Monday, September 30, 2024

பணம் பேசுறேன் (135):

 


உள்நாட்டு வர்த்தகத்தோட தேவையின் அடிப்படையில பணம் உருவாகுறதப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு இப்போ கேப்போம்.

3. உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாக பணத்தின் தோற்றம்:

“உள்நாட்டுல தயாரிக்கப்படுறதுனாலேயே ஒரு பொருளோட அளவை வரம்பில்லாம அதிகரிக்கமுடியுமுன்னு கருதவேண்டியதில்லை. பெரும்பாலும் அதுக்கான நடைமுறை வரம்புகள் இருக்கும். அதோட வரத்து போதாக்குறையா இருக்கலாம், அல்லது அதை கிடைக்க வெக்கிறதுல சிரமம் இருக்கலாம், அதோட உற்பத்திக்கான செலவும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான காரணியா மாறலாம். ஆதிப்பணத்தோட அளவு அதிகரிக்கிறதுனால அதன் மதிப்பு குறையும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல அதை உற்பத்தி செய்யுறது லாபகரமா இருக்காது. அல்லது பொருட்களோட விலைகள் கிராக்கி, வரத்துக்கு ஏற்ப மாறாம சமூகத்தால கறாரா நிர்ணயிக்கப்பட்டுருக்கும் போது, ஆதிப்பணம் வெச்சுருக்கவங்களால விற்பனைக்கான பணமல்லாத பொருட்கள் உள்வாங்கப்பட்ட பெறகு ,பண வரத்துல கூடுதலா சேருறது மதிப்பில்லாம போயிடும்.

 

பல நிகழ்வுகள்ல ஆதிப்பணம் முழுக்க முழுக்க உள்நாட்டுத் தன்மையைக் கொண்டதா இருந்துருக்கு. உகாண்டாவுல உள்ள அங்கோலின் முக்கிய  பணமான கால்நடைகள், அவங்களோட பழங்குடி சமூகத்துக்குள்ள மட்டும் தான் புழக்கத்துல இருக்க முடியும். தீவிரமான ஒரு அவசரநிலை  வந்தாலொழிய கால்நடைகளை அவுங்க சமூகத்தை விட்டு வெளியேத்த அனுமதி இல்ல. முக்கியமான ஆதிப் பணமா கால்நடைகள் இருக்குற கிழக்கு ஆஃப்ரிக்கா முழுக்கவும், தென்னாப்பிரிக்காவிலும் ஏறக்குறைய இதே நடைமுறை  காணப்பட்டுருக்கு.. உள்நாட்டு வர்த்தகத்துல பயன்படுத்துறதுக்கு முன்னாடி பண்டமாற்று ஊடகமாக இருந்ததால கால்நடைகள் இந்த பாத்திரத்தை எடுத்துச்சா இல்ல மதம் சார்ந்த கட்டணங்களுக்காகவோ, அரசியல்  சார்ந்த கட்டணங்களுக்காகவோ,  மணமகள் பணத்திற்காகவோ பயன்படுத்தப்பட்டதுனால ஆதிப்பணமா உருவானுச்சா என்பது கேள்விக்குரியது தான்.

 

ஏற்றுமதிக்கான எந்த தேவையினாலயும் உருவாகாம, உள்நாட்டு வர்த்தகத்தோட தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்ட, ஆதிப்பணங்களுக்கான (Currency) அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளா  ஸ்பார்டாவின் இரும்பு பணமும் பண்டைய இத்தாலி, சிசிலி மற்றும் ஆரம்பகால ரோமினுடைய கழிப்பு செப்பு பணமும் இருந்துருக்கு. அழியக்கூடிய தன்மை அதகமுள்ள வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் (நவீன காலம் வரை ஏற்றுமதி செய்யப்படவில்லை), முட்டை, பாலாடைக்கட்டி போன்றவை பல்வேறு சமூகங்கள்ல பரிமாற்ற ஊடகமாக செயல்பட்டுருக்கு. அழிந்துபோகக்கூடிய அவற்றின் பணப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ள செயல்பட்டுருக்கு. கடைசியா, ஆபரணங்களாக பயன்படுத்தப்படும் பல உள்நாட்டுல தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஒரு பரிமாற்ற ஊடகமா, இருந்தாலும் கூட, ஆபரணங்கள தேர்வு செய்யுறதுக்கான ரசனையில உள்ள வேறுபாடு காரணமா அவை ஏற்றுமதி செய்யப்படலை.

 

மேலே சொன்னதுலேருந்து, ஏற்றுமதிக்கு சுத்தமா எந்த தேவையும் இல்லாத போதும் கூட உள்நாட்டுல உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் பணநோக்கங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது விகிதாச்சார அளவுல எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதாகத்தான் தெரியுது. அதுனால உள்நாட்டுல உற்பத்தி செய்யப்படும் பொருள் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தால் மட்டுமே அது பணமாக மாறும் என்று கூறுவது தவறானது.”

 

(தொடரும்)

 

Sunday, September 29, 2024

பொம்மைகளின் புரட்சி (66):

 

குக்கு: மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது, ஆனா எங்க அம்மாவும், அப்பாவும் அப்புடி கெடையாது, அவங்க எப்பவுமே சமத்துவமா, சரிசமமா இருக்குற காதலர்களா தான் இருக்குறாங்க…, சரி நீ எனக்கு ஒன் கதைய சொல்லு…

குண்டு கரிச்சான்: மரக்கெளையில ஒக்காந்துக்குட்டு இனிக்க இனிக்க பாடுறது தான் எனக்கு ரொம்ப புடிக்கும், அதுக்கு என் காதலி எசப்பாட்டு பாடுவா… தரையில தத்தி தத்தி திரியுறதும் எனக்கு ரொம்ப புடிக்கும், அப்புறம் பூச்சிகள், புழுக்களை நான் ரொம்ப விரும்பி சாப்புடுவேன்… எப்பயாச்சும் தோணுச்சுன்னா பூவுல தேன் குடிப்பேன், பழங்கள் சாப்புடுவேன்… பாரு நாங்க பசங்க எல்லாம் மேல கரு கருன்னு இருப்போம், அடியில வெள்ளையா இருப்போம், பொண்ணுங்க மேல கருஞ்சாம்பல் நெறத்துல இருக்குங்க, அடியில வெண்சாம்பல் நெறத்துல இறக்குங்க, எங்க எல்லாருக்குமே தோள் பட்டையிலேருந்து ரெக்கை நுனி வரைக்கும் வெள்ளை நெற பட்டை இருக்குது பாத்தியா… ஐரோப்பாவுல உள்ள ராபினை விட எங்களுக்கு வாலு நீளம், நாங்க வடகிழக்கு ஆசியா, இந்தியாவுல அதிகமா இருக்குறோம். ஆனா பங்களாதேசத்துல தான் எங்கள தேசியப் பறவையாக்கி கௌரவப் படுத்திருக்காங்க. எங்களால மத்த பறவைகள் மாதிரியும் கத்த முடியும், பாட முடியும்… எனக்கு ரொம்ப நேரமாச்சு நான் இன்னொரு நாள் வந்து பேசவா…

குக்கு: ஏன் ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?

குண்டு கரிச்சான்: ஆமா ரொம்ப முக்கியமான வேலை என் காதலி எனக்காக காத்துக்கிட்டு இருப்பா… நாங்க கூடு கட்டனும்… அவ கூடு கட்டுவா, நான் அதை காவல் காப்பேன்… மரப்பொந்துல தான் கூடு கட்டப் போறோம், மேல புல்லு, இலை தளை எல்லாம் போட்டு, ஜம் ஜம்முன்னு மெத்தையாக்கிடுவோம்… அப்புறம் அதுல தினமும் நீல நிற முட்டை போடுவா, அதுல செம்புள்ளிகள் இருக்கும்… ஆறு முட்டை போட்டதும் அடைகாப்பா, நான் அவளுக்கு பாதுகாப்பா இருப்பேன்… அப்புறம் குஞ்சுகள் பொறிஞ்சதும்… நாங்க ரெண்டு பேரும் புழு பூச்சிகளை ஊட்டி ஊட்டி குஞ்சுகளை செல்லமா வளப்போம், குஞ்சுகளுக்கு பறக்க கத்துக்குடுப்போம்…

குக்கு: இவ்ளோ வேலை இருக்கா, அய்யய்யோ எனக்கு தெரியாமப் போச்சே… இனிமே தொந்தரவு பண்ணமாட்டேன்… நீ பத்துரமா போயிட்டு வா… நானே வந்து ஒன்னைய அப்பப்ப பாத்துக்குறேன்….

குண்டு கரிச்சான்: மனுசங்க மாதிரி மொக்கையா பாடாம என்ன மாதிரி இனிமையா பாட ஒனக்கு வாழ்த்துக்கள், எனக்கு நேரம் கெடைக்கும் போது நானே வந்து ஒன்னைய பாக்குறேன் சரியா, வரட்டுமா

பாட்டு பாடிக்கிட்டே பறந்து போயிட்டான் குண்டு கரிச்சான்…

குக்கு: பரவால்லயே, இவ்ளோ நேரம் என்னைய தேடாம இருந்துருக்கீங்க…

குக்குவோட அப்பா: நீ குண்டு கரிச்சானோட பேசிக்கிட்டு இருந்தத நான் மொதலயே பாத்துட்டேன், நீ தான் சத்தம் போட்டு கூப்புடக்கூடாதுன்னு சொல்லியிருக்கியா… விசிலடிச்சு கூப்புட்டாலும் எங்க அது பறந்துபோயிடுமோன்னு தான் பேசாம இருந்துட்டேன்…

 (தொடரும்)

 

 

 

 

 

Saturday, September 28, 2024

சூதாடும் காட்டேரி (134):


கடைசியா 1991 ஜனவரி 4ல தான் இந்தியாவுலேருந்து போன பயணக்குழுவுவால செண்டினல் பழங்குடிகளோட ஓரளவுக்கு சுமுகமான தொடர்பு ஏற்படுத்த முடிஞ்சுச்சு. அந்த பயணக்குழுவுல மதுமாலா சட்டோபாத்யாயா என்ற பெண் மானுடவியலாளரும் போயிருந்தாங்க. பயணக்குழு தேங்காய்களை தண்ணீல போட்டுருக்கு, செண்டினல் பழங்குடிகள் அத எடுத்துக்கிட்டாங்க. படகுல கொண்டுபோன தேங்காய் எல்லாம் முடிஞ்சதும் கப்பலுக்கு போய் தேங்காய்கள எடுத்துக்கிட்டு அடுத்த சுத்து வந்துருக்காங்க. அப்போ மதுமாலா சட்டோபாத்யாயா மேல குறிவெச்சு ஒரு செண்டினலி ஆண் அம்பு விடப்பாத்தாரு, ஆனா ஒரு செண்டினலி பெண் அவரைத் தடுத்துட்டாங்க. மூணாவது சுத்துல பயணக் குழுவினர் படகுல இருந்து குதித்து கழுத்தளவு தண்ணீல நின்னு, தேங்காய்களையும், மத்த பரிசு பொருட்களை கொடுத்துருக்காங்க. 1991 ஃபிப்ரவரி 21ல திரும்பவும் ஒரு பயணக்குழு செண்டினலி தீவுகளுக்கு தேங்காய்களோட போனப்போ அதப் பாத்துட்டு செண்டினலிகள் ஆயுதம் இல்லாமலே அவங்க கிட்ட போயிருக்காங்க

அதுக்கு பெறகு 1997ல இந்திய அரசும் சென்டினல் மக்களை சந்திக்கும் முயற்சியை கைவிட்டதோட அங்க போறதுக்கு சட்டபடி தடையும் விதிச்சுருச்சு. வெளியுலக தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி செண்டினலி பழங்குடியினருக்கு இல்லாததால, பயணிகளால தொற்று ஏற்பட்டு அந்த இனமே அழிஞ்சுபோற ஆபத்து இருக்குறதுனாலயும், பயணிகளோட பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுச்சு.

2004-ல சுனாமி வந்தப்போ பழங்குடிகளுக்கே உரிய கூர்மையான புலனுணர்வால பேரிடர் வரப்போறத முன்னுணர்ந்த செண்டினலிகள் உயரமான எடத்துக்குப் போய் தங்கள பாதுகாத்துக்கிட்டாங்க.  பேரிடர் மேற்பார்வைக்காக இந்திய அரசு ஒரு ஹெலிகாப்டர இந்த தீவுக்கு அனுப்பி வெச்சுச்சு. அந்த ஹெலிகாப்டரை தரை எறங்கவே விடாமல் சென்டினல் பழிங்குடிகள் அம்புகளை தொடுத்து தொரத்தி அடுச்சிட்டாங்க.

2006ல தவறுதலா அந்த தீவுல கரையொதுங்குன படகுல இருந்த ரெண்டு மீனவர்கள் செண்டினல்கள் தாக்குதலால இறந்துட்டாங்க.

“மிஷனரிகள் ஆஃப்ரிக்காவுக்கு வந்தப்ப, ​​அவங்க கிட்ட பைபிள் இருந்துச்சு, எங்ககிட்ட நெலம் இருந்துச்சு. பிரார்த்தனை செய்வோம்னு சொன்னாங்க… . கண்ணை மூடிக்கிட்டோம். கண்ணைத் தொறந்து பாக்கும்போது, ​​​​எங்ககிட்ட பைபிள் இருந்துச்சு, அவங்ககிட்ட நெலம் இருந்துச்சுன்னு” தென்னாஃப்ரிக்க பிஷப்பும் மனித உரிமை ஆர்வலருமான டெஸ்மண்ட் டுட்டு சொல்லியிருந்தாரு இல்லையா. அதுக்கு வடக்கு செண்டினல் தீவும் விதிவிலக்கு கெடையாது.

2018ல செண்டினலி மக்களை கிறிஸ்தவர்களாக்கி சாத்தானிடமிருந்து விடுவிக்கப்போறேன்னு கெளம்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் அலென் சா மீனவர்களுக்கு 25000 ரூபாய் லஞ்சம் கொடுத்து பைபிளோட செண்டினலி தீவுக்குப் போயிருந்தாரு. செண்டினலி பழங்குடி மக்கள் அவரை சாத்தான் கிட்டயே அனுப்பிவெச்சுட்டாங்க. 

அதுக்கப்புறம் செண்டினல் பழங்குடி மக்கள் ரொம்ப ஆபத்தானவங்க, கொடூரமானவங்க நர மாமிசம் திங்கிறவங்க அது, இதுன்னு சில ஊடகங்கள் இஷ்டத்துக்கு கதையக் கட்ட ஆரம்பிச்சுடுச்சு.

மானுடவியலாளர் திரிலோக் நாத் பண்டிட் செண்டினலிகளை பத்தி என்ன தெரியுமா சொல்லியிருந்தாரு "அவங்க அமைதியை விரும்புறவங்க தான் அவங்கள அச்சுருத்தக்கூடியவங்களா நெனக்கிறதுல நியாயமில்ல”

"எங்கள் தொடர்புகளின் போது அவங்க எங்களை அச்சுறுத்துனாங்க தான், ஆனா அது அவங்க எங்களை கொல்லுற அளவுக்கோ அல்லது காயப்படுத்துற அளவுக்கோ போகலை. அவங்க கிளர்ந்தெழுந்த போதெல்லாம் நாங்கள் பின்வாங்கினோம்"னும் அவர் சொல்லியிருந்தாரு.

"அவங்க நாகரிகம் இல்லாதவங்க கெடையாது. அவங்க நம்மள விட இயற்கையை நல்லா புரிஞ்சுவெச்சிருக்காங்க, மறந்துடாதீங்க, அவங்க சுனாமி வருதுன்னு தெரிஞ்சுகிட்டு, உயரமான இடங்களுக்குப் போயிட்டாங்க.. அவங்க அனிமிசத்தை பின்பற்றுறாங்க, நம்ம மாதிரி இல்லாம அவங்க இயற்கையை வணங்கி, நேசிக்கிறாங்க.”னு செண்டினலிகளை பத்தி மானுடவியலாளர் மதுமாலா சட்டோபாத்யாயா சொல்லியிருந்தாங்க.

(தொடரும்)

 


Friday, September 27, 2024

பணம் பேசுறேன் (134):

 

உள்வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறதப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு இப்போ கேப்போம்.

3. உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாக பணத்தின் தோற்றம்:

“வெளி வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறதப் பத்தி பாக்கும் போது ஒரு சமூகத்தோட பிரதான தயாரிப்பு பொருளுக்கு ஏற்றுமதிக்கான நிலையான தேவை இல்லாதவரை அது பணமா (currency) செயல்பட முடியாதுன்னு சொல்லுற கோட்பாட்டை பாத்திருந்தோம். அப்படியிருக்கனும்னு அவசியம் இல்லை . ஏன்னா பணமாகுமா என்கிற கேள்விக்குரிய தயாரிப்புப் பொருள் ஒரு முக்கிய நுகர்வுப் பொருளா இருந்தால், அப்படி இருக்க வேண்டியதில்லை. சமூகத்துல அந்த மாதிரியான பொருட்களுக்கு எப்பவுமே வலுவான கிராக்கி இருக்கும். அந்த பொருளுக்கு இருக்குற கிராக்கியே அந்த பொருளை எல்லா வகையான பொருட்கள் சேவைகளுக்கான கட்டணமாக பொதுவாக ஏற்றுக்கொள்ளும் தன்மையை பாதுகாக்க போதுமானதாக இருக்கக்கூடும். அதுனால கோதுமை வளர்கிற சமூகங்கள்ல கோதுமை நுகர்வுப் பொருளாக இருக்கு, இந்த காரணத்தாலேயே பெரும்பாலும் அது ஆதிப் பணத்தின் செயல்பாடுகளை எடுத்துக்குது. பொருளை விற்க வேண்டியவங்க தங்களுக்குத் தேவையானதை விட அதிகமான கோதுமையைக் கூட கட்டணமா ஏத்துக்குவாங்க. ஏன்னா அவங்க பொருளை வாங்கும் போது கோதுமையை கட்டணமா ஏத்துக்குற ஒருவரைக் கண்டுபிடிக்கிறதுல சிரமம் இருக்காது என்பது அவங்களுக்குத் தெரியும். முக்கிய நுகர்வுப் பொருளாக அரிசு இருக்கும் சமூகங்களுக்கும், நிலத்துல வெளைஞ்ச மத்த பொருட்களுக்கும் இது பொருந்தும்.

விலங்குகள், விலங்குகள்லேருந்து கிடைச்ச பொருட்கள், ஆடைகள், கருவிகள், பாத்திரங்கள் ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றோட முறையான உள்நாட்டு நுகர்வு இந்த பொருள்களை உள்ளூர் பணங்களாகத் தேர்ந்தெடுப்பதற்கான  பொருத்தமான அடிப்படையை உருவாக்கலாம். உள்நாட்டு நுகர்வு எந்த அளவிற்கு உள்நாட்டு உற்பத்தியை உள் வாங்கும் திறன் கொண்டதா இருக்கு என்ற கேள்வியைக் கருத்தில் கொள்வதும் அவசியம். எல்லா உற்பத்தியையும் உள்நாட்டிலேயே உள்வாங்க முடியாவிட்டால், தேவையற்ற உபரி அதிகமாறதன் காரணமாக, பணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் மதிப்பிழப்பு அடையும் ஆபத்து எப்போதுமே இருக்கும் என்று பொதுவாக வாதிடப்படுது. உண்மையில, ஆதி சமூகங்கள் இந்த மாதிரியான உபரிகளை உள்வாங்குறதுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைக் கொண்டதா தான் இருந்துருக்கு. அவங்களோட பலி கொடுக்குறதுக்கான தேவைகளினாலயும் அல்லது அதிகாரம் படைச்ச பழங்குடியினர் பெரிய பங்குகளை சேர்த்துவைப்பதன் மூலமும் அல்லது தனி நபர்கள் அந்த பொருளை சேமிக்குறதுக்கான ஊடகமாகப் பயன்படுத்துறதன் மூலமும் ஓரளவு உள்வாங்கப்படலாம். பெருமளவிலானவை பொதுவா பண்டிகைகளின் போது தீர்ந்துபோயிடும் அல்லது நுகரப்படும், அல்லது இறந்தவர்களுடன் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும். அழிந்துபோகக்கூடிய பொருட்களின் வரம்பில்லா அதிகரிப்பை இயற்கையே தடுத்துறது. உடைகள், பாத்திரங்கள் போன்றவை தேய்மானம் அடைவதுனாலயும், உடைகள் கிழிவதானலும் அதிக விரயம் ஏற்படுது. அதிக அளவுல ஆதிப் பணம் பாதுகாப்பா வைக்கிறதுக்காக புதைக்கப்படுது, அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்படுறதுல்ல. இன்னொரு பக்கம், நிச்சயமா பெரிய அளவுல அந்த பணப் பொருளை பயன்படுத்த முடியும் என்ற காரணமே அதோட உற்பத்தியை அதிகப்படுத்திருக்கும் என்பதையும் மனசுல வெக்கனும். அந்த அதிகரிப்பு சமூகத்தின் உள்வாங்கும் திறனை விட அதிக விகிதாச்சாரத்தையும் எடுத்துருக்கலாம்.”

 (தொடரும்)

 

Thursday, September 26, 2024

சூதாடும் காட்டேரி (133):

 


பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்துலேருந்து சமீப காலம் வரைக்கும் கடற்படை அதிகாரிங்க, மானுடவியலாளர்கள், போலீஸ்காரங்க, அரசியல்வாதிகள், நிர்வாகிகள்னு இந்திய அரசு தரப்பு ஆளுங்க செண்டினலிகளோட தொடர்பையும், நட்புறவையும் ஏற்படுத்தி மோசடி செய்ய பல முறை முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா எதுவுமே வெற்றி பெறல.

1967 இந்தியாவோட பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மண்டலத் தலைவராக இருந்த மானுடவியலாளர் திரிலோக் நாத் பண்டிட் தலைமையில 20 பேரைக் கொண்ட ஒரு பயணக்குழு வடக்கு சென்டினல் தீவுக்குப் போனுச்சு. அவங்கள பாத்த செண்டினலிகள் காட்டுக்குள போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. கடற்கரையை யொட்டிய பகுதில ஒரு இடத்துல புல்லால் வேயப்பட்ட குடிசை இருந்ததையும், சுடப்பட்ட மீன் துண்டுகள், பழங்கள், வில், அம்புகள் கிடந்ததையும் பார்த்துருக்காங்க. யாரோடவும் தொடர்பு கொள்ள முடியாமலேயே கரையிலயே பல பரிசுப் பொருட்களை போட்டுட்டு வந்துருக்காங்க.

1970ல மறுபடியும் போனப்ப செண்டினலிகள் ஆயுதங்களை கீழ போட்டுட்டு மீனை எறியும்படி சைகை காட்டிருக்காங்க. செண்டினலி பொண்ணுங்க வேடிக்கை பாத்துருக்காங்க. ஆண்கள் மீனை எடுத்துட்டு போயுருக்காங்க. இருந்தாலும் அவங்க விரோதப்போக்கை விடல. கோபத்தோட, கடுமையான முகத்தோட வில், அம்பு ஆயுதம் ஏந்தி தங்களோட நிலத்தை பாதுகாக்க தயாரா இருந்துருக்காங்க.

செண்டிலிகளோட நடத்தை, பாசையை புரிஞ்சுக்க உதவுறதுக்காக மூணு ஓங்கே பழங்குடியினரையும் அழைச்சுட்டுப் போயிருக்காங்க. ஆனா அவுங்களுக்கும் செண்டினலி பாசை புரியல. தீவுக்குள்ள போகமுடியாத போதும் நல்லுறவை உருவாக்குற முயற்சில பயணக்குழு பரிசுகளை கரையில விட்டுட்டுப் போயிருக்காங்க.  பானைகள், பெரிய தேங்காய்கள், சுத்தியல் மாதிரியான இரும்புக் கருவிகள், நீண்ட கத்திகள்,  ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகளோட உயிருள்ள பன்னியையும் விட்டுட்டு வந்துருக்காங்க. இவங்க கொண்டு போன பன்னியை செண்டினலிகள் ஈட்டியால கொன்னு மணலுக்குள்ள பொதைச்சுட்டாங்க.

1974 ஆங்கில தொலைக்காட்சி, நேஷனல் ஜியோகிராபிக், சார்பா சென்டினலிகளை பத்தி "மேன், இன் சர்ச் ஆஃப் மேன்"னு ஒரு ஆவணப்படம் எடுப்பதுக்காக ஆயுதம் தாங்கிய போலீஸ்படையோட படக் குழுவினர் மோட்டார் படகுல செண்டினல் தீவுக்குப் போயிருக்காங்க. கரையை அடைஞ்சதும் அவங்க ஒரு பன்றி, அலுமினிய பாத்திரம், பொம்மை, பொம்மை கார், தேங்காய் இதையெல்லாம் வெச்சுட்டு காத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இதையெல்லாம் பாத்த செண்டினலிகள் தூரத்துல இருந்தபடியே அம்பால தாக்கியிருக்காங்க. ஆவணப்பட இயக்குனரின் தொடையில் ஒரு அம்பு பாய்ஞ்சுருச்சு. பயந்து போன படக் குழுவினர் படமும் வேணாம் ஒன்னும் வேணாம்னு தப்புச்சோம், பொழைச்சோம்னு வந்த வழியே திரும்பிட்டாங்க. செண்டினலிகள் அவங்க கொண்டு வந்த பன்னியையும் பொம்மையையும் ஈட்டியால் குத்திப்போட்டுட்டு, தேங்காய் அலுமினிய சமையல் பாத்திரங்களை மட்டும் எடுத்துக்குட்டுப் போயிருக்காங்க.

(தொடரும்)

 

Wednesday, September 25, 2024

பணம் பேசுறேன் (133):

 

வெளி வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறதுக்கான சாத்தியப்பாட்டைப் பத்தி பாத்துட்டோம். உள்வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறது எந்த அளவுக்கு சாத்தியம்? இதைப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு இப்போ கேப்போம்.

3. உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாக பணத்தின் தோற்றம்:

நவீன பொருளாதார ஆய்விலக்கியத்துல, கட்டற்ற வர்த்தகக் (free trade) கோட்பாடுகளுக்கு இருக்குற செல்வாக்கு காரணமா, வெளிநாட்டு வர்த்தகத்தோட ஒப்பிடும்போது உள்நாட்டு வர்த்தகத்தோட ஒப்பீட்டு முக்கியத்துவத்தை குறைச்சு மதிப்பிடுறதுக்கான வலுவான போக்கு காணப்படுது. இந்த போக்கு பழமையான வர்த்தகம் பத்திய எழுத்துக்கள்லயும் தெளிவாகத் தெரியுது. வெளிப்புற வர்த்தகம் நிச்சயமா உள்வர்த்தகத்திற்கு முன்னாடியே இருந்துருக்கும், அதோட நீண்ட காலமா பணப் பயன்பாட்டை (currency) உருவாக்க முடியாத அளவுக்கு உள்வர்த்தகம் குறைஞ்ச அளவுக்குத் தான் நடந்துருக்கும்னு பரவலா இருக்குற கருத்தாக்கத்தைப் பத்தி நாம விவாதிச்சிருந்தோம். "வர்த்தகம்" என்பதுக்கு தொழில்முறை வர்த்தகர்கள் என்ற ஒரு வகுப்பினரால ஒப்பீட்டளவுல பெரிய அளவுல செய்யப்படுற ஒரு முறையான வணிகப் பரிமாற்றம் என்று அர்த்தப்படுத்தினால் இந்த அனுமானம் பெரும்பாலும் சரியானதா இருக்கலாம். இருந்தாலும், தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், உற்பத்தி செய்யுறவங்களுக்கும், அதை பயன்படுத்துறவங்களுக்கும் இடையில நடக்குற தொழில்முறைசாரா பொருள் பரிமாற்றங்களையும் கணக்குல சேர்த்தோமுன்னா, வேறுவிதமா சொல்லனுமுன்னா அவங்களோட வாழ்வாதார பொருளாதாரத்தோட மொத்த உற்பத்தி பரிமாற்றங்களையும் கணக்குல சேர்த்தா, எல்லா நிகழ்தகவுகள்லயும் கூட உள்நாட்டு வர்த்தகத்தின் அளவு வெளிநாட்டு வர்த்தகத்தை விட அதிகமாகத் தான் இருக்கும்.

இங்க கேள்வி என்னன்னா, உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில தொழில்முறைசாரா பண்டமாற்றம் மூலமா பணத்தை உருவாக்க முடியுமா? அல்லது தொழில்முறை பண்டமாற்றுனால மட்டுமே பணத்தை உருவாக்க முடிஞ்சிருக்குமா? எப்போதாவது பண்டமாற்று பரிவர்த்தனையில ஈடுபடும் நபர்களை விட, தொழில்முறை வர்த்தகர்கள் நிச்சயமா பணத்தின் பயன்பாட்டைத் தொடங்குறதுக்கு சிறந்த தகுதி பெற்றவங்களா இருந்துருப்பாங்க. இன்னொரு பக்கம் பார்த்தா, வளர்ச்சியோட ஆரம்ப கட்டத்துல பழமையான சமூகங்கள்ல பணவியல் அமைப்பை உருவாக்குவதற்கான தேவை தொழில்முறை வர்த்தகர்களுக்கு அவ்வளவு வலுவாக இல்ல, ஏன்னா அவங்க முழுக்க முழுக்க பண்டமாற்று செய்யுறதுனால வர்ற நன்மைகளால பயனடைஞ்ச போதே,  அதோட சிரமங்களை சமாளிக்குறதுக்கும் தனி நபர்களை விட அனுகூலமான நிலையில இருந்துருக்காங்க. உண்மையில, சமீப காலங்கள்ல தொழில் ரீதியாக பண்டமாற்று பரிவர்த்தனைகள்ல ஈடுபடுறவங்க பண்டமாற்று முறையில ரெண்டு வழியிலும் லாபம் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில ஆஃப்ரிக்க பழங்குடி சமூகங்கள்ல பணத்தை அறிமுகப்படுத்துறத எதிர்த்துருக்காங்க. பண்டமாற்று முறையில பெறப்பட்ட பொருட்களை பரிமாற்றுறதுல தனி நபரை விட வர்த்தகர் நிச்சயமா அனுகூலமான நிலையில இருப்பார்.

அதுனால, பெரும்பாலான சந்தர்ப்பங்கள்ல பணம் தொழில்முறை வர்த்தகத்தின் மூலமா இல்லாம தொழில்முறை சாரா வர்த்தகத்தோட தேவைகளின் மூலம் தோன்றியிருக்கலாம்னு நெனச்சுப்பாக்க முடியும். இந்தக் கண்ணோட்டத்தை நாம் ஏத்துக்கிட்டா, பெரும்பாலும், வர்த்தகத்தின் மூலம் பணம் உருவானபோது, ​​அது வெளிநாட்டு வர்த்தகம் மூலமா இல்லாம, உள்நாட்டு வர்த்தகத்துல இருந்து வந்துருப்பதும் சாத்தியமாகத் தான் இருக்கும்.

(தொடரும்)

 

Tuesday, September 24, 2024

சூதாடும் காட்டேரி (132):

 

செண்டினலிகளுக்கு (செண்டினல் மக்களுக்கு) அவங்க தீவோட பேரு செண்டினல்னும் தெரியாது. அவங்கள நாம செண்டினலிகள்னு அழைக்குறதும் தெரியாது. அவங்களோட வடக்கு செண்டினல் தீவு இந்திய அரசோட ஆட்சிப் பரப்புக்குள்ள இருக்குறதப் பத்தியோ இல்ல, இந்தியாங்குற நாட்டைப் பத்தியோ, இல்ல அரசாங்கத்தப் பத்தியோ, ஜனநாயகத்தை பத்தியோ செண்டினலிகளுக்கு (ஒன்னுமே தெரியாது. ஆனாலும் கூட அவுங்க நம்மளை விட ரொம்ப ஜனநாயகமா தான் வாழ்ந்துக்கிட்டுருக்காங்க. ஆனா அங்க அரசாங்கமே இல்ல. ஏன்னா அங்க தான் தனிச்சொத்துடைமையே இல்லையே. பழங்காலத்துலேருந்து இன்னைக்கு வரைக்கும் பாத்தீங்கன்னா உலகம் முழுக்க ஆனானப்பட்ட அரசுங்குறது தனிசொத்துடைமைய பாதுகாக்குற போலீஸ்காரனா தான் இருந்துருக்கு. ஆனால் செண்டினல் தீவுகள்ல நிலம், இயற்கை வளங்கள் என எதுவாயிருந்தாலும் யாரோட தனிச்சொத்தாவும் இல்லை. செண்டினல் தீவுல உள்ள எல்லாமே அங்க உள்ள எல்லாருக்கும்  பொதுவானதா தான் இருக்கு.

அவங்க எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாம பழைய கற்காலத்தோட ஆதிப் பொதுவுடைமை சமூகமா வாழுறதுக்கு அவங்க தீவோட தனிமைப்பட்ட புவியியல் சூழ்நிலைகள் தான் காரணமா இருக்கு. வெளியாளுங்க அவங்க தீவுக்கு வந்தா அவங்களோட அம்பு தான் பேசும். அதுனால தான் அவுங்க தங்களோட நெலத்த, இயற்கை வளங்கள், தனித்தன்மை, கலாச்சாரம், வாழ்வாதரத்தை இழக்காம வாழமுடிஞ்சிருக்கு. ஏன்னா இந்திய அரசு வளர்ச்சிபடுத்துறோம், நாகரிகப்படுத்துறோம் என்ற பேருல செஞ்ச வேட்டையில அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள்ல இருந்த மத்த பழங்குடிகளான கிரேட் அந்தமானிஸ், ஓங்கேஸ், ஷொம்பென்ஸ் நிக்கோபரீஸ்; இவங்க எல்லாருமே தங்களோட நிலங்கள், இயற்கைவளங்கள, தனித்துவமான கலாச்சாரங்கள, வாழ்வாதாரங்கள் எல்லாத்தையும் இழந்து சீரழிஞ்சு போயிட்டாங்க. அவுங்களும் செண்டினலிகள் மாதிரி விடாப்பிடியான பிடிவாதத்தோட வெளியுலகத் தொடர்பை மறுத்துருந்தா நம்பிக்கை துரோகம், மோசடிக்கு பலியாகாம இன்னும் சிறப்பா இருந்துருப்பாங்க.

செண்டினலிகள் மொத்தமே 100லிருந்து 500 பேர் தான் இருக்குறாங்க. 1880ல, பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி மாரிஸ் விடல் போர்ட்மேன் செண்டினல் தீவுலேருந்து ஒரு தம்பதியையும், நாலு குழந்தைகளையும் கடத்தி  அந்தமான் தலைநகரான போர்ட் பிளேயருக்குக் கொண்டுபோயிருக்குறாரு. ஆனா அந்த சூழல்ல இருக்கத் தேவையான நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாததால அந்த தம்பதி நோய்வாய்ப்பட்டு இறந்துடுச்சு. அவங்க சாவுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காத அந்த பிரிட்டிஷ் அதிகாரி கொஞ்ச நாள் கழிச்சு நாலு குழந்தைகளையும் சில பரிசு பொருட்களோட அவுங்க தீவுலயே கொண்டு போய் விட்டுருக்குறாரு. அந்த குழந்தைகள் மூலமாவும் செண்டினலிகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டுருக்கலாம், அதன் மூலமா கூட அவங்க மக்கள் தொகை கொறைஞ்சு போயிருக்க வாய்ப்பிருக்கு. வெளியாளுங்ககிட்ட அவங்க அவநம்பிக்கையால அம்பால பேசுறதுக்கு இந்த கசப்பான சம்பவம் கூட காரணமா இருந்துருக்கலாம். இல்ல கடற்கொள்ளையர்கள், வேட்டைக்காரர்களால அச்சுறுத்தப்பட்டுருக்கலாம், அவுங்களுக்கு விரோதமான வேறு கசப்பான சம்பவங்களும் நடந்துருக்கலாம். அது நமக்கு தெரியாம போயிருக்கலாம். எப்புடியிருந்தாலும் இந்த காலத்துல ஆயுதம் மூலமா தான் தன்தீர்வு உரிமையை நிலை நாட்ட முடியும் என்பதுக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டா செண்டினலிகள் வழிகாட்டுறாங்க. இந்திய அரசு அவுங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய பல தடவை முயற்சி செஞ்சுருக்கு. ஆனா செண்டினலிகள் எதுக்குமே ஏமாந்து மோசம் போகல.

(தொடரும்)

 

Monday, September 23, 2024

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு: ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது?


ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

சரக்கை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உயிர்அணு வடிவம் என்பார் கார்ல் மார்க்ஸ். சரக்கிலிருந்து ஆரம்பித்துத் தான் மார்க்ஸ் தன் மதிப்புக் கோட்பாட்டை கண்டடைகிறார். சரக்கின் எளிய மதிப்பு வடிவத்திலிருந்து தான் பணத்தின் தோற்றத்தையும் கண்டடைந்து அதன் மாய்மாலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விளக்கம் அளித்தார் மார்க்ஸ். சரக்கின அடிப்படையான இரு கூறுகளாகப் பயன் மதிப்பும், பருமாற்ற மதிப்பும் உள்ளன. ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது. சரக்காகிய பயனுள்ளப் பொருளின் இயல்பான பண்பு வடிவமாக பயன் மதிப்பும், அதன் தனியுடைமைச் சமூக பண்பு வடிவமாக பரிமாற்ற மதிப்பும் உள்ளன. பயன் மதிப்பு, பரிமாற்ற மதிப்பின் ஒருங்கிணைந்த வடிவமாக சரக்கு உள்ளது.

கார்ல்மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை மேம்போக்காகப் படித்தால் அதில் உட்பொதிந்துள்ள ஆழமான பொருளையும் இயங்கியல் அனுகுமுறையையும் உள்வாங்க இயலாது. மூலதன வாசிப்பை எளிதாக்கப் பல விளக்க நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா “பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சியக் கோட்பாடு- எப்படி, எதனால், எவ்வழியில் சரக்குப் பணம்?” என்ற தனது புத்தகத்தில் மூலதனத்தையும் மார்க்சியப் பொருளாதாரக் கோட்பாடுகளையும் எளிதாக மட்டுமல்லாமல் முழுமையாகவும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஆழமாக விளக்கமளிக்கிறார்.

சமிசோ குருமா கூறுகிறார்: பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பொருளாதார வல்லுநர்கள் பணம் ஒரு சரக்கு என்பதைத் தங்கள் ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் ஒரு சரக்கு 'எப்படி, ஏன், எதன் மூலம் பணமானது' என்பதை மார்க்ஸுக்கு முன் யாரும் தெளிவுபடுத்தவில்லை.

பணம் குறித்த முறையானக் கோட்பாட்டை முன்வைக்கும் அத்தியாயம் மூன்றுக்கு முன் அத்தியாயம் இரண்டின் முடிவில் பணம் குறித்த இறுதிக் கருத்தில் மார்க்ஸ் எழுதுகிறார்:

பணம் ஒரு சரக்கு என்பது அதைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதன் இறுதி வடிவத்திலிருந்து தொடங்குபவர்களுக்கு மட்டுமே ஒரு கண்டுபிடிப்பு ஆக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில்அந்த காலத்தில் அது சிறப்பிற்குரியது - பணத்தின் பகுப்பாய்வின் முதல் படி, பணம் ஒரு சரக்கு என்ற கண்டுபிடிப்பு நீண்ட காலத்திற்குமுன்னே அடையப்பட்டது. ஆனால் இது வெறும் முதல் படி தானே தவிர வேறொன்றும் இல்லை. பணம் ஒரு சரக்கு என்பதைப் புரிந்து கொள்வது கடினமானது இல்லை. ஆனால் எப்படி, ஏன், எதன் மூலம் [ஜெர்மனில்-wie, warum, wudurch] (what, why, through what’)  ஒரு சரக்கு பணமானது என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது.

இந்த மூன்று கடினமானக் கேள்விகள் பற்றிய மார்க்ஸின் குறிப்பு அவர் அதற்கான விடைகளை வெற்றிகரமாக கண்டடைந்தார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அவை எங்கே சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான குறிப்பு எதையும் மார்க்ஸ் அளிக்கவில்லை.

எப்படி, ஏன், மற்றும் எதன் மூலம் என்ற கேள்விகளுக்கு மார்க்ஸ் முறையே, அத்தியாயம் ஒன்றில் பிரிவு மூன்று, பிரிவு நான்கு மற்றும் அத்தியாயம் இரண்டில். பதிலளித்தார் என்பது என் கருத்து. இந்த வாக்கியத்தில் மூன்று பிரச்சனைகளுக்கும் மார்க்ஸ் தீர்வளித்த வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்கிறார் சமிசோ குருமா.

சரக்கு தான் பணமாகிறது. சரக்கு எப்படி பணமானது, சரக்கு ஏன் பணமானது, சரக்கு எதன் வழியில் பணமானது என்பதற்கான விளக்கங்களாக மூலதனத்தின் முதல் அத்தியாயத்தின் பிரிவு1, பிரிவு3, பிரிவு 2 ஆகியவற்றை மார்க்ஸ் அளித்துள்ளதாக ஒரு தெளிவான விளக்கம் அளிக்கிறார் சமிசோ குருமா. அவரது விளக்கம் முற்றிலும் தர்க்கப் பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது.

அதாவது மூலதனத்தின் முதல் அத்தியாயத்தில் முதல் பிரிவில் மார்க்ஸ் அளித்துள்ள மதிப்புக் கோட்பாடு சரக்கு எப்படிப் பணமானது என்பதற்கான விளக்கமாக அமைந்துள்ளது. மூன்றாம் பிரிவில் சரக்குகளின் மாய்மாலம் சரக்கு ஏன் பணமானது என்பதற்கான விளக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் பிரிவில் மதிப்பின் வடிவம் சரக்கு எதன் வழியாகப் பணமாக மாறியது பணமானது என்பதற்கான விளக்கமாக அமைந்துள்ளது.

(தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (2)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

சமிசோ குருமா கூறுகிறார்:

மதிப்பு வடிவத்தின் கோட்பாடும் பரிமாற்ற செயல்முறையின் கோட்பாடும்:

 “மூலதனத்தின் மூன்றாம் அத்தியாயத்தில், மார்க்ஸ் பணம் பற்றிய தனது கோட்பாட்டை முன்வைக்கும் போது 'பணம்' என்ற பதம் முதன் முதலாக ஒரு தலைப்பில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே பணம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பணம் என்ற பதம் முதலில் மதிப்புக் கோட்பாட்டில் விவாதிக்கப்பட்டது. சரக்கின் மாய்மலத்தன்மை குறித்தக் கோட்பாட்டில் மீண்டும் பணம் தோன்றுகிறது. பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டில் மூன்றாவது முறையாக பணம் கையாளப்படுகிறது. பணம் பற்றிய அந்த மூன்று பகுப்பாய்வுகளுக்கும் அத்தியாயம் மூன்றில் வழங்கப்பட்டுள்ள பணத்தின் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள சரியான தொடர்பு என்ன என்பது ஒரு இயல்பானக் கேள்வியாக எழும் என்று நான் நினைக்கிறேன்.

குறிப்பாக, மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டிற்கும் பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது நீண்ட காலமாக, முதல் முதலாக மூலதனத்தைப் படித்ததிலிருந்து 35 வருடங்களாக நான் மிகவும் போராடிப் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாக இருந்தது.

இரண்டு கோட்பாடுகளும் பணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றியதாகவேத் தெரிகிறது, ஆனால் ஒவ்வொன்றிலும் மார்க்ஸ் தனது பகுப்பாய்வை மேற்கொள்ளும் விதம் முற்றிலும் வேறுபட்டது. இரண்டு கோட்பாடுகளுக்கும் இடையிலான அத்தியாவசிய வேறுபாட்டை தெளிவுபடுத்துவது உண்மையில் மிகவும் கடினமானது.”

“மூலதனத்தின் ஆய்வு செய்யப்பட்ட மூன்றுக் கோட்பாடுகளுக்கும் (மதிப்புக் கோட்பாடு, பரிமாற்ற செயல்முறை குறித்தக் கோட்பாடு, சரக்குகளின் மாய்மாலம் குறித்தக் கோட்பாடு)  அத்தியாயம் மூன்றுக்கும் (‘பணம், அல்லது சரக்குகளின் சுற்றோட்டம்) இடையிலான உறவை மிக எளிமையாகக் கூற விரும்புகிறேன்.

பணம் குறித்து முந்தைய அத்தியாயத்தில் அளிக்கப்பட்ட அறிமுகக் கருத்துகளுடன் ஒப்பிடும்போது மூன்றாம் அத்தியாயத்தைப் பணத்தின் அடிப்படைக் கோட்பாடாகக் கருதுவது இயல்பு. ஆனபோதும் இவற்றிற்கிடையேயான அத்தியாவசிய வேறுபாட்டை எப்படி வரையறுக்கலாம் என்ற கேள்வி இன்னும் உள்ளது.

அத்தியாயம் மூன்றில் தான் பணம் முதலில் எழுவாய் வடிவில் தோன்றி  சில செயல்பாடுகளை செய்கிறது என்று எனது பார்வையில் பட்டதை நான் குறிப்பிடுகிறேன். இதற்கு மாறாக, முதல் இரண்டு அத்தியாயங்களில் எழுவாய் வடிவில் இருந்தது பணம் அல்ல. சரக்கே எழுவாய் நிலை வகித்தது. அந்த இரண்டு அத்தியாயங்களில், சரக்கின் உள்ளார்ந்த முரண்பாட்டிற்கு அவசியமான ஒரு இடையீட்டாளராக மட்டுமே பணம் தோன்றுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பணம் அத்தியாயம் மூன்றில் பல செயல்பாடுகளைச் செய்யும் எழுவாய் நிலையில் தோன்றுகிறது. இதுதான் மிக எளிமையான சொற்களில் அத்தியாயம் மூன்றுக்கும் மற்றும் முதல் இரண்டு அத்தியாயங்களுக்கும் இடையேயான, முக்கியமான வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன்.”

 (தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (3)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டிற்கு மார்க்ஸ் '20 கெஜம் துணி = 1 கோட்' என்ற சமன்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார். இச்சமன்பாட்டில் மதிப்பை அறிய வேண்டிய இடது புறத்தில் உள்ள சரக்கான துணி ஒப்பீட்டு வடிவத்தில் உள்ளது. வலது புறத்தில் உள்ள கோட் சமதை வடிவத்தில் உள்ளது. துணி கோட்டின் மூலம் தனது மதிப்பை வெளிப்படுத்துகிறது. இங்கு துணியின் மதிப்பை வெளிப்படுத்துவதற்கானப் பொருளாக கோட் செயல்படுகிறது.

சமிசோ குருமா கூறுகிறார்: முதலாவதாக, மதிப்பு வடிவத்தின் வளர்ந்த வடிவமே பணம் என்பதை மார்க்ஸ் கண்டறிந்தார். இதன் பொருள் பண வடிவத்தின் புதிர் என்பது மதிப்பு வடிவத்தின் அடிப்படை புதிரின் நீட்டிப்பு  தானே தவிர வேறொன்றுமில்லை. பணத்தை அதன் மூலத்திலிருந்து கண்டுபிடிப்பதன் மூலம், அதன் அடிப்படை வடிவத்திற்கு குறைத்து, அதன் எளிமையான மதிப்பு வடிவத்தில், பணம், பண வடிவத்தின் புதிரின் மையத்தை மார்க்ஸ் கண்டறிந்தார். மதிப்பின் புதிருக்கு விடையளிப்பதன் மூலம் பணத்தின் புதிருக்கும் விடை பெற்றார்.

ஜப்பானில் ஹைரோன் கலந்தாய்வு விவாதத்தில் பொருளாதார அறிஞர்  கோசோ யூனோ மூலதனத்தில் மார்க்ஸ் அளித்த மதிப்புக் கோட்பாட்டிற்கு எதிராகத் தன் விமர்சனத்தை முன்வைத்தார். சரக்கின் உரிமையாளரின் விருப்பத்தை கருத்தில் கொள்ளாமல் விலக்கி வைத்துவிட்டு மதிப்பு வடிவத்தைப் புரிந்து கொள்ள இயலாது என்ற வாதத்தை முன் வைத்தார். அதாவது துணியின் உரிமையாளரின் விருப்பம்/தேவையை விலக்கிவைத்துவிட்டு மதிப்பு வடிவத்தை பரிசீலிக்கக்கூடாது என்கிறார் கோசோ யூனோ. சரக்கு உரிமையாளரின் தேவையை பிரித்தபின் மதிப்பு வடிவத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்று உறுதியாக அவர் வலியுறுத்தினார்.

சமிசோ குருமாவும், விவாதத்தில் கலந்துகொண்ட பலரும் கோசோ யூனோவுக்கு மாறாக வாதிட்ட போதும், இறுதியில் யூனோவை அவர்களால் இசைவிக்க முடியவில்லை.

கோசோ யூனோவின் கேள்விகளையும், வாதங்களையும் அதற்கு தான் அளித்த பதில்களையும், விளக்கங்களையும் சமிசோ குருமா இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

சமிசோ குருமா கூறுகிறார்: துணியின் உரிமையாளர் தான் கோட்டை சமதை மதிப்பாகத் தேர்வுசெய்கிறார். துணியின் உரிமையாளர் கோட்டை வாங்க விரும்புவதால் தான் இது நிகழ்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முற்படும் போது இதை பகுப்பாய்வு செய்வது பயனற்றது,. உண்மையில், அந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துவது, தொடர்பில்லாத ஒன்றை புகுத்துவதால் முக்கியமான பிரச்சனையை (மதிப்புக் கோட்பாட்டின்) மங்கலாக்கிப் பகுப்பாய்வைத் தடுக்கிறது

கோட் துணியின் மதிப்பு வடிவமாக இருக்க, கோட் துணிக்கு சமமாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து இந்தக் கருத்து தெளிவாகும். அதேசமயம் துணியின் உரிமையாளர் கோட்டை வாங்க விரும்புவது இரண்டு பொருட்களும் வேறுபட்டவை என்பதை அடிப்படையாகக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால், முந்தையது சமத்துவத்தின் உறவு, பிந்தையது சமத்துவமின்மையின் உறவு. (அதாவது துணிக்கும், கோட்டிற்கும் இடையிலான சமத்துவ உறவை, அவற்றின் சமத்துவமின்மையை அடிப்படையிலாகக் கொண்டு பரிசீலிக்க முடியாது). சமத்துவ உறவு எப்படி உள்ளது என்பதை வெவ்வேறு சரக்குகளை ஏன் முன்வைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தெளிவுபடுத்த முடியாது. 

சரக்கு உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பத்தை/தேவையைத் தெளிவுபடுத்திய பின்னும் மதிப்பு வடிவத்தின் குறிப்பிட்டக் கேள்வி முன்உள்ளது.

மதிப்புச் சமன்பாட்டை பரிசீலிக்கும் போது சரக்கின் உரிமையாளரின் விருப்பத்தை குறிப்பிட்ட ஒன்றாக வைக்கும் போதுதான் நாம் சுயேச்சையான கோட்பாட்டுக் கேள்வியை முன்வைக்கமுடியும்.

(தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (4)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மூலதனத்தில் மதிப்புக்கோட்பாட்டில் மார்க்ஸ் சரக்கைப் பெரும்பாலும் அதன் ஒரு பரிமாணமான மதிப்பு வடிவத்தில் மட்டுமே ஆய்வுசெய்கிறார் என்பதை சமிசோ குருமா பின்வருமாறு விளக்குகிறார்.

பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டிற்கு முன், சரக்கு பகுப்பாய்வு ரீதியாக ஒரு பரிமாண அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மட்டுமே பயன் மதிப்பின் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது, மற்ற நேரங்களில் பரிமாற்ற மதிப்பின் கண்ணோட்டத்தில் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. ஆனால் பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டில் அவ்வாறு பகுப்பாய்வு செய்யப்படவில்லை. அங்கே பல்வேறு வகையான சரக்குகள் ஒவ்வொன்றும் பயன்பாட்டு மதிப்பு மற்றும் மதிப்பின் ஒன்றிணைந்த வடிவமாகவே தோன்றுகின்றன, அதனால் அவற்றால்  ஒன்றோடு ஒன்று உண்மையான பரிவர்த்தனை உறவுகளில் ஈடுபட முடிகிறது.

மதிப்பு வடிவத்தின் கோட்பாடு, சரக்குகளின் மதிப்பின் வடிவத்தை மையமாகக் கொண்டுள்ளது. பயன்மதிப்பு மற்றும் மதிப்பின் ஒருங்கிணைப்பே சரக்காக இருந்தபோதிலும், மதிப்பு வடிவத்தில் முழுமையாக  மதிப்பாக அதாவது பரிமாற்ற மதிப்பாக மட்டுமே தோன்றுகிறது. இது சரக்கின் நேரடியான இருப்பு வடிவமான பயன் மதிப்பிலிருந்து வேறுபட்ட வடிவமாகும். மதிப்பு வடிவத்தின் கோட்பாடு பரிசீலனையில் உள்ள சரக்கின் ஒப்பீட்டு வடிவத்தை அதன் பயன் மதிப்பிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. சரக்கு இயல்பிலேயே அதன் நேரடி வடிவத்தில் ஒரு பயன் மதிப்பைக் கொண்டுள்ளது, பின்னர் கூடுதலாக, ஒரு மதிப்பு வடிவத்தைக் கொண்டுள்ளது, இதன் மூலம் சரக்குகள் உண்மையில் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

எனவே, சரக்கின் மதிப்பு வடிவம் அதே நேரத்தில் பொருளின் சரக்கு வடிவமாகவும் உள்ளது. சரக்கின் மதிப்பு வடிவத்தின் விளக்கம் அதேநேரத்தில் பொருளின் சரக்கு வடிவத்தின் விளக்கமாகவும் உள்ளது.

ஒரு சரக்கின் மதிப்பு வெளிப்பாட்டில் பயன் மதிப்பு இன்றியமையாத பங்கு வகிப்பதாகக் கூறவேண்டுமானால் அது சமதை வடிவத்தில் உள்ள சரக்கின் பயன்மதிப்பை மட்டுமே குறிப்பிடுமே ஒழிய ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் பயன்மதிப்பை அல்ல.

சரக்கின் மதிப்பு அதற்கு சமமான மற்றொரு சரக்கின் பயன் மதிப்பில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்மதிப்பு மதிப்பு வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் உண்மையில் மதிப்பு வடிவத்தின் கோட்பாடு தெளிவுபடுத்தும் உறவாகும். இதுவே கோட்பாட்டின் அடிப்படைப் பணி. இது மதிப்புக் கோட்பாட்டின் பகுப்பாய்வு வடிவம் ஒரு பரிமாணமானது என்பதை மறுக்கவில்லை.

மதிப்புக் கோட்பாட்டில் மதிப்பு, பயன் மதிப்பு இரண்டுமே பரிசீலிக்கப்படுகிறது என்று கருதினாலும் கூட, அது துணியின் மதிப்பையும், கோட்டின் பயன்மதிப்பையும் பரிசீலிக்கிறதே ஒழிய, பயன்பாட்டு மதிப்பு, மதிப்பின்

ஒட்டுமொத்தமாக ஒரே சரக்கில் இரண்டு எதிர்க் காரணிகளை (அதாவது  துணியின் பயன்மதிப்பையும், மதிப்பையுமோ அல்லது கோட்டின் பயன்மதிப்பையும், மதிப்பையுமோ) பகுப்பாய்வு செய்யவில்லை.

மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில், மார்க்ஸ் சரக்கை மதிப்பின் கண்ணோட்டத்தில் மட்டுமே கருதுகிறார். அதன் பயன்பாட்டு மதிப்பை ஒதுக்கி வைக்கிறார். ஆனால் பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டில் அவ்வாறு இல்லை. சரக்கை வாங்குபவருக்கு பொருள் பயன்மதிப்புடையதாக இருக்கவேண்டுமென்பதே பரிமாற்ற செயல்முறை நிகழ்ந்தேறுவதற்கான அடிப்படையாக உள்ளது. பரிமாற்றச் செயல்முறையின் மூலமே சரக்கின் பயன்மதிப்பு  ஈடேற்றம் அடைகிறது.

பரிமாற்ற செயல்முறையில் மதிப்பு, பயன் மதிப்பின் ஒருங்கிணைந்த வடிவமாக சரக்கின் முரண்பாடு வெளிப்படுகிறது, எனவே அந்த முரண்பாட்டை இடையீடு செய்ய பணத்தின் தோற்றம் அவசியமாகிறது.

 (தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (5)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மார்க்ஸ் மூலதனத்தின் முதல் அத்தியாயத்தின் மதிப்புக்கோட்பாட்டில் சரக்கைப் பெரும்பாலும் அதன் ஒரு பரிமாணமான மதிப்பு வடிவத்தில் மட்டுமே ஆய்வுசெய்கிறார். பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டில் சரக்கை பயன்மதிப்பு, மதிப்பு ஆகிய இரு பரிமாணங்களின் ஒருங்கிணைந்த  வடிவமாகப் பரிசீலிக்கிறார். இதனால் தான் மூலதனத்தில் ஒரு தனி அத்தியாயமாக பரிமாற்ற செயல்முறை கோட்பாட்டை மார்க்ஸ் முன்வைத்துள்ளார்.

பணத்தின் தோற்றம் மதிப்புக்கோட்பாட்டில் ஆராயப்படுகிறது. அங்கு கேள்வியானது பணம் எப்படி உருவாக்கப்படுகிறது ('எதனூடாக என்பது குறித்து அல்ல) என்பதைக் குறித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கேள்வியானது எப்படி தங்கம், ஒரு குறிப்பிட்ட சரக்காக, பொதுச் சமதையாகிறது, ஆகவே அதன் இயல்பு வடிவம் சரக்குகளின் உலகம் முழுவதும் மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டுள்ளது. எது தங்கத்தை அவசியமாக்குகிறது அல்லது எதன் மூலம் அத்தகைய பொருள் உருவாகிறது என்பதை அது மையமாகக் கொண்டிருக்கவில்லை. இந்த இரண்டு சிக்கல்களுக்கும் இடையில் வேறுபாட்டை வரையறுப்பது சாத்தியம் என்பது மட்டுமல்ல. உண்மையில் அவற்றைத் தனித்தனியாகப் பிரிப்பதன் மூலமே ஒவ்வொன்றையும் தனித்தனியாக நாம் முழுமையாகத் தெளிவுபடுத்த முடியும்.

அத்தியாயம் மூன்றில் பணத்திற்கானக் கோட்பாட்டை முறையாக பரிசீலிப்பதற்கு முன்பே பணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. மதிப்பு வடிவம், பரிமாற்ற செயல்முறையின் கோட்பாட்டின் மட்டுமல்லாது அத்தியாயம் ஒன்றின் நான்காம் பிரிவில் உள்ள சரக்குகளின் மாய்மாலத் தன்மையின் கோட்பாட்டிலும் பணம் ஆராயப்பட்டுள்ளது.

சரக்குகளின் மாய்மாலத் தன்மையின் கோட்பாடு ஏன் அத்தியாயம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளது (மதிப்பு வடிவத்தின் பிரிவு மூன்றுடன்)?, அத்தியாயம் ஒன்றின் மற்ற பகுதிகளிலிருந்து, பிரிவு நான்கு குறிப்பாக பிரிவு மூன்றிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

அத்தியாயம் ஒன்றில் மார்க்ஸ் சரக்கை ஆராய்வதை நாம் பார்த்தோம். முதலாவதாக, சரக்கு பயன்மதிப்பு, மதிப்பு என இரட்டைப்பண்பைக் கொண்டப் பொருளாக உள்ளது. இதைக் குறிப்பிட்டப் பிறகு மார்க்ஸ் பயன்மதிப்பை, சமூக உற்பத்தி உறவுகளைக் கொணர்பவராக இருந்த போதும் அது எந்த சமூக உறவையும் குறிக்காததால், ஒதுக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து மார்க்சின் பகுப்பாய்வு பரிவர்த்தனை மதிப்பில் கவனம் செலுத்துகிறது. அதன் எளிய வடிவம்: 'x அளவு a சரக்கு = y அளவு b சரக்கு. இந்த வடிவத்தைப் பற்றிய தனது பகுப்பாய்வை மார்க்ஸ் முன்வைக்கிறார். சமன்பாட்டின் இருபுறமும் உள்ள சரக்குகளுக்கு பொதுவான ஒன்று உள்ளது ஆனால் அவை பயன் மதிப்புகளில் வேறுபடுகின்றன. அதன் பிறகு, அவற்றிற்கிடையே என்ன பொதுவாக உள்ளது எது அதன் அளவைத் தீர்மானிக்கிறது என்பதை அவர் விளக்குகிறார். உழைப்பின் உருவிலி வடிவமே மதிப்பை நிர்ணயிக்கிறது.

சரக்கின் இரண்டு காரணிகள்: பயன் மதிப்பு மற்றும் மதிப்பு (மதிப்பின் சாரம், மதிப்பின் அளவு)’ இவை தான் பிரிவு ஒன்றில் மார்க்ஸ் செய்த பகுப்பாய்வு. அந்த முதல் பகுதி முன்கூட்டியே சரக்கை உருவாக்கும் இரண்டு கூறுகளின்  (மதிப்பு மற்றும் மதிப்பு) வேறுபாட்டையும், மதிப்பை உருவாக்கும் உழைப்பின் உருவிலித் தன்மையையும் தெளிவுபடுத்துகிறது.

  (தொடரும்)

 

 

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (6)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மூலதனத்தின் அத்தியாயம் ஒன்றின் பிரிவு இரண்டில் (சரக்குகளில் உட்பொதிந்துள்ள உழைப்பின் இரட்டைத் தன்மையை, பயன் மதிப்பை உருவாக்கும் உழைப்பின் தன்மையும், மதிப்பை உருவாக்கும் உழைப்பின் தன்மையும் ஒன்றுக்கொன்று எதிரான உறவைக் கொண்டிருப்பதைக் குறித்து, ஆய்வுசெய்கிறார்.  இந்த அர்த்தத்தில், அடிப்படையில் பிரிவு இரண்டில் பிரிவு ஒன்றின் பகுப்பாய்வு ஆழமாகிறது. அதே சமன்பாடு  மீண்டும் பிரிவு மூன்றில் 'மதிப்பு வடிவம், அல்லது பரிமாற்ற மதிப்பு' பகுப்பாய்வு செய்யப்படுகிறது. ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்யப்படுகிறது. முன்னர் மார்க்ஸ் இரு சரக்குகளும் பொதுவான ஏதோ ஒரு பண்பைக் கொண்டுள்ளது என்பதையும், என்ன அந்தப்பண்பு என்று தெளிவுபடுத்தும் கண்ணோட்டத்தில் சமன்பாட்டை ஆய்வு செய்தார். பிரிவு மூன்றில் சமன்பாட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சரக்கு எப்படி வெவ்வேறு பாத்திரத்தை வகிக்கிறது என்பதில் அவர் கவனம் செலுத்துகிறார். இடதுபுறத்தில் உள்ள சரக்கின் மதிப்பு  வலதுபக்கம் உள்ள சரக்கின் பயன் மதிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை விளக்குகிறார். எப்படி ஒரு சரக்கின் மதிப்பு மற்றொரு சரக்கின் பயன்மதிப்பால் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும், மதிப்பு இறுதியில் எப்படி பணச்சரக்கின் ஒரு குறிப்பிட்ட அளவால் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

அத்தியாயம் ஒன்றின் நான்காவது பிரிவில், ‘சரக்கின் மாய்மாலத்தன்மையும், அதன் ரகசியமும்' என்றத் தலைப்பின் கீழ் சரக்குகளின் மாய்மாலத் தன்மைக் கோட்பாட்டில் மார்க்ஸ் மீண்டும் சமன்பாட்டை பகுப்பாய்வு செய்கிறார் ஆனால் வேறொரு கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்கிறார்.

பிரிவு ஒன்று மற்றும் இரண்டில் சமன்பாட்டில் என்ன வெளிப்படுத்தப்படுகிறது, என்று ஆய்வு செய்த அவர் பிரிவு மூன்றில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்று ஆய்வுசெய்கிறார்.  நான்காம் பிரிவில் மார்க்ஸ் ஏன் என்ற கேள்விக்கு தனது கவனத்தைத் திருப்புகிறார்.

அரசியல் பொருளாதாரம் உண்மையில், முழுமையின்றி, மதிப்பையும், அதன் அளவையும் பகுப்பாய்வு செய்துள்ளது.  இவவ்வடிவங்களில் மறைந்துள்ள உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. ஆனால் அந்த வடிவங்களில் மறைந்துள்ள உள்ளடக்கம் ஏன் அந்த வடிவத்தை எடுக்கிறது என்று ஒருமுறை கூட கேட்டதில்லை. அதாவது ஏன் மதிப்பில் உழைப்பு வெளிப்படுத்தப்படுகிறது. அதன் அளவு ஏன் அதைத் தயாரிக்கத் தேவையான உழைப்புநேரத்தால் அளவிடப்படுகிறது என ஒருமுறை கூட கேட்டதில்லை.

ஏன் ஒரு சரக்கின் மதிப்பு நேரடியாக உழைப்பு நேரத்தால் வெளிப்படுத்தப்படாமல், அதனுடன் சமன்படுத்தப்பட்ட மற்றொரு சரக்கின் அளவு வடிவில் (இறுதியில் 'பணச் சரக்கின் அளவில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தில்) வெளிப்படுத்தப்படுகிறது என்பதை மையப்படுத்தி இதற்கு முன்னர் முன்வைக்கப்படாத ஒரு தத்துவார்த்தக் கேள்வியை, ஏன் என்பதை மையமாக வைத்து மார்க்ஸ் எழுப்புகிறார்.

சரக்கின் மாய்மாலத்தன்மைக் கோட்பாடு பணம் தொடர்பாக, மதிப்பு ஏன் பணத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வுசெய்கிறது. மதிப்பு வடிவத்தின் கோட்பாடு எப்படி பணம் மதிப்பை வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வுசெய்கிறது.

  (தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (7)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

சரக்கின் மதிப்புக் கோட்பாட்டில் சரக்கு இன்னும் இயக்கத்தின் செயல்முறைக்குள் நுழையவில்லை. விற்பவரின் கையிலிருந்து வாங்குபவரின் கைக்கு இடம் மாறவில்லை. சரக்கின் பயன் மதிப்பின் ஈடேற்றத்தையும், மதிப்பின் ஈடேற்றத்தையும் அதில் மார்க்ஸ் ஆராயவில்லை, அவற்றிற்கிடையிலான முரண்பாட்டையும், அந்த முரண்பாட்டைப் பணம் எவ்வாறு களைகிறது என்பதையும் ஆய்வுசெய்யவில்லை. பரிமாற்ற செயல்முறைக்கானக் கோட்பாட்டுப் பகுப்பாய்வில் தான் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முதலில் எழுப்பப்படுகின்றன.

பணத்தின் தோற்றம் மதிப்புக் கோட்பாட்டில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் அது பணம்  'எப்படி' உருவாக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டுள்ளதே ஒழிய 'எதனூடாக' என்பதில் அல்ல. தங்கம் எவ்வாறு அதன் இயற்கை வடிவத்திலே மதிப்பின் அளவீடாகச் செயல்படும் வகையில் என்ற குறிப்பிட்ட சரக்காகப் பொதுச்சமதையாகிறது என்பது ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. எதனூடாக பணம் அவசியமாகிறது, உருவாக்கப்படுகிறது என்பது குறித்து கவனம் செலுத்தவில்லை.

மதிப்புக் கோட்பாட்டில் பணம் குறித்த ‘எப்படி’ என்ற கேள்வியை மார்க்ஸ் பகுப்பாய்வு செய்கிறார். சரக்குகளின் மாய்மாலத்தன்மைக் கோட்பாட்டில் பணம் குறித்த ‘ஏன்’ என்றக் கேள்வி குறித்துப் பகுப்பாய்வு செய்கிறார்.  அதேசமயம் பரிமாற்ற செயல்முறைக் கோட்பாட்டில் அவர் பணம் குறித்தஎதனூடாக’ என்றக் கேள்வியை ஆய்வு செய்கிறார்.

பணம் குறித்த முறையானக் கோட்பாட்டை முன்வைக்கும் அத்தியாயம் மூன்றுக்கு முன் அத்தியாயம் இரண்டின் முடிவில் பணம் குறித்த இறுதிக் கருத்தில் மார்க்ஸ் எழுதுகிறார்:

பணம் ஒரு சரக்கு என்பது அதைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதன் இறுதி வடிவத்திலிருந்து தொடங்குபவர்களுக்கு மட்டுமே ஒரு கண்டுபிடிப்பு ஆக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில்அந்தக் காலத்தில் அது சிறப்பிற்குரியது - பணத்தின் பகுப்பாய்வின் முதல் படி, பணம் ஒரு சரக்கு என்ற கண்டுபிடிப்பு நீண்ட காலத்திற்குமுன்னே அடையப்பட்டது. ஆனால் இது வெறும் முதல் படி தானே தவிர வேறொன்றும் இல்லை. பணம் ஒரு சரக்கு என்பதைப் புரிந்து கொள்வது கடினமானது இல்லை. ஆனால் எப்படி, ஏன், எதன் மூலம் [ஜெர்மனில்-wie, warum, wudurch] (what, why, through what’)  ஒரு சரக்கு பணமானது என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது.

இந்த மூன்று கடினமானக் கேள்விகள் பற்றிய மார்க்ஸின் குறிப்பு அவர் அதற்கான விடைகளை வெற்றிகரமாக கண்டடைந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அவை எங்கே சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான குறிப்பு எதையும் மார்க்ஸ் அளிக்கவில்லை.

எப்படி, ஏன், மற்றும் எதன் மூலம் என்ற கேள்விகளுக்கு மார்க்ஸ் முறையே, அத்தியாயம் ஒன்றில் பிரிவு மூன்று, பிரிவு நான்கு மற்றும் அத்தியாயம் இரண்டில். பதிலளித்தார் என்பது என் கருத்து. இந்த வாக்கியத்தில் மூன்று பிரச்சனைகளுக்கும் மார்க்ஸ் தீர்வளித்த வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில் ஏன் சரக்கின் உரிமையாளரின் தேவை/விருப்பம் பிரித்து விலக்கப்பட்டுள்ளது.

(கோசோ யூனோவின் பார்வைக்கு ஒரு பதில்)

மதிப்பு வடிவ கோட்பாடு, பரிமாற்ற செயல்முறையின் கோட்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அவற்றிற்கிடையிலான வேறுபாட்டிலிருந்துத் தொடங்குவது இயல்பானது (மற்றும் வசதியானது என்று நினைக்கிறேன்). உடனடியாக வெளிப்படையாகத் தெரியும் கருத்து என்னவென்றால், பரிமாற்ற செயல்முறையின் கோட்பாடு சரக்கின் உரிமையாளர் பற்றிய விளக்கத்துடன் தொடங்குகிறது. மார்க்ஸ் சரக்கின் உரிமையாளர் ஆற்றிய அடிப்படைப் பாத்திரத்தையும், ஒரு குறிப்பிட்டப் பொருளுக்கான அவரது விருப்பத்தையும் முன்வைக்கிறார். சரக்கு உரிமையாளரின் தேவையால் ஆற்றப்படும் இந்த பாத்திரம் மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில் இருந்து விலக்கிப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை கவனமாக படிப்பவர்கள் கவனித்திருப்பார்கள். உண்மையில் அதிலிருந்து தான் கேள்வி தொடங்குகிறது.

சரக்கு உரிமையாளரின் தேவையின் பாத்திரத்தைத் தவிர்த்து மதிப்பு வடிவத்தைப் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி உள்ளது. சரக்கு உரிமையாளர் இல்லாமல் ஒரு சரக்கு இருக்கமுடியாது என்பதால்  மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில் இருந்து ஏன் சரக்கின் உரிமையாளர் வகிக்கும் பங்கு நீக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் உள்ளது. இந்தக் கேள்விகளை முழுமையாக ஆராயும் போது பணம் பற்றிய புரிதலுக்கான மதிப்பு வடிவக் கோட்பாடு, பரிமாற்ற செயல்முறைக் கோட்பாட்டின் முக்கியத்துவம் தெளிவுபடும்.

கோசோ யூனோ உறுதியாக சரக்கின் உரிமையாளரின் தேவை விலக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினார். நான் பலருடன் சேர்ந்து மாறாக வாதிட்ட போதும்,  இறுதியில் யூனோவை இணங்க வைக்க எங்கள் தரப்பால் முடியவில்லை.

  (தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (8)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

சரக்கின் உரிமையாளரின் தேவை/விருப்பம் மதிப்பு வடிவக் கோட்பாட்டில் இருந்து விலக்கப்படக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கோசோ யுனோ பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஆனபோதும் பின்வரும் மூன்று வாதங்கள் அவருடைய கோட்பாட்டிற்கு அடிப்படையானவை என்று எனக்குத் தோன்றுகிறது.

1. மதிப்பின் எளிய வடிவத்தில், ஒரு குறிப்பிட்ட சரக்கு ஏன் சமதை வடிவத்தில் உள்ளது என்பதை என்ற கேள்வியை மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் உரிமையாளரின் தேவை/விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாது.

பின்வரும் சமன்பாட்டில், '20 கெஜம் துணி =1 கோட்',  துணியின் உரிமையாளர் விரும்பும் பொருளாக கோட் இருப்பதால் இங்கு கோட் சமதை வடிவத்தில் உள்ளது. இதற்கு மாறாக ஒப்பீட்டு வடிவத்திலுள்ள சரக்கு கருத்தியல் ரீதியாக உள்ளபோது, சரக்கின் உரிமையாளர் உண்மையில் இன்னும் அங்கு தோன்றவேயில்லை. இந்த சிந்தனை முறையை பின்பற்றும் போது தான் . மதிப்பு வடிவத்தின் அகவயமானப் புரிதல் சாத்தியமாகும்

2. சரக்கின் உரிமையாளரைக் கருத்தில் கொள்ளாமல் நீக்கிவிட்டு ஒரு சரக்கு ஏன் மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்திலும் மற்றொறு சரக்கு ஏன் சமதை வடிவத்தில் உள்ளது என்பதையும் புரிந்துகொள்வது சாத்தியம் இல்லை. ஒரு சரக்கு  ஒரு வடிவத்தில் இருந்தாலும் மற்றொறு வடிவத்திலும்  இருந்தாலும் அனைத்தும் ஒன்றுதான் என்று இதற்குப் பொருளாகிவிடும். மதிப்பு வடிவத்தின் செயல் முனைப்பான வெளிப்பாடு சரக்கு உரிமையாளரின் விருப்பத்தைப் பொறுத்தே அமைகிறது. சரக்கு உரிமையாளரின் இருப்பினால் தான் ஒரு குறிப்பிட்ட சரக்கு ஒப்பீட்டு வடிவத்தில் உள்ளது

3. பொதுச் சமதை வடிவத்திற்கும், பண வடிவத்திற்கும் இடையிலான வேறுபாடு சரக்கின் உரிமையாளரின் தேவையை நாம் கருத்தில் கொள்ளும்போது தான் தெளிவாகிறது. பொதுச் சமதை பணமாக மாறும்போது ஒரு சரக்கு அதன் உள்ளார்ந்த பயன் மதிப்பிற்காக விரும்பப்படுகிறதா, அந்த அடிப்படையில் அது மற்றொரு சரக்கின் மதிப்பை வெளிப்படுத்துகிறதா என்ற உறவினால் வரையறுக்கப்படும் நிலை அதன் பிறகு இருக்காது. இந்தப் பண்பை ஒதுக்கி வைத்தால், பொது சமதை வடிவத்திற்கும் பண வடிவத்திற்கும் இடையிலான அத்தியாவசியமான வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

யூனோவின் முதல் வாதம்

மதிப்பின் எளிய வடிவத்தில், ஒரு குறிப்பிட்ட சரக்கு ஏன் சமதை வடிவத்தில் உள்ளது என்ற கேள்வியை ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் உரிமையாளரின் தேவையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாது. சரக்கின் உரிமையாளரின் தேவையால் ஆற்றப்படும் பங்கு மதிப்புக்கோட்பாட்டில் இருந்து விலக்கப்படவேண்டும் என்று கருதுவது தவறாகும்.

சரக்கு உரிமையாளரின் தேவையை விலக்குவதற்கு எதிரான யுனோவின் முதல் வாதத்தை ஹைரோன் விவாத கூட்டாய்வில் அவர் தெரிவித்த சில கருத்துகளில் வெளிப்படுத்தினார்

ஒரு குறிப்பிட்ட சரக்கு ஏன் சமதை வடிவத்தில் உள்ளது என்பதை மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் உரிமையாளரின் தேவை/விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தாலும் கூட இந்த பிரச்சினை பரிசீலிக்க வேண்டிய மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டுடன் தொடர்புடையதா என்பதை நாம் கருதவேண்டும்.

 யூனோவுடனான எனது கருத்து வேறுபாடு பிந்தைய பிரச்சினையைப் பற்றியது, முந்தையது அல்ல, எனவே விவாதம் பிந்தையதைப் பற்றிய புரிதலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கேள்வியைப் பற்றிய எனது அடிப்படைக் கருத்தைக் கூறுவதன் மூலம் தொடங்குவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மதிப்பு வடிவக் கோட்பாட்டின் நோக்கம் ஒரு சரக்கின் மதிப்பு எந்த வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதாகும். ஒரு சரக்கின் மதிப்பு உண்மையில் வெளிப்படும் வடிவத்தை மதிப்புச் சமன்பாட்டை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கண்டடைகிறோம். அந்த ஆய்வில் மதிப்பு சமன்பாடு ஒரு குறிப்பிட்ட ஒன்றாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது, இதுவே  அரசியல் பொருளாதார ஆய்வுமுறைக்கான அறிவியல் அணுகுமுறை. இது மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டிற்கு தனித்துவமானது அல்ல. உண்மையில், அத்தியாயம் 1ல் உள்ள சரக்கின் முழுமையான பகுப்பாய்விற்கும் இது பொருந்தும்.

  (தொடரும்)

 

 

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (9)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மூலதனத்தின் முதல் அத்தியாயத்தின் பிரிவு ஒன்று மற்றும் இரண்டில், சமன்பாட்டில் உள்ள இரண்டு சரக்குகளுக்கிடையே அளவடிப்படையில் சமமான உள்ள காரணி குறித்து மார்க்ஸ் கவனம் செலுத்துகிறார். அதற்கு மாறாக பிரிவு மூன்று, சமன்பாட்டின் இடதுபுறத்தில் உள்ள சரக்கும், வலது புறத்தில் உள்ள சரக்கும் எப்படி வெவ்வேறு பாத்திரங்கள் வகிக்கின்றன என்பதை ஆராய்கிறது,

மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில், மார்க்ஸ்  '20 கெஜம் துணி = 1 கோட்' சமன்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார். அதன் பகுப்பாய்விலிருந்து அந்த சமன்பாட்டின் கட்டமைப்பில் துணி கோட்டின் மூலம் தனது மதிப்பை வெளிப்படுத்துவதையும், கோட் துணியின் மதிப்பு வெளிப்படுத்துவதற்கானப் பொருளாக செயல்படுவதையும் கண்டறிந்தார். ஆகவே துணி ஒரு செயல்முனைப்பானப் பங்கு வகிக்கிறது. கோட் ஒரு செயல் முனைப்பற்றப் பங்கு வகிக்கிறது. இதைத் தனது தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, ஒரு சரக்கின் மதிப்பு மற்றொரு சரக்கின் பயன் மதிப்பில் வெளிப்படுத்தப்படும் பொறிமுறையை மார்க்ஸ் வெளிப்படுத்துகிறார். மதிப்பு வெளிப்பாட்டின் பொறிமுறையில் மதிப்பு வெளிப்பாட்டின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்.

மூலதனத்தின் மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டின் சாராம்சமாக நான் புரிந்துகொண்டது இதுதான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோட் (வேறு சில பொருட்களாக இல்லாமல்) ஏன்  சமதை வடிவத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள துணி உரிமையாளரின் தேவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், அது குறித்து சிந்திப்பது மதிப்புக் கோட்பாட்டிற்கு சம்மந்தமில்லாதது. மதிப்பு வடிவத்தை பகுப்பாய்வு செய்யும்போது சமன்பாட்டை  குறிப்பிட்ட ஒன்றாக எடுத்துக் கொள்வதும், அதற்குள் மதிப்பு வெளிப்பாட்டின் தொடர்பை தெளிவுபடுத்தவுமே போதுமானது. இந்தப் பகுப்பாய்வு சமன்பாட்டின் வலதுபுறத்தில் உள்ள சரக்கின் பயன்மதிப்பில் தன் மதிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இடதுபுறத்தில் உள்ள சரக்கு, எவ்வாறு அதன் பயன் மதிப்பிலிருந்து வேறுபட்ட ஒரு வடிவத்தை எடுக்கிறது என்பதை விளக்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், இரண்டு சரக்குகளுக்கும் இடையிலான இந்த உறவை தெளிவுபடுத்த வேண்டியதே இங்கு அவசியமாக உள்ளது. வேறு எதையும் கருத்தில் கொண்டால் அது தேவையற்றது மட்டுமல்ல, அது தெளிவாக பதிலளிக்கக்கூடிய வடிவத்தில் கேள்வியை எழுப்பும் திறனையும் தீவிரமாகத் தடுக்கும்.

ஒரு குறிப்பிட்ட சரக்கு ஏன் சமதை வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, என்ற கேள்வியானது, எவ்வாறு ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் மதிப்பு சமதை வடிவத்தில் உள்ள சரக்கின் பயன் மதிப்பால் வெளிப்படுத்த முடிகிறது என்ற கேள்வியிலிருந்து தெளிவாக வேறுபடுத்துவதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். இவை இரண்டும் இரண்டு வெவ்வேறு கேள்விகள். அவற்றைத் தனித்தனியாகப்  பரிசீலிக்க வேண்டும்.

சரக்கு உரிமையாளரின் தேவையால் ஆற்றப்படும் பங்கு விலக்கப்பட்டுள்ளது என்று கூறுவது, மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் பயன் மதிப்பு வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தையோ, அல்லது சமதை வடிவத்தில் உள்ள சரக்கின் குறிப்பிட்ட பயன் மதிப்பு வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தையோ நிச்சயமாக மறுக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட பயன் மதிப்பாக. மட்டுமே கோட் துணியின் மதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆனால் இவ்விடத்தில் கோட் துணி உரிமையாளரின் ஆடையாகும் ஒரு பயனுள்ள பாத்திரத்தை வகிக்கவில்லை. மாறாக, அதன் இருப்பில் மனித உழைப்பின் ஈடேற்றம் பெற்ற வடிவமாக (அல்லது மனித உழைப்புச் சக்தியின் செலவு முறையாக) முக்கியத்துவம் பெற்ற தையல் உழைப்பால் துணியின் மதிப்பை வெளிப்படுத்தமுடிகிறது.

இங்கு சரக்கினுடைய குறிப்பிட்டப் பயன்மதிப்பு அருவமாக்கப்பட்டுப் பொதுவான பயன்மதிப்பாகக் கருதப்படவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்டப் பயன்மதிப்பு அதன் இருப்பில் பயனுள்ள பொருளாக செயல்படுவதிலிருந்து வேறுபட்ட ஒரு இருப்பு வடிவில் தோன்றுகிறது. இந்த இருப்பு வடிவில் சமதையாகப் பங்கு வகிக்கிறது. ஒரு பொதுவான பயன்மதிப்பைப் பெறும் வகையில் பயன்மதிப்பின் குறிப்பிட்ட பண்புகளை நாம் அருவமாக்கவில்லை. மாறாக உட்பொதிந்த மனித உழைப்பாக சரக்கு தூய்மையாகும் விதத்தில், மனிதத் தேவைக்கு தொடர்புடைய பயனுள்ள பொருள் என்ற சரக்கின் பண்பை அருவமாக்கம் செய்கிறோம். இந்த இருத்தலில், மதிப்பின் தூய உருவமாக, அது முதல் முறையாக குறிப்பிட்ட மற்றொரு சரக்கின் மதிப்புப் பண்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் மதிப்புக் கண்ணாடியாக மாறுகிறது.

  (தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (10)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

தனிநபர்களின் தேவைகளிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டப் பொதுவானப் பயன்மதிப்பு என யூனோ குறிப்பிடும் போது ஒரு வேளை அது மேலே கூறப்பட்ட விதத்தில் இல்லாமல் (சரக்கினுடைய குறிப்பிட்டப் பயன்மதிப்பு அருவமாக்கப்பட்டுப் பொதுவான பயன்மதிப்பாகக் கருதுதல்) ஒருவரால் விரும்பப்படும் எதை வேண்டுமானாலும் பணத்தைக் கொண்டு வாங்கலாம் என்ற பொருளில் பணத்தின் பொதுவான பயன்மதிப்பை, பொதுவானப் பரிமாற்ற மதிப்பைக் குறிப்பிட்டிருக்கலாம். மனித விருப்பத்தைப் பிரிப்பதால் குறிப்பிட்ட பயன் மதிப்பின் பாத்திரம் மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது என்று யூனோ தவறாகப் புரிந்துகொள்கிறார். இதனால் தான் சமதை மதிப்பை இவ்விதத்தில் பார்த்தால் எளிய மதிப்பு வடிவத்தைப் புரிந்துகொள்ளமுடியாது என யூனோ நினைக்கிறார். இது தான் யூனோவின் பார்வை என்பது உண்மையெனில் அது தவறான புரிதலின் அடிப்படையிலானது என்பது இதுவரை குறிப்பிடப்பட்ட கருத்துக்களிலிருந்து தெளிவாகியிருக்கும்.

மதிப்பு வெளிப்பாட்டின் அடிப்படைப் புதிர் - ஒரு சரக்கின் மதிப்பை ஏன் மற்றொரு சரக்கின் பயன் மதிப்பால் வெளிப்படுத்தமுடிகிறது என்பது பற்றியது. சமதை வடிவத்தில் இருக்கும் சரக்கின் பயன் மதிப்பைப் பொதுவானப் பயன்மதிப்பாகப் பார்ப்பதன் மூலம் அதற்குத் தீர்வுகாண முடியாது (அதாவது, விருப்பத்துடன் தொடர்புடையதாகப் பார்ப்பதன் மூலம்). மாறாக, மதிப்பு வெளிப்பாட்டின் புதிரை ஆய்வதன் மூலம் மட்டுமே பணத்தின் பொதுவான பயன் மதிப்பை முதலில் புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் மதிப்பு வெளிப்பாட்டின் அடிப்படை உறவை பண வடிவத்திற்குப் பதிலாக எளிமையான மதிப்பின் வடிவத்தில் மார்க்ஸ் மிகச்சரியாக விளக்குகிறார்.

எளிமையான மதிப்பு வடிவப் பிரச்சினையை அனுகும் போது, ஒரே ஒரு சரக்கு மட்டுமே தேவை, அது எந்த வகையிலும் இருக்கலாம். சமன்பாட்டை அமைக்கும்போது, பகுப்பாய்வை மேற்கொள்பவர் அவர் விரும்பும் எந்த சரக்கையும் தேர்வு செய்யலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சரக்கைப் பொருட்படுத்தாது, சமதை வடிவத்தில் வைக்கப்படுவதன் மூலம், அதில் பொதிந்துள்ள தூலமான உழைப்பு, மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் உழைப்புக்குச் சமமாகிறது, அதன் மூலம் இரண்டு சரக்குகளுக்கும் பொதுவான அருவமாக்கப்பட்ட மனித உழைப்பின் தனித்துரிய வடிவமாகிறது. இந்த வழியில், சமதை வடிவில் உள்ள சரக்கின்வடிவம் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கினுடைய மதிப்பின் தனித்துரிய வடிவமாகிறது.

சமன்பாட்டை அமைக்கும்போது, பகுப்பாய்வை மேற்கொள்பவர் அவர் விரும்பும் எந்த சரக்கையும் தடையின்றி தேர்வு செய்யலாம். இந்த அர்த்தத்தில், இந்த அர்த்தத்தில் மட்டுமே, யூனோ சொல்வது போல், 'எதுவும்' சமதை வடிவத்தில் இருக்கலாம். ஆனால் இது சமன்பாட்டை அமைப்பதற்கு மட்டுமே பொருந்தும்.

எப்படி யூனோ; சரக்கின் உரிமையாளரின் விருப்பம் விலக்கப்பட்டால், அந்த வடிவத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் அது ஏற்கனவே மதிப்பின் விரிவாக்கப்பட்ட வடிவமாக இருக்கும் என்று கூறுகிறார் என்பதை புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இருந்தது. கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் சமதை வடிவத்தில் ஒரே ஒரு சரக்கு மட்டுமே உள்ளது (நாம் எளிய மதிப்பு வடிவத்தைப் பரிசீலிக்கும் வரை) மேலும் அந்த ஒற்றைச் சரக்கும் நிலைநிறுத்தப்பட்டதாக உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, யூனோ எப்படி எளிய மதிப்பு வடிவம் 'ஏற்கனவே விரிவாக்கப்பட்ட மதிப்பு வடிவமாக இருக்கும்'. என்று நினைக்க முடியும் என்பது தெளிவாகவில்லை – (குறைந்தபட்சம் என் மனதில்). அதே சமயம் துணி முதலில் அந்த இருப்பில் அதன் மதிப்பை 'மதிப்பு உருவத்தை' வெளிப்படுத்த முடிகிறது என்பது கோட், ஒரு குறிப்பிட்ட பயன் மதிப்பாக அல்லாமல் பொதுவான பயன் மதிப்பாக மதிப்பின் வடிவமாக மாறுவதைக் குறிக்கிறது என்று அவர் தவறாகக் கருதியிருக்கலாம்.

  (தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (11)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

யூனோவின் இரண்டாவது வாதம்

நான் நினைக்கிறேன், துணியின் உரிமையாளர் கோட்டை விரும்பாவிட்டால், துணியால் கோட்டின் பயன் மதிப்பில் அதன் மதிப்பை வெளிப்படுத்த முடியாது. இந்த விருப்பத்தையும் நீக்கிவிட்டால் கோட்டாலும் அதன் மதிப்பைத் துணியில் வெளிப்படுத்த முடியும், அதனால் இரண்டு சரக்குகளாலும் பரஸ்பரமாக ஒப்பீட்டு வடிவத்தில் இருக்கமுடியும் என்ற நிலை உருவாகும் என்று யூனோ கருதுகிறார். ஆனால் இங்கு அந்த அடிப்படையில் ஒப்பீட்டு வடிவம் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

 எந்தக் குறிப்பிட்ட சரக்கு சமதை வடிவத்தில் உள்ளது என்பது ஒப்பீட்டு வடிவத்திலுள்ள சரக்கின் உரிமையாளரால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று அவர் கருதுகிறார்.

அடிப்படையில், யூனோ பின்வருவனவற்றைச் சொல்ல முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். நாம் மதிப்புச் சமன்பாட்டின் அமைப்பை பார்த்தால், சமன்பாட்டின் இடது புறமும், வலது புறமும் உள்ள சரக்குகளின் பொருளும் - அவற்றிற்கிடையிலான எதிர்மறையான உறவும் - சரக்கின் உரிமையாளரைக் கருத்தில் கொள்ளாமல் கூட தெளிவாகத் தெரியும். ஆனால் சரக்கின் உரிமையாளரைக் கருத்தில் கொண்டால் மட்டுமே, ஏன் ஒரு குறிப்பிட்ட சரக்கு (துணி) ஒப்பீட்டு வடிவமாக இடது புறத்தில் உள்ளது என்பதையும், மற்றொரு சரக்கு (கோட்) சமதை வடிவமாக வலது புறத்தில் உள்ளது என்பதையும் நாம் அறியமுடியும். இது புரிந்து கொள்ளப்படவில்லை எனில் கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கும் அதன் தலைகீழ் வடிவத்திற்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்காது. இரண்டும் வேறு வேறு வழியில் அதே உண்மையை வெளிப்படுத்துகிறது என்றாகிவிடும். இதனால் மதிப்பு வடிவத்தை அகவயமாகப் புரிந்துகொள்ள இயலாநிலையை அல்லது அந்த வடிவத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள இயலாநிலையை ஏற்படுத்தும்.

பண வடிவத்தின் புதிருக்கானத் தீர்வுகாண  முதலில் நாம் எப்படி ஒரு சரக்கின் பயன்மதிப்பால் மற்றொரு சரக்கின் மதிப்பை வெளிப்படுத்துவது சாத்தியமாகிறது என்ற அடிப்படைக் கேள்விக்கு விடைகாணவேண்டும். நாம் நேரடியாகப் பண வடிவத்தைப் பரிசீலிக்கும் போது பிரச்சனை அந்த வகையில் தோன்றாது. ஏனென்றால், பண வடிவத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சரக்கின் மதிப்பும் குறிப்பிட்ட ஒரு சுயேச்சையான சரக்கில் (தங்கம்) வெளிப்படுத்தப்படுகிறது; இதனால், தங்கத்தின் மர்மமான தன்மை அதன் சிறப்பு சலுகைநிலையிலிருந்து வருகிறது என்பதே முன்னால்  தெரியும்.

எளிமையான மதிப்பு வடிவத்தின் விஷயத்தில் மட்டுமே ஒரு சரக்கின் மதிப்பு அதனுடன் சமப்படுத்தப்பட்ட மற்றொரு சரக்கின் பயன் மதிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும். இதன் மூலமே தூய வடிவில், இது எப்படி சாத்தியம் என்ற முக்கியமான கேள்வியை எழுப்பமுடியும்.

இந்த அடிப்படைப் பிரச்சினையைத்தான் மதிப்பின் எளிய வடிவத்தை பகுப்பாய்வு செய்யும் போது மார்க்ஸ் ஆராய்கிறார். அவர் கோட் ஏன் துணிக்கு சமதை வடிவமாக முன்வைக்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பவில்லை. துணியின் உரிமையாளர் தனக்குக் கோட் வேண்டும் என்று விரும்புவதால் தான் கோட்டை சமதை வடிவமாக்குகிறார் என்பது குறித்து கேள்வி இல்லை. இது குறித்து எவ்வளவு நேரம் யோசித்தாலும் அடிப்படையான பிரச்சனையை தெளிவுபடுத்துவதற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. சரக்கின் உரிமையாளர் வகிக்கும் பாத்திரம் தெளிவுபடுத்தப்பட்ட பிறகும் கூட. அந்தப் பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது.

சரக்கு உரிமையாளரின் முடிவுசெய்ததால் தான் ஒரு குறிப்பிட்ட சரக்கு சமதை வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இயல்பான மனித அறிவாற்றலால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மாறாக, சமதை வடிவத்தில் உள்ள சரக்கின் பயன்மதிப்பு ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் மதிப்பாகும் செயல்முறை சரக்கின் உரிமையாளரின் உணர்வுநிலையைச் சாராமல் சுயேச்சையாக நடைபெறுகிறது. இதில் எழுவாய் நிலையில் இருப்பது சரக்கு தானே ஒழிய மனிதனல்ல. மனித மொழிக்கு பதிலாக அந்த மாய்மால உலகில் ‘சரக்குகளின் மொழிபேசப்படுகிறது.

 (தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (12)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

துணியின் உரிமையாளர் விரும்பினால் தவிர துணியின் மதிப்பை கோட் அதன் பயன் மதிப்பில் வெளிப்படுத்த முடியாது. துணியின் உரிமையாளரின் விருப்பம் விலக்கப்பட்டால் துணியும் அதன் பயன்மதிப்பால் கோட்டின் மதிப்பை வெளிப்படுத்தமுடியும். சமன்பாட்டை எதிர்ப்பக்கத்திலும் தலைகீழாகத் திருப்பமுடியும் என்று யூனோ கருதுகிறார்.

சமதை வடிவத்தில் உள்ள சரக்கின் பயன்மதிப்பு ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள சரக்கின் மதிப்பாகும் செயல்முறை சரக்கின் உரிமையாளரின் உணர்வுநிலையைச் சாராமல் சுயேச்சையாக நடைபெறுகிறது. இதில் எழுவாய் நிலையில் இருப்பது சரக்கு தானே ஒழிய மனிதனல்ல. மனித மொழிக்கு பதிலாக அந்த மாய்மால உலகில் ‘சரக்குகளின் மொழிபேசப்படுகிறது.

இதனால் தான் மதிப்பு வடிவத்தின் புதிரின் மையத்தில் உள்ள சிக்கலைக் கருத்தில் கொள்ளும் போது சரக்கின் உரிமையாளரை விலக்கி சமன்பாட்டை

குறிப்பிட்ட ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் தான் மார்க்ஸ் ‘20 கெஜம் துணி = 1 கோட் என்ற சமன்பாட்டை தனது ஆய்வுக்கான அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அதில் உள்ள மதிப்பு வெளிப்பாட்டின் உறவை அச்சமன்பாட்டின் வடிவத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தெளிவுபடுத்துகிறார். அந்தப் பகுப்பாய்வின் மூலம் மார்க்ஸ் அதற்கு முன் பொருளாதார வல்லுனர்களால் அறியப்படாத, மதிப்பு வெளிப்பாட்டின் ‘சுற்றடியான வழியைக் கண்டுபிடிக்கிறார். அதன் மூலம் மதிப்பு வடிவத்தின் அடிப்படையான புதிரை  கண்டறிகிறார்,

இந்தக் கருத்துகளை சரியான முறையில் புரிந்து கொண்டால், யூனோவின் பாணியில் யோசித்து எளிய மதிப்பு வடிவத்தின் நோக்கத்தை, துணியின் உரிமையாளர் விரும்பினால் தவிர துணியின் மதிப்பை கோட் அதன் பயன் மதிப்பில் வெளிப்படுத்த முடியாது என்று கருதுவது எவ்வளவு தவறான புரிதல் என்பது தெளிவாகிறது. இந்த விருப்பமும் விலக்கப்பட்டால் கோட்டும் அதன் மதிப்பைத் துணியில் வெளிப்படுத்த முடியும், என்பதால் "ஒப்பீட்டு" வடிவம் பரஸ்பரமாக மாறும். என்ற யூனோவின் கவலைக்கு அவசியமேயில்லை என்பதும் தெளிவாகிறது.

நாம் 20 கெஜம் துணி = 1 கோட் என்ற சமன்பாட்டை கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருத்தில் கொண்டால் , துணியின் உரிமையாளரின் தேவையைக் கருதாதபோதும்கூட , மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தில் உள்ள துணி (கோட் அல்ல) அதன் சொந்த மதிப்பை ஒரு சரக்காக வெளிப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது தெளிவாகும். கோட்டும் அதன் மதிப்பை துணியில் வெளிப்படுத்த முடியும்' என்று கற்பனை செய்ய எந்தக் காரணமும் இங்கில்லை.

மேலும், துணிக்கும் கோட்டுக்கும் இடையேயான பரிமாற்றம் ஒரு தனி சம்பவமாக இல்லாமல், மீண்டும் மீண்டும் நடக்கும் என்று நாம் கருதினால் 1 கோட்டுக்கு 20 கெஜம் துணி என்பது துணி உரிமையாளரின் தேவையின் எளிய வெளிப்பாடு அல்ல, மாறாக வாடிக்கையான பரிமாற்ற விகிதமாக புறவயமாக நிறுவப்பட்டதையேக் குறிக்கிறது.

யூனோவின் சிந்தனை முறையில் மதிப்பு வெளிப்பாட்டின் எழுவாய் ஒரு மனிதனாக உள்ளது அது சரக்காக இருக்கமுடியாது என்பதாக உள்ளது. சரக்கின் உரிமையாளரைக் கருத்தில் கொள்ளாமல், மதிப்பு வெளிப்பாட்டில் எந்தச் சரக்கு எழுவாய் நிலையில் உள்ளது. எந்தச் சரக்கு பயநிலை வடிவில் உள்ளது என்பதை அறிய இயலாது என்று யூனோ கருதுகிறார்.

மதிப்பு வெளிப்பாட்டின் எழுவாய் உண்மையில் ஒரு மனிதன் என்று சொல்ல முடியுமா? தர்க்க அடிப்படையில் சரக்கின் உரிமையாளரைக் காட்டிலும், சரக்கு தான் எழுவாய் நிலையில் இருப்பது சாத்தியம் என்று கருதுகிறேன். மேலும், ஆய்வுமுறை நிலைப்பாட்டின் அடிப்படையில் இதுவே  சரியானது.

 (தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (13)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

முதலில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், மதிப்பு வெளிப்பாட்டின் சமன்பாடான, '20 கெஜம் துணி = 1 கோட்', துணியின் உரிமையாளரால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், மதிப்பு சமன்பாட்டில் வெளிப்படுத்தப்படுவது துணியின் மதிப்பே ஒழிய துணியின் உரிமையாளரின் மதிப்பு அல்ல.

 துணியின் மதிப்பு வெளிப்பாடு ஏன் அவசியம் என்பதை நாம் கருத்தில் கொண்டால், அது துணி சரக்காக இருக்கும் முக்கியமானப் பண்பிலிருந்து உருவாகிறது என்பதைக் காண்கிறோம். அதாவது, ஒரு சரக்கு என்பது இயல்பிலேயே இரட்டைத் தன்மையைக் கொண்டுள்ளது, பயன் மதிப்பு மற்றும் மதிப்பின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது. சரக்கின் இயற்கையான வடிவமாக பயன் மதிப்பு  மட்டுமே உள்ளதே ஒழிய மதிப்பு வடிவம் அல்ல.  

எனவே, ஒரு பொருள் சரக்காக மதிப்பின் வடிவத்தைக் கூடுதலாகப் பெற வேண்டும். மதிப்பு வெளிப்பாட்டுக்கானத் தேவை சரக்கின் இயல்பிலிருந்தே உருவாகிறது. ஆனாலும் சரக்கால் இந்த அவசியத்தை உணர்ந்து, அதற்கான செயலலில் ஈடுபட முடியாது. சரக்கின் உரிமையாளர், 'துணியின் மதிப்பு’ செயல்முனைப்புடன் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்; அதேபோல், ஒரு சரக்கின் மீது விலைக் குறியீட்டை ஒட்டுபவரும் சரக்கின் உரிமையாளர் தான். இருப்பினும், இது சரக்கின் உள்ளார்ந்த மதிப்பின் வெளிப்பாடு என்பதால், சரக்கு உரிமையாளர் தன் விருப்பத்திற்கிணங்க தன்னிச்சையான செயலில் ஈடுபடவில்லை. மாறாக, உரிமையாளர் சரக்கின் இன்றியமையாத தன்மையை தனது சொந்த உள்ளுணர்வாகப் பெற்று அந்த அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறார், எனவே, இங்கு முதன்மையான எழுவாயாக சரக்கே உள்ளது, அதேசமயம் உரிமையாளர் ஒரு எந்திரனாக செயல்படுகிறாரே தவிர வேறொன்றுமில்லை. இதனால்தான் சரக்குகள் ஆளுருவம் பெறுவதையும், ஆட்களின் பிழை அடையாளம் குறித்தும் . மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

சரக்குகள் சாதாரண சரக்குகள் என்றும் பணச் சரக்கு என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.  அதனால் c1–c2 ஆக மாற்றப்படும் செயல்முறை இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. c1-m (விற்றல்) மற்றும் m-c2 (வாங்கல்) என இரண்டு தனித்தனி செயல்முறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு செயல்முறைகளில் முக்கியத்துவத்தை ஒவ்வொன்றாக ஆராய்வதன் மூலம் நாம் தொடங்க வேண்டும்.

c1-m நிகழ்வில் c1ன் மதிப்பு ஈடேற்றம் அடைகிறது.  அதில் சரக்கின் மதிப்பு

 அதற்கு பொது சமதையாக அங்கீகரிக்கப்பட்டப் பணமாக c1 (c1=m) ஈடேற்றம் அடைகிறது. மாறாக m-c2 இன் முக்கியத்துவம் முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் இதில் m ஆகியப் பணமானது ஏற்கனவே முறையாக நிர்ணயம் செய்யப்பட்ட பொதுச் சமதையாக உள்ளது. அதன் இயற்கையான வடிவமே மதிப்பின் பொதுவான செல்லுபடியாகும் உருவமாக உள்ளது. அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்றொரு சரக்கின் பயன் மதிப்பை மதிப்பின் வடிவமாக செயல்படுத்தி அதன்  மூலம் பணத்தின் மதிப்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே மதிப்பு வடிவத்தில் பணமாகிய m அதன் ஒப்பீட்டு  வடிவத்தின் நிலையை ஆக்கிரமிக்க முடியாது.

சரக்கின் உரிமையாளரின் தேவையின் வெளிப்பாடு(c1=c2 க்குள் உள்ளது) மதிப்பு வடிவத்தை உருவாக்கவில்லை.மாறாக, இது மதிப்பு வடிவத்தை முழுமையற்றதாக செய்யும் ஒரு பலபடித்தான காரணியாகும், அதனால் மதிப்பு வடிவம் அதன் எளிய மதிப்பு வடிவத்தில் இருக்க முடியாது: அது பண வடிவமாக உருவாக வேண்டும், அங்கு மதிப்பு வடிவம்  m=c2 என்று தனியாக சுயேச்சையான வடிவமாக மாறும் பலபடித்தான காரணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் முழுமையடைகிறது.

c1=c2 பகுப்பாய்வு செய்வதில் நமது நோக்கம் மதிப்பு வடிவத்தைத் தெளிவுபடுத்துவதாக இருந்தால் மதிப்பு வடிவத்தை, நாம் அதிலிருந்து சுயேச்சையாக வரும் c1=m (அதாவது, பண வடிவம்) வடிவத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக சுயேச்சையாக வரும் காரணியான m=c2வை அல்ல.இது c1=c2 க்குள் இருக்கும் பண வடிவத்தின் கருவை வெளிக்கொணர்ந்து,

மூலதனத்தின் (நூல்) மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியக் குறிப்பை நமக்கு வழங்குகிறது. இதை மார்க்ஸ் தன் அசலான கருத்தாக்கங்களில் ஒன்றாகப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

(தொடரும்)

 

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (14)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

மதிப்பு வெளிப்பாட்டின் எழுவாய் / செயப்படுபொருளை அடையாளம் காண்பதில் தோல்வியடைவது சரக்கின் உரிமையாளரின் தேவையை கவனிக்காததன் விளைவு அல்ல அல்லது ஒரு சரக்கு உண்மையில் தோன்றுகிறதா என்பதை சரியாக கவனிக்காததன் விளைவும் அல்ல. மாறாக மதிப்புச் சமன்பாட்டை கொடுக்கப்பட்ட ஒன்றாக எடுத்துக்கொள்ளாததும், சமன்பாட்டின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல் முற்றிலும் மதிப்பின் சாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவாகும்  (இவ்வாறு மதிப்பின் சாரத்தின் கோட்பாட்டு மட்டத்தில் இருப்பது)

யுனோ கவலையுடன் குறிப்பிடுவது போல, எழுவாய்க்கும், செயப்படுபொருளுக்கும் இடையே குழப்பம் இருந்தால், முழுமையான அறிவியல் பகுப்பாய்வு நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதே பிரச்சனையைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் ஒரு குறிப்பிட்ட சமன்பாட்டை கொடுக்கப்பட்ட  ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து மதிப்பு வடிவத்தை தெளிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, மதிப்பு வெளிப்பாட்டின் வடிவத்தை உற்றுநோக்கிப் புரிந்துகொண்டு அதற்குள் மதிப்பு வெளிப்பாட்டின் உறவைப் பிரித்தறிந்து பகுப்பாய்வு செய்யவேண்டும்.

சரக்கின் உரிமையாளரின் தேவையையும், சரக்கின் இருப்பு (அல்லது இன்மை) ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்று யூனோ பரிந்துரைக்கிறார். இது, என் கண்ணோட்டத்தில், ஒரு பிழையைத் தடுக்கும் நம்பிக்கையில் தீவிரமான எதிர்நிலைக்குச் செல்வதாகத் தெரிகிறது. ஒரு தீமையை இன்னொரு தீமையால் ஒருவர் எதிர்த்துப் போராட வேண்டும் என்பது போன்ற சம்பவங்கள் உள்ளன.  ஆனால், குறைந்தபட்சம், இந்த விஷயத்தில் அத்தகைய அணுகுமுறையை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

எழுவாய் ஒரு சரக்காக உள்ளதே தவிர மனிதனாக இல்லை, மனித மொழியின் இடத்தில் 'சரக்குகளின் மொழி' பேசப்படும் ஒரு மாய்மால உலகம் உள்ளது. இதனால் தான் மதிப்பு வடிவத்தின் - புதிரின் மையத்தில் உள்ள சிக்கலைக் கருத்தில் கொள்ளும்போது - சரக்கின் உரிமையாளரை விலக்கி,  ஒரு குறிப்பிட்ட சமன்பாட்டை கொடுக்கப்பட்ட ஒன்றாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

பொது மதிப்பு வடிவத்திலிருந்து பண வடிவத்திற்கான மாற்றமும் சரக்கு உரிமையாளருடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு முன் நிகழ்ந்த மாற்றங்களைப் போலல்லாது இந்த வடிவ மாற்றம் இன்றியமையாத ஒன்றல்ல.

மார்க்ஸ் விளக்குகிறார்:

மதிப்பின் வடிவம் ஏ-யிலிருந்து (ஆரம்ப அல்லது தற்செயல் வடிவத்திலிருந்து) வடிவம் பி-க்கும் (மொத்த அல்லது விரிந்த வடிவத்திற்கும்), வடிவம் பி-யிலிருந்து வடிவம் சி-க்கும் (பொது வடிவத்திற்கும்) மாறும் போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு மாறாக, வடிவம் டி-யில் துணிக்கு பதிலாக தங்கம் பொதுச் சமதை வடிவத்தை எடுத்துள்ளது என்பதைத் தவிர, வடிவம் சி-யிலிருந்து வேறுபடவில்லை. வடிவம் சி-யில் துணிக்கு பதிலாக வடிவம் டி-யில் பொதுச்சமதையாக தங்கம் உள்ளது. இதில் நேரடி பொது பரிமாற்றத்தக்க வடிவத்தைப் பெற்றது முன்னேற்றமாக உள்ளது, வேறுவிதமாகக் கூறினால், சமூக வழக்கங்களால் பொது சமதை வடிவம் இப்போது தங்கத்தின் குறிப்பிட்ட உரு வடிவத்துடன் நிரந்தரமாகப் பின்னிப் பிணைந்துள்ளது

மார்க்சின் பார்வையில், அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றிருந்தபோதும் பண வடிவத்தை நான்காவது வடிவமாக பொது மதிப்பு வடிவத்தில் இருந்து, வித்தியாசமாக அங்கீகரிக்கும் சிக்கலான வேலையை ஏன் மேற்கொண்டார்? முதல் பார்வையில் இது ஒரு அர்த்தமற்ற வேறுபாடு.

யூனோவின் கருத்து என்னவென்றால், பொது மதிப்பு வடிவத்திலிருந்து பண வடிவத்திற்கு மாறுவது பெரும் முக்கியத்துவமுடையது. இவை இரண்டிற்கிடையேயான வேறுபாட்டை சுட்டுக்காட்டியதற்காக அவர் மார்க்ஸைப் பாராட்டுகிறார். ஆனால் வேறுபாட்டின் உண்மையான முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தத் தவறியதற்காக அவரை விமர்சிக்கிறார்.

முக்கிய காரணியை - சரக்கின் உரிமையாளரின் தேவையைக் கருத்தில் கொள்ளாததால் தான் மார்க்ஸால் இதன் முக்கியத்துவத்தைக் கூறமுடியாமல் போனது என யூனோ நினைக்கிறார். இதன் மூலம் சரக்கின் உரிமையாளரின் தேவையை விலக்குவதன் தவறை நிரூபித்தாக நம்புகிறார். ஆனால் அது ஏற்கத்தக்கது அல்ல என்பது இப்போது தெளிவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்

 (தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (15)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா.

யூனோவின் விளக்கத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுச் சமதை வடிவம் பணச் சரக்காக மாறும் போது 'அது நேரடியாகப் பயன்மதிப்பைக் கொண்ட சரக்காக விரும்பப்படும் பொருளாகஇருப்பது பண வடிவத்தின் சிறப்பியல்பு அல்ல. மாறாக, இது மற்ற சரக்குகளுக்கு எதிராக அனைவருக்குமானப் பயன்மதிப்பாக, அதாவது, இது 'பொதுவான பரிமாற்றத்திற்கான சாதனமாக, பொதுவான பயன் மதிப்பாக' செயல்படுவதே அதன் சிறப்பிற்குரியப் பண்பு.

எவ்வாறாயினும், யூனோவின் பார்வையின் படி பரிமாற்றத்திற்கான பொதுவான சாதனமாக சேவை செய்வது, மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டின் கருத்தியல் தீர்மானத்தின் அடிப்படையாக அல்லது முன்மாதிரியாக உள்ளது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை

மதிப்புப் வடிவம் பண வடிவமாக வளர்ச்சிபெறும் போது பணச் சரக்கு ஒரு 'பொதுவான பரிமாற்றத்திற்கான சாதனமாக செயல்படும் தன்மையைப் பெறுகிறது என்பது உண்மைதான். ஆனால் இது நிச்சயமாக மதிப்பின் வெளிப்பாட்டிற்குள்  வரும்  செயல்பாடு அல்ல மாறாக ஒரு பரிமாற்ற செயல்பாட்டில் நிகழ்வது.

இந்தச் செயல்பாட்டை மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டை விரிவுபடுத்துவதற்கான அடிப்படையாகச் செய்வது பிழையான ஆய்வுமுறை. மதிப்பின் அளவுகோலாக பணம் செயல்படுவதை ஆய்வு செய்ய தவறாக சுற்றோட்ட சாதனமாக பணம் செயல்படுவதை அடிப்படையாகக் கருதுவதைப் போலவே இதுவும் தவறானது. பரிமாற்றத்தில் பணத்தின் செயல்பாட்டு வளர்ச்சியின் மூலம் மதிப்பு வெளிப்பாட்டில் பணத்தின் செயல்பாடு இன்னும் அதிகமாக முழுமையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது உண்மை தான்.  ஆனால் முந்தையதை பிந்தையதின் அடிப்படையாகக் கொள்வதை ஏற்க முடியாது.

மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டிற்குள் கருத்தியல் தீர்மானங்கள் மிகவும் அருவமாக்கத்தன்மையுடனும் முறைசார்ந்ததாகவும் உள்ளன. ஆனால் இது ஒரு ஆய்வுமுறைக்கான நிலைப்பாட்டின் அடிப்படையில் அவசியமானது. இதைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் படிப்படியாக நமது புரிதல் முழுமையாகும்.

இது தான் பொது மதிப்பு வடிவத்திற்கும் பண வடிவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நான் புரிந்து கொண்ட விதம். இந்த வேறுபாட்டின் முக்கியத்துவம் சரக்கின் உரிமையாளரின் தேவையைக் கருத்தில் கொள்ளாத போது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சரக்கின் உரிமையாளரின் தேவையைக் கருத்தில் கொள்ளும் போது மதிப்பின் பொது வடிவத்திலிருந்து பணமாக மாறுவதன் கூடுதல் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும், நமது புரிதலும் மேலும் முழுமையாகும் என்பது உண்மைதான்.

இருப்பினும், நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் அந்தக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுவது மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டின் குறிப்பிட்ட பணிக்கான தீர்வைபெற நமக்கு உதவப்போவது இல்லை. உண்மையில் பணியின் தன்மையை மங்கடிப்பதால் தீர்வைப் பெறுவதற்கு அதுத் தடையாக உள்ளது.

துணி உரிமையாளரின் தேவையின் காரணமாகத்தான் கோட் துணிக்கு சமதையாக உள்ளது என்றக் கருத்திலே நாம் மிகவும் மூழ்கிப்போனால் உதாரணமாக, மதிப்பு வடிவத்தின் புதிரின் அடிப்படையை எவ்வாறு கோட்டின் பயன் மதிப்பு (அதன் கொடுக்கப்பட்ட நிலையில்) துணியின் மதிப்பு வடிவமாக மாறுகிறது என்பதை மேம்போக்காக கவனிக்காமல் விட்டுவிடுவோம். மேலும் இந்த புதிரைத் தீர்ப்பதற்கான திறவுகோலான மதிப்பு வெளிப்பாட்டின் சுற்றுவழியையும் நம்மால் தெளிவுபடுத்த முடியாமல் போய்விடும். இதிலிருந்து மதிப்பு வடிவத்தின் கோட்பாட்டில் சரக்கின் உரிமையாளரின் தேவையை மார்க்ஸ் ஏன் விலக்க வேண்டியிருந்தது என்பது தெளிவாகியிருக்கும்.

(தொடரும்)

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு

ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (16)

ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா கூறுகிறார்:

ஏன் மார்க்ஸுக்கு முன்னர் பொருளாதார வல்லுநர்களால், குறிப்பாகச் செவ்வியல் பொருளாதார அறிஞர்களால் ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது எனும் வகையில் கேள்வியை முன்வைக்க முடியவில்லை (இதனால் அச்சிக்கலுக்கு தீர்வு காணமுடியவில்லை) என்பதற்கு பணத்தைப் பற்றிய மார்க்ஸ்-லெக்சிகன் தொகுதியில் அத்தியாயம் ஒன்றின் முதல் பிரிவில் உள்ள பத்திகளைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மார்க்ஸ் இறுதியில் சரக்கின் விலை வடிவத்தை பகுப்பாய்வு செய்கிறார்.

 [குருமா குறிப்பிடும் பகுதிகள் பின்வருமாறு]

“ஒரு சரக்கின் மதிப்பின் எளிய வெளிப்பாடு எவ்வாறு இரண்டு சரக்குகளுக்கு இடையேயான மதிப்பின் உறவில் உட்பொதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு , நாம் அவற்றின் அளவு அம்சத்திற்கு சுயாதீனமாக மதிப்பு உறவைப் பார்க்க வேண்டும். வழக்கமான செயல்முறை இதற்கு நேர்மாறானது: எந்த விகிதச்சாரத்தில் இரண்டு வகையான சரக்குகள் திட்டவட்டமான அளவுகளில் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும் என்பதை மட்டுமே ஒருவர் மதிப்பு உறவில் பார்க்கிறார். வெவ்வேறு சரக்குகள் பொதுவான அலகின் வெளிப்பாடாகக் குறுக்கப்படும்போது மட்டுமே சரக்குகளின் அளவுகள் ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதை ஒருவர் கவனிக்கவில்லை. அத்தகைய பொதுவான அலகின் வெளிப்பாடுகளாக மட்டுமே அவை ஒரே வகையினமாக, ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க அளவுகளாக உள்ளன (மார்க்ஸ் 1976a, பக். 140-1).

சரக்குகளின் பகுப்பாய்விலிருந்து மேலும் குறிப்பாக சரக்குகளின் மதிப்பு, மதிப்பின் வடிவம் அதாவது, எது மதிப்பை பரிமாற்ற மதிப்பாக மாற்றுகிறது என்பதைக் கண்டறிவதில் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பது 'செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் முக்கிய தோல்விகளில் ஒன்று. அதன் சிறந்த பிரதிநிதிகளான ஆடம் ஸ்மித்தும், ரிக்கார்டோவும் கூட, மதிப்பின் வடிவத்தை சரக்கின் இயல்பானத் தன்மையிலிருந்து வித்தியாசமானதாக அல்லது அதற்கு புறத்தே உள்ள ஒன்றாகக் கருதினர்.  இதற்குக் காரணம் அவர்களின் கவனம் மதிப்பின் அளவை பகுப்பாய்வு செய்வதில் மட்டுமே முழுமையாக மூழ்கியிருந்தது மட்டும் அல்ல. அது இன்னும் ஆழமானது.

உழைப்பின் விளைபொருளின் மதிப்பு வடிவம் மிகவும் அருவமான தன்மையுடையது, ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் மிகவும் பொதுவான வடிவமாகவும் உள்ளது. அதன் மூலம் அது சமூக உற்பத்தியின் குறிப்பிட்ட இனமாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முத்திரை குத்துவதுடன் அதன் வரலாற்றுரீதியான, தற்காலிகத் தன்மையையும் குறிக்கிறது. சமூக உற்பத்தியின் நிரந்தரமான வடிவமாக ஒருவர் முதலாளித்துவ உற்பத்திமுறையைக் கருதினால், மதிப்பு வடிவத்தின் தனித்தன்மையும் அதனுடன் அதன் விளைவாக சரக்கின் வடிவத்தையும், அதன் மேலும் வளர்ச்சியடைந்த பண வடிவத்தையும், மூலதன வடிவத்தையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்  (மார்க்ஸ் 1976a, . 174)]

நோபுகி டகேடாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் போது குருமா கூறுகிறார்: நான் முன்பு குறிப்பிட்டது போல், முழுமையான யதார்த்தம் பல அம்சங்கள், தருணங்களைக் கொண்டுள்ளது.. அவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகக் கருத்தில் கொள்ள, மற்றவற்றை ஒதுக்கி வைப்பது அவசியம். ஒரு பொருளை அறிவியல் பூர்வமாக சிந்தனாமுறையில் ஆய்வுசெய்ய அருவமாக்குவது என்பது இன்றியமையாதது. மற்ற விசயங்களிலிருந்து அருவமாக்குவது என்பது இயற்கையாகவே கொடுக்கப்பட்ட கோட்பாட்டு நோக்கத்திற்காக அவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கி வைப்பதைக் குறிக்கிறது, யதார்த்தத்தில் அவை ஒன்றாகவே உள்ளன. ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கூறுகள் அல்லது அம்சங்களை அடுத்த கட்டத்தில் பரிசீலிக்கலாம்.  இது ஒரு பொருளை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...