுக்கு பறவைகளோட படங்கள எல்லாம் கலர் ஜெராக்ஸ் போட்டு எடுத்துக் கொடுத்தாங்க... அப்பா அந்தப் படங்கள்ல பறவைகளோட பேரெல்லாம் எழுதி குக்குவுக்கு கொடுத்தாரு... படங்கள் எல்லாம் அவளுக்கு  நேத்தைக்கு சனிக்கிழமை தான் கிடைச்சுச்சா, அதான் நம்ம ஊருல என்னென்ன பறவைகள் எல்லாம் இருக்குனு ஆராய்ச்சி பன்னணும்னு குக்கு துறுதுறுன்னு ரொம்ப ஆர்வமாயிட்டா...

எங்க இருந்து பாத்தா எல்லா பறவைகளையும் நல்லா பாக்கலாம்னு குக்கு அப்பாகிட்ட கேட்டா... பக்கத்துல உள்ள கடைத்தெருல மூனு மாடி கட்டிடம் இருக்கு, அங்க மொட்ட மாடில தியான வகுப்புகள் எல்லாம் எடுக்குறாங்க இல்லயா... அந்த மொட்ட மாடிக்குப் போனா நல்லா பாக்கலாம்னு அப்பா சொன்னாங்க.... அதிகாலைல தான் எல்லா பறவைகளையும் பாக்கமுடியும்னு அப்பா சொன்னதுனால அலாரம் வைக்காமலே இன்னிக்கு அவளாவே சீக்கிரம் எந்திருச்சுட்டா... அப்பாவையும் எழுப்புனா...

அப்பா சீக்கிரமா வா அந்த மூனு மாடிக் கட்டிடத்தோட மொட்ட மாடிக்கு போவோம், நம்ம ஊருல என்னென்ன பறவைகள் எல்லாம் இருக்குனு நான் ஆராய்ச்சி பண்ணனும், உடனே எழுந்திரிப்பானு சத்தமா அப்பா காதுக்குள்ள கத்துனா...

(தொடரும்)

 

 

Saturday, December 23, 2023

சூதாடும் காட்டேரி (90):

 

பின்னாளில் விற்பனை முன்னாளின் அடகுக்குட்பட்டது:

ஒரு நபர் சொத்தை பிணையமாக கொடுத்துவிட்டு அதன்பிறகு அதை விற்பாரெனில், பின்னர் செய்த விற்பனையை விட முன்னர் செய்த பரிவர்த்தனையே (பிணையம்) உகந்ததாக நிற்கும், சொத்து விற்பனையானது முன்னர் சொத்தை பிணையமாக பெற்றவரின் உரிமைகளுக்குட்பட்டதாக இருக்கும்.

இந்த விதி பிணையம், பரிசு, விற்பனை போன்ற பரிவர்த்தனைகளின் போது ஏற்கெனவே பரிவர்த்தனை செய்ததற்கான சான்று இருக்குமானால் பிந்தைய பரிவர்த்தனையை விட முந்தைய பரிவர்த்தனையே மேம்பட்டதாகக் இருக்கும் என்று யாக்ஞவல்கியாவால் இயற்றப்பட்ட பொது விதியுடன் ஒத்துப்போவதாக உள்ளது.

பிணையங்களை மீட்பதற்கான நிபந்தனைகள்:

கடனாளியால் கடனளித்தவருக்கு பிணையம் ஒருமுறை கொடுக்கப்பட்டுவிட்டால் அந்த பிணையம் இதற்கு முன் கூறிய வகைகளில் எந்த வகையாக இருந்தாலும் கடனாளி கடனை முழுமையாக அடைத்தபின்பே சொத்தை பெறமுடியும் அல்லது பிணையத்தை மீட்கமுடியும். ஆனால் பிணையம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்குமானால் அந்த சந்தர்ப்பத்தில், கூடுதலான நிபந்தனையாக அந்த காலகட்டத்திற்குள் கடனாளி முழுக்கடனையும் அடைத்துவிட வேண்டும். இல்லையெனில் கடனாளி அந்த சொத்தை இழந்துவிடுவார், கடனளித்தவர் அந்த சொத்தின் உரிமையாளராகி விடுவார்.

அசல் தொகை இருமடங்காக ஆவதற்குள் பிணையம் மீட்கப்படாமல் இருக்குமானால் பிணையம் இல்லாமல் போய்விடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்கப்பட்ட பிணையம் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தபின் இல்லாமல் போய்விடும். ஆனால் பயன் உரிமை அளிக்கும் பிணையம் ஒருபோதும் இல்லாமல் போகாது என்ற விதியை யாக்ஞவல்கியா இயற்றியுள்ளார்.

யாக்ஞவல்கியாவால் இயற்றப்பட்ட இந்த விதி மூன்று சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தும். 1. வரைமுறையற்ற காலகட்டத்திற்கு கொடுக்கப்பட்ட பிணையம் அல்லது அக்ரிதகால பிணையத்தின் மீதான மீட்புரிமை. 2. குறிப்பிட்ட காலவரையறை இல்லாத சாதாரண பிணையம் (கோப்யா) 3. சேரும் வட்டித்தொகை அசல்தொகைக்கு சமமாகும் சந்தர்ப்பம். இந்த மூன்றாம் வகை, த்வைகுன்யா அல்லது தம்துபட் விதியிலிருந்து வருவதாக உள்ளது. கடன் சார்ந்த விதிகளில் உள்ள அந்த விதியின் படி திரட்டப்படும் வட்டி அசல் தொகைக்கு சமமாகும் போது வட்டி சேருவது நின்றுவிடும், அந்தக் கடன் உடனடியாக அடைக்கப்படவேண்டும். யாக்ஞவல்கியாவின் மேற்கூறப்பட்ட விதியிலிருந்து கடனாளி மீட்புரிமையை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமெனில் அவர் முறையாக தொடர்ந்து வட்டியை கட்டவேண்டும் என்பது தெரிய வருகிறது. கடனாளி வட்டியை முறையாக தொடர்ந்து கட்டியிருப்பாரெனில் எந்த காலவரைமுறையும் இல்லாது கடனாளி பிணையப்பொருளை மீட்பதற்கான தன் உரிமையை இழக்கமாட்டார். வட்டி ஒரு போதும் அசல் தொகைக்கு சமமாக ஆகாது, கடனை அடைப்பதற்கான நேரமும் வராது என்பதால் இந்த விதியின் செயல்பாட்டால் கடனாளி தன் சொத்தை இழக்கமாட்டார் .

(தொடரும்)

 

 

 

 

(தொடரும்)

 

 

 

 

 

Friday, December 22, 2023

பணம் பேசுறேன் (90):

 

கடோகா என்பது குடும்பங்களை ஒன்றிணைத்து பொருட்களை பரிமாறிக்கொள்ளும் கொண்டாட்டமாக இருக்கு. ஆண்களும் பெண்களும் விவசாயத்தில் ஈடுபட்டு கடினமாக உழைக்கவும், கைவினைப் பொருட்களை தயாரிக்கவும் கடோகா வாய்ப்பை கொடுக்குது. அதோடு குடும்பங்களுக்கிடையேயும், இன உறுப்பினர்களிடையேயும் ஒத்துழைப்பை வலுப்படுத்துது. மானுடவியலாளரான பேட்ரிக் விண்டன் கிர்ச் சொல்கிறார்: பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்த விழாக்கள், எப்போதும் உபரிகளை வழங்குவதற்காக, தங்களுடைய வாழ்வாதாரத்திற்குப் போதுமானதை விட அதிகமாக உற்பத்தி செய்ய மக்களை நிர்ப்பந்திக்துகின்றன. இது விவசாய உற்பத்தி மற்றும் அதன் துணை தயாரிப்புகளை (பாய்கள் மற்றும் பெட்டிகள்) வடிவமைப்பதாக உள்ளது.

தொல்பொருள் ஆய்வாளர் ஆனெ டி பியாஸ்ஸா, ஃபுடுனாவில் விவசாயத்தை ஒழுங்கமைப்பதில் கட்டோகா பங்களித்துள்ளதாகக் கூறியுள்ளார்.:

ஒரு கடோகாவுக்கு ஒரு பெரிய அளவிலான அமைப்பு தேவைப்படுகிறது, மேலும் இது பொதுவாக பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்படுகிறது. கடோகாவில் பகிரப்படும் உணவுகளுக்கு ஆண்டு முழுவதும் திட்டமிடல் தேவைப்படுகிறது: பன்றிகள் வளர்க்கப்படுகின்றன, விவசாயம் செய்து விளைபொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் பாடல்களும் நடனங்களும் ஒத்திகை பார்க்கப்படுகின்றன; சில பாடல்களும், நடனங்களும் அந்த சந்தர்ப்பத்திற்காக உருவாக்கப்படுகின்றன.

மறுபகிர்வு சடங்காக இருக்கும் "கடோகாவுக்கு பெரிய அளவில் செல்வம் சேகரிக்கப்படுகிறது. அறுவடை நிலையுடனும், போதுமான எண்ணிக்கையிலான பன்றிகளின் இருப்புடனும் கடோகா இணைக்கப்பட்டுள்ளது.

வாலிஸ் மற்றும் ஃபுடுனாவில், பெரும்பாலான ஆண்கள் வழக்கமான விழாக்களுக்குத் தயாரிப்பதற்காகவே பன்றிகளை வளர்க்கிறார்கள்.

ஒரு கடோகாவை முன்னிட்டு, கிராமவாசிகள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள், கொண்டாட்டம் அதிகாலையிலே தொடங்கிவிடுகிறது. பன்றிகள் மற்றும் கிழங்குகள் ஆண்களால் கொண்டு வரப்படுகின்றன, பெண்களால் தயாரிக்கப்பட்ட பாய்கள் (பானிக்ஸ்) மற்ற கைவினைப்பொருட்கள் திருவிழாவிற்கு கொண்டு வரப்படுகின்றன.

உணவு உமு எனப்படும் பாரம்பரிய அடுப்பில் ('umu) சமைக்கப்படுகிறது, எரிமலைக் கற்களை சூடாக்கி, பின்னர் உணவு சமைத்து வாழை இலைகளால் மூடப்பட்டிருக்கும்.

காட்சிக்கு வைக்கப்படுவதற்கு முன்பு பன்றிகள் சுத்தப்படுத்தப்பட்டு வறுக்கப்படுகின்றன., புதை அடுப்புகளில் ஆண்கள் அதை சமைக்கிறார்கள், அதே நேரத்தில் பெண்கள் தியார், செம்பருத்தி பூக்களால் கழுத்தணிகளை உருவாக்குகிறார்கள். உணவு கூடைகள் மற்றும் பன்றிகள் விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

காய்கறிகளின் கூடைகள், கிழங்குகள், பழங்கள், பழங்கள் (வாழைப்பழங்கள்), வறுக்கப்பட்ட பன்றிகள், பட்டை துணி (தபா), பெண்களின் உழைப்பின் தயாரிக்கப்பட்ட பாய்கள் (பானிக்ஸ்), வாசனை எண்ணெய்கள், மஞ்சள் போன்ற பொருட்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.

(தொடரும்)

 

 

 

Thursday, December 21, 2023

சூதாடும் காட்டேரி (89):

 


பிணையப்பொருளுக்கான உரிமை பெறப்படாமல் இருக்கும்போது ஒப்பந்தம் செல்லாது:

கடனாளியும், சாட்சியும் இல்லாத போது கடனுக்கான ஆவணம் எப்படி பயனற்றதாக இருக்குமோ அதே போல், பிணையம் கடனளித்தவரால் அனுபவிக்கப்படாமல் இருக்கும் போதும் கடனளித்தவர் பிணையத்திற்கான உரிமையை பெற்றுக்கொள்ளாதபோதும், பிறருக்கும் அதை கொடுக்காத போதும் எழுதப்பட்ட ஆவணம் செல்லாது என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

ஒரு பிணையம் பயனுடையதாக இருக்கவேண்டுமெனில் கடனளித்தவர் பிணையத்தை தன்வசப்படுத்திருக்கவேண்டும், பிணையத்தை பயன்படுத்தவேண்டும் அல்லது அதற்கு மாற்றாக பிணைய பொருளை அடையாளம் காணக்கூடிய சாட்சிகளை கொண்டிருக்கவேண்டும் என்பதையே பிரஹஸ்பதியின் மேற்கூறிய விதி குறிப்பிடுகிறது. இந்த விதியின் படி கடனளித்தவர் பிணையத்தை பெறாமலோ, பிணையத்தை பயன்படுத்தாமலோ இருக்கும் போதும் அதே போல் பிணைய பொருளை அடையாளம் காணக்கூடிய சாட்சி இல்லாதபோதும், பிணையத்தைப் பற்றிய எழுதப்பட்ட ஆவணம் கூட செல்லாது. பிணையம் சம்மந்தப்பட்ட ஆவணம் உருவாக்கப்பட்ட போதும் கூட, அதை செயல்படுத்தாமல் இருக்கும்போதும், அது போலியாகவோ, மோசடியான பரிவர்த்தனையாகவோ இருக்கும் போதும் உள்ள வழக்குகளை இந்த விதி நிர்வகிக்கிறது. பரிவர்த்தனை உண்மையாக இருக்கவேண்டுமெனில் கடன் அளித்தவர் பிணையத்தைப் பெற்றுக்கொள்வதிலிருந்து ஒருபோதும் தவறமாட்டார் என்ற அடிப்படையில் இந்த விதி செயல்படுத்தப்படும்.

முன்னதாக பிணையத்தை பெற்றிருப்பவரின் உரிமைகள்:

ஒரே சொத்தை அல்லது பொருளை இரண்டு நபர்களுக்கு பிணையமாக கொடுக்கப்படும் போது (அடமானமாக வைக்கும்போது) முன்னதாக அளிக்கப்பட்ட பிணையமே செல்லும். இரண்டு முறை பிணையமாக அளித்த நபர் திருடரைப்போல் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

பிணையம், பரிசு கொடுக்கும் போதும் அல்லது விற்பனை செய்யும் போதும் முன்னதாகவே அதை பரிவர்த்தனை செய்ததற்கான சான்று இருக்கும்போது என்ன செய்யவேண்டும் என யாக்ஞவல்கியா கூறியதிலிருந்தே இந்த விதி வருவிக்கப்பட்டுள்ளது. பயனுரிமை நல்கு பிணையம் /அடமானம் தவிர,  வழக்கைப் பொறுத்து கடனை வசூலிப்பதற்கான பாதுகாப்பான நடைமுறையாக அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக, அடமானமாக இருப்பது பற்றியும் இவ்விதி குறிப்பிடுகிறது. ஆனபோதும் ஒரே சொத்தை மீண்டும் அடமானம் வைப்பதை இவ்விதி தடைசெய்கிறது. இரண்டாம் முறை நிலச்சொத்து எந்த அளவிற்கு அடமானம் வைக்கப்பட்டது என்பதைப் பொறுத்து இரண்டாம் முறை அடமானம் வைத்தவருக்கு உடல் ரீதியான தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என விஷ்ணு பரிந்துரைத்துள்ளார்.

வாய்வழி அடமானத்தை விட ஆவணத்தால் உருவாக்கப்பட்ட அடமானம் மேம்பட்டது:

பிணையத்தை பெற்றிருப்பவரின் உரிமை குறித்த மேற்கூறிய பொதுவான விதிக்கு மாறாக சில விதிவிலக்குகளை காத்யாயனா அளித்துள்ளார்.

சொத்து விவரங்களை கூறும் அடமானம் விவரங்களை குறிப்பிடாத அடமானத்தை விட மேம்பட்டது:

முன்னர் வைக்கப்பட்ட அடமானம், அதற்கு பின்னர் வைக்கப்பட்ட அடமானம் இரண்டுமே எழுதப்பட்டிருக்கும் போது, ஒரு அடமானத்தில் அடமான சொத்து தெளிவாக விளக்கப்பட்டும், மற்றொன்றில் அது போன்ற விளக்கம் இல்லாதிருந்தால், சொத்து விவரம் குறிப்பிடாத அடமானம் முன்னரே வைக்கப்பட்டிருந்தாலும் கூட, சொத்து விவரத்தை கூறும் அடமானமே வெல்லக்கூடியதாக இருக்கும்.

 (தொடரும்)

 

 

 

 

 

Wednesday, December 20, 2023

பணம் பேசுறேன் (89):

 

கடோகா

ஓசியானியாவில் பாலினேசிய கலாச்சாரத்துடன் உள்ள வாலிஸ் மற்றும் ஃபுடுனா பகுதிகளில் கடோகா என்ற பெயரில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இப்பகுதிகள் பின்னர் ஃபிரெஞ்சு காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின. கடோகா, இரண்டு வாலிசியன் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது: கடோவா என்ற சொல்லிற்கு அனைவரும் ஒன்று கூடல் என்று பொருள், ஆகா என்பதற்கு "நிகழ்ச்சி நடைபெறும் இடம்". என்று பொருள்.

அறுவடை, திருமணம், இறுதி சடங்கு, ஒன்றுகூடல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போதும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் கடோகா எனப்படும் இந்த பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது பல பாலினேசிய சமூகங்களில் கடோகா ஒரு கறாரான சடங்காக நெறிமுறைகளுடன் பின்பற்றப்படுகிறது.

கடோகா கொண்டாட்டத்திலும் போட்லாட்சில் செய்யப்படுவது போல் பரிசுகள் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்றன. ஒரு தரப்பினர் மறுதரப்பினருக்கு பரிசு வழங்குகிறார்கள், பின்னர் பரிசு பெற்றவர்கள் பரிசு கொடுத்தவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். இதன் மூலம் சமூகத்தில் செல்வம் மறுபகிர்வு செய்யப்படுகிறது.

இந்த விழாவின் போது, பன்றிகள், காய்கறிகளின் கூடைகள் (சேனைக்கிழங்கு வள்ளிக்கிழங்கு), பாய், மரவுரி போன்ற பல பொருட்கள் பரிசுகளாக பரிமாறப்படுகின்றன. கடோகா விழாவிலும் அதிகமாக பரிசு பொருட்களை வழங்குபவர் உயர்ந்த சமூக மதிப்பைப் பெறுகிறார்.

பாலினேசிய சமூகங்களில், "பழங்குடி தலைவர்களால் உணவு உற்பத்தி மையப்படுத்தப்பட்டு பின்னர் கடோகா விழாக்களின் மூலம் மறுபகிர்வு செய்யப்படுகிறது.

பல கிராமங்கள் பங்கேற்கும் இதற்கான தயாரிப்பு வேலைகளுக்கு பல வாரங்கள், மாதங்களாகும். பரிசுகளை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள், ஆண்கள் பன்றிகளை வளர்த்து, சேனைக்கிழங்குகளை உற்பத்தி செய்கிறார்கள், பெண்கள் பாய்களை பின்னுகிறார்கள்.

 கடோகா விழாவில் கிராமவாசிகள் நடனமாடுகின்றனர், உரைகள், கவிதைகள் மற்றும் வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து கதைகள் ஆகிய கலாச்சர நிகழ்வுகள் பங்கேற்பவர்களால் பரிமாறப்படுகிறது. மக்கள் கொண்டு வரும் உணவு அனைவருக்கும் மறுபகிர்வு செய்யப்படுகிறது, விருந்தளிக்கப்படுகிறது, காவா பானம் அருந்தி விருந்தினர் கொண்டாடுகின்றனர்

கடோகா கொண்டாட்டங்கள் 19 ஆம் நூற்றாண்டில் வாலிஸ் மற்றும் ஃபுடுனாவில் கிறிஸ்தவமயமாக்கலுக்குப் பிறகு சிறிது மாறிவிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் டோங்காவிலும் (அங்கே அவை கட்டோங்கா என்று அழைக்கப்பட்டன) மற்றும் மார்க்வெசாஸ் தீவுகளிலும் இதே போன்ற விழாக்கள் அனுசரிக்கப்பட்டன. அவை ரோட்டுமாவில் கட்டோ'க என்ற பெயரிலும் கொண்டாடப்படுகின்றன 20ஆம் நூற்றாண்டிலும் டோங்காவில் அந்த கொண்டாட்டங்கள் நடைமுறையில் இருந்தன.

(தொடரும்)

 

Tuesday, December 19, 2023

சூதாடும் காட்டேரி (88):

 

பிணைய பொருளை பிற பொருள்களுடன் கலக்கும்போது உள்ள கடப்பாடு:

பிணையத்தை வைத்திருப்பவர் பலவந்தமாக, பிணையத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாமல் பிணையத்துடன், பிணையமாக அளிக்கப்படாத வேறொரு பொருளை சேர்த்திருப்பாரானால், பிணையத்தின் உரிமையாளர் தன் பிணையத்தை திரும்பப்பெற உரிமையுள்ளவர். பிணையத்தை வைத்திருந்தவர் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

கடனளித்தவரிடமுள்ள தரந்தாழ்ந்த பொருட்களுடன் கலக்கக்கூடிய பண்புடையதாக பிணையப்பொருள் இருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த விதி  பொறுந்தும். கடனளித்தவர் பிணையத்தின் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய செயலை செய்தால் அது குற்றமாகும் அவர் அதற்கான கடப்பாட்டுக்குரியவராவார்.

பிணைய பொருள் பயன்பாட்டால் பயனிழந்து போகும் போது உள்ள கடப்பாடு:

ஒரு பிணையம் பயன்படுத்துப்பட்டு மதிப்பில்லாது ஆக்கப்பட்டிருக்குமானால் பிணையத்தைப் பெற்றவர் அசல் தொகையை பெறும் உரிமையை இழந்துவிடுவார். மிகவும் மதிப்புமிக்க பிணையம் அவ்வாறு ஆக்கப்பட்டிருக்குமானால் கடனளித்தவர் பிணையத்தின் உரிமையாளருக்கு நிறைவளிக்குமாறு செய்யவேண்டும் என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

கடனளித்தவருக்கு பிணையத்தைப் பயன்படுத்தும் உரிமை இருக்கும் போது சாதாரண நேரங்களில் அது பயனிழந்து போயிருக்குமானால் பிணையத்தின் உரிமையாளர் பிணையத்தை திரும்ப பெறுவதற்கு உரிமையற்றவராகவே இருப்பார் என்பதையே இந்த விதி குறிப்பிடுகிறது. கடனாளியின் கடப்பாட்டுடன் ஒப்பிடும்போது பிணையம் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் போது இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில் பிணையத்தைப் பெற்றவர் பிணையத்தின் உரிமையாளருக்கு நிறைவளிக்குமாறு செயல்படவேண்டும்.

பாழான ஆவணத்தின் கீழுள்ள பிணையத்தை ரத்துசெய்தல்:

கடனாளியின் பாழான ஆவணித்தின் கீழுள்ளா பிணையத்தை கடனளித்தவர் அனுபவிப்பாரெனில், அரசர் அந்த பிணையத்தை அழிக்கலாம். கடனளித்தவர் அதற்காக அபராதம் கட்டவேண்டும் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

செல்லத்தக்க ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை பற்றி இதற்கு முன்னே கூறியிருந்தோம். சட்டத்துக்கு புறம்பான ஆவணத்தின் கீழ் பிணையம் கொடுக்கப்படுமானால் அதாவது 1. பிணையத்தின் உரிமையாளர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள தகுதியுடையவராக இருந்த போதும், சட்ட விரோதமான நோக்கத்திற்காக அதை செய்திருந்தால் அல்லது 2. பிணைய பொருளின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லாதிருந்தால் அல்லது 3. பிணையம் பலவந்தமாகவோ முறைகேடாகவோ பெறப்பட்டிருக்குமானால் அந்த சந்தர்ப்பங்களில் பிணையத்திற்கான ஆவணமே சட்ட விரோதமானதாக இருக்கும் போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் அது குறித்து புகார் அளித்தால்  அரசர் (நீதிமன்றம்) அத்தகைய ஆவணத்தை அழிக்கவும், முறைகேடான பரிவர்த்தனையை மேற்கொண்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கவும் கடமைப்பட்டுள்ளார்.

பிணையப்பொருளுக்கான உரிமை பெறப்படாமல் இருக்கும்போது ஒப்பந்தம் செல்லாது:

கடனாளியும், சாட்சியும் இல்லாத போது கடனுக்கான ஆவணம் எப்படி பயனற்றதாக இருக்குமோ அதே போல், பிணையம் கடனளித்தவரால் அனுபவிக்கப்படாமல் இருக்கும் போதும் கடனளித்தவர் பிணையத்திற்கான உரிமையை பெற்றுக்கொள்ளாதபோதும், பிறருக்கும் அதை கொடுக்காத போதும் எழுதப்பட்ட ஆவணம் செல்லாது என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

(தொடரும்)

 

 

 

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...