Wednesday, May 31, 2023

பணம் பேசுறேன் (3) :

இந்த உலகத்தில என்னை மாதிரி வீழ்ச்சியோ எழுச்சியோ அடைஞ்சவன், எவனும் கெடையாது, ஆழத்துக்கு ஆழமும், உயரத்துக்கு உயரமும் பார்த்தவன் நான்… காலக்கண்ணாடியில் என்னப் பாத்தா, எனக்கு ரொம்ப அழுகை, அழுகையா வருது, ஆனா நான் அழுது என் சோகம் உங்கள தாக்குமோ அப்டினு நினைக்கும் போது கூட வர்ற அழுகை நிக்கமாட்டீங்குது… என்னை ஒரு நூறு ரூபாய் நோட்டா வைச்சுக்குங்களேன், 50 வருடங்களுக்கு முன்னாடி என் மதிப்பு என்ன, இப்போ என் மதிப்பு என்ன, 50 வருடங்களுக்கு முன்னாடி 100 ரூபாயை வைச்சு தங்கக் காசு/நகை வாங்கமுடியும், இப்பப் பாத்திங்கனா, 100 ரூபாய வெச்சி ஒரு வேளை முழு சாப்பாடு கூட சாப்பிடமுடியாது. 1942ல 10 கிராம் தங்கத்தோட (24 காரட்) விலை 44 ரூபாய் தான்… 1967ல 10 கிராம் தங்கத்தோட விலை 102 ரூபாய் தான்… ஆனால் 2023ல இன்னைக்கு 10 கிராம் தங்கத்தோட விலை எவ்வளவு தெரியுமா 60,390 ரூபாய். நான் ஏன் இப்படி மதிப்பு இழந்து போனேன். ஊசலாடுறேன்… அது ஒரு பெரிய சோகக்கதை. நான் ஏன் இப்படி ஆனேங்கறதப் பத்தி விவரமா சொல்றேன். என்னைப் போல் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது இந்த உலகத்தில் எவனும் இல்லை. என்னடா முதல்ல அடாவடியா பேசுனவன் இப்பப் பம்முறேனேனு பாக்குறீங்களா, நான் அப்படித் தாங்க, இப்போ சந்தையில என் மதிப்பு இறங்கிருச்சுங்க…இறங்கிருச்சு… எனக்குள்ள பல முரண்பாடுகள் இருக்கு, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே… சில சமயம் என்னால சரக்கின் மதிப்பை கண்ணாடி போல காட்டமுடியும்னு தோணுது, சில சமயம் சரக்கின் மதிப்புக்கும் நான் காட்டுற மதிப்புக்கும் ரொம்ப தூரமா போயிடுது… என் மதிப்பு நிலைத்தன்மையிலாம ஊசலாடுதே… என் உயிரே ஊசலாடுற மாதிரி இருக்கே,,, சில நேரம் எதுக்குடா இந்த ஈனப்புழப்பு மாண்டுறலாம்னு தோணுது. ஆனால் சந்தை கிடுகிடுன்னு ஏறும் போது எனக்கும் விறுவிறுன்னு போதை ஏறுது. சந்தை ஏறும்போது மனசுல முதலாளியா தோணுது, சந்தை இறங்கும் போது மனசுல கம்யூனிஸ்டா தோணுது. ஊசலாட்டம்…. இந்தக் குட்டி முதலாளித்துவ மனப்பான்மையும், ஊசலாட்டமும் என்னையும் விட்டுவக்கெலன பாத்துக்கோங்களேன்.

எவ்வளவு நாளைக்குத் தான் நானும் நல்லவனா நடிக்கிறது… உண்மைய சொல்லிடறேன்… எல்லா சமூக உறவுகளையும், உணர்வுகளையும், உரிமைகளையும், புனிதங்களையும், கலைகளையும் கடைச்சரக்காக்கி பணமாகக் குறுக்கியப் பாவப்பிறவி தான் நான், நிலம், காடு, கடல், காற்றுனு ஒன்னகூட விட்டுவைக்காம இயற்கையன்னைக்கும் விலை பேசிட்டேன். மனிதர்களோட விருப்பங்கள், தேவைகளாய் நிறைவேற்றவிடாமல் தடுக்குறதும் நான் தான். எல்லாத்துலயும் நான் குறுக்க நிக்கிறேன். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிரிக்கிறேன், பசித்தவர்களிடமிருந்து உணவைப் பிரிக்கிறேன், ஆர்வம் பொங்கும் மாணவர்களிடமிருந்து கல்வியைப் பிரிக்கிறேன், குழந்தைகளிடமிருந்து பொம்மையைப் பிரிக்கிறேன். திறமையானவரிடமிருந்து வாய்ப்புகளைப் பிரிக்கிறேன். மனிதர்களின் உழைப்பை விலை ஏறா கடைச்சரக்காக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறேன்… மொத்தத்தில் மனிதர்களின் ஆசாபாசங்களை, விருப்பங்களை, கனவுகளை, நிறைவேற்றவிடாமல் தடுக்கும் கோடாரியாகி அவர்களின் சிறகுகளை வெட்டி அயன்மைப்படுத்தி குற்றுயிராக்குகிறேன்.

இந்த உலகத்துல நான் செய்யாத பாவங்களே இல்லை, துணை போகாதக் குற்றங்களே இல்ல… இது எல்லாம் என் மனசை வாட்டி வதைக்கத்தான் செய்யுது. அதையெல்லாம் உங்ககிட்ட கொட்டிட்டா பாரம் குறையுமேனு பார்க்குறேன், குற்றத்தை ஒத்துக்கிட்டா தண்டனையும் குறையும் இல்லையா. ஆனால் இது எல்லாத்துலயும் அடிப்படைக் குற்றவாளி யாரு, நானா இல்லிங்க, அது நான் இல்லவே இல்ல, நான் வெறும் ஏவலாள் தான். அதனால இந்த எல்லா குற்றத்துக்கும் அடிப்படையான முதல் குற்றவாளி எசமான் தானுங்க… முதலாளித்துவச் சந்தை சொல்றான்… பணம் முடிக்கிறான். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் தான் இது.

(தொடரும்)

 

Tuesday, May 30, 2023

சூதாடும் காட்டேரி (2)

 


என்னோட மிகச் சிறந்த கொள்கை பரப்புச் செயலாளர், அதான் என் முகவர் ஒருத்தர் இருக்கார். அவரை எல்லாரும் தேவன், தேவன்னு கூப்பிடுவாங்க, ரொம்பத் தங்கமான மனுசன். அவர் பங்குச்சந்தை தரகரா பெருஞ்சேவை பண்ணிக்கிட்டு வர்றாரு. காலையில எழுந்ததும், திருவாசகம் ஓதுவாரு, கந்தசஷ்டி கவசம், பஜனை பாடுவாரு, வெள்ளிக்கிழமை கோயிலுக்கும் போவார், மசூதிக்கும் போவார். ஞாயிற்றுக்கிழமையானா சர்ச்சு ஜெபக்கூட்டத்துக்கும் போவார், ஒரு கடவுள் பாக்கியில்ல, எம்மதமும் சம்மதம் அவருக்கு… கடவுளுக்கு வாயிருந்தா டேய் போதுண்டா, படவா ஒன் சோலியைப் போய்ப் பாருடானு சொல்ற வர்றைக்கும் சாமியைக் கும்பிட்டுக்கிட்டே இருப்பாருனா பாத்துக்கோங்க, தம்பி வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான் போடுவாப்ள, சமத்துவப்புறா, நெத்தியில விபூதிஅடிச்சு குங்குமப்பொட்டு வெச்சுருப்பாரு, சிலுவையும் போட்டிருப்பாரு… ஆனா குல்லா அவர் போட்டுக்கமாட்டார், அடுத்தவங்களுக்குத் தான் போடுவாரு, அதோட பட்ட நாமமும் சாத்துவாரு, எப்டினு கேக்கிறீங்களா ஹும் சொல்றேன், அதுக்கு முன்னாடி அவரை நான் ஏன் என்னோட சிறந்த கொ.ப.செவா கருதுறேங்கறதையும் சொல்லிப்புடறேன். ஆனா ஒன்னு தேவன் உண்மையிலே பக்திப்பழமா இல்ல ஆள் புடிக்க ஆக்ட் கொடுக்குறாருன்னு எனக்கே புரியமாட்டிங்குதே…

தேவன் ஒரு யூடியூப் சேனல் வெச்சிருக்கார், தமிழ்நாட்டிலே அதிக சப்ஸ்கிரைபர் அவருக்குத்தான் 1 கோடி சப்ஸ்கிரைபர், நாங்க தொலைக்காட்சி சேனலும் வெச்சுருக்கோம்ல அதப்பத்தி அப்புறம் சொல்றேன்…

இப்பொ தம்பி தேவன் எப்படி கொள்கை பரப்பும் சேவை செய்றார்ங்கிறதுக்கு, ஒரு மாதிரி/சாம்பிள் தர்றேன்…

நண்பர்களே, இந்த உலகத்தில அதிக ஜனநாயகமுள்ள இடம் பங்குச்சந்தை தான்… பங்குச்சந்தை உலகத்த ஜனநாயகப்படுத்துன மாதிரி வேற எதுவுமே ஜனநாயகப்படுத்தல, பங்குச்சந்தையின் மூலம் ஒரு நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக ஆகலாம். பங்குதாரராக நீங்கள் கோடிஸ்வரராகவோ, பெரும் பணக்காரராகவோ இருக்கவேண்டிய அவசியமேயில்லை.  கோடித்துணி இல்லாட்டாலும் கூட நீங்க பங்குதாரராகலாம், கோடீஸ்வரராகவும் ஆகலாம்… உலகத்தோட செல்வத்த ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிறதுக்குத் தான் பங்குச்சந்தையை ஆண்டவன் அனுப்பி வெச்சுருக்கான். உண்மையில பங்குச்சந்தை தான் ஏழைங்கள கோடீஸ்வரராக்கியிருக்கு, ஏழைங்கள மாடி வீட்ல வாழவெச்சுருக்கு… உங்கள் பாக்கெட்டில்/வங்கிக் கணக்கில் ஒரு நூறு ரூபாயோ இல்ல பத்தோ, அம்பதோ, பணம் இருந்தால் போதுங்க. அதவெச்சுக் கொஞ்ச கொஞ்சமா கோடீஸ்வரராகிடலாம். வெறும் பத்து ரூபாயில ஒரு புதிய இடத்துலேயோ, நிலத்துலேயோ, வீட்டிலேயோ, நிறுவனத்துலயோ உரிமை கொண்டாடமுடியுமா, கனவுல கூட அத நெனச்சுப் பாக்கமுடியாது தானா, ஆனா அத இந்த உலகத்துல ஒரே ஒரு இடத்தில மட்டும் தான் சாதிக்கமுடியும் அதுதான் பங்குச்சந்தை, பங்குச்சந்தையத் தவிர வேற எங்கயுமே அது முடியாது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாம, சாதி, மத வேறுபாடு இல்லாம, ஆண், பெண் பாலின பேதம் இல்லாம அனைவரும் சரிசமமா சமத்துவமா பார்க்கப்படற, நடத்தப்படற ஒரே இடம் பங்குச்சந்தை தான்… சாதி, மத இனப் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வாய்ப்புகளை அளவில்லாம அள்ளித்தந்துக்கிட்டிருக்கு பங்குச்சந்தை… அதனால இந்த அரிய வாய்ப்ப தவறவிடாதிங்க…  உங்களுக்குத் தெரியுமா, பங்குச்சந்தையில தான் படுத்துக்கிட்டே பணக்காரரா ஆகமுடியும்… ஆமாம் இது  நிஜம் தான் நீங்க தூங்கிக்கிட்டிருக்கும் போதும் கூட உங்கப் பணம் உங்களுக்காக வேலை பாத்துக்கிட்டேயிருக்கும், குட்டிபோட்டுக்கிட்டே இருக்கும்… ஆனா அதுக்கு முதல்ல என்ன பண்ணனும்….கவலைய விடுங்க, அந்த நிதிச்சேவை செய்யத்தான் நான் இருக்குறேன்… படுத்துக்கிட்டே பணக்காரராகிறது எப்படிங்கற வித்தையை நான் உங்களுக்குக் கத்துத் தர்றேன் வாங்க... இந்த வாய்ப்பைத்தவற விட்டிறாதிங்க அப்புறம் பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க… உடனே இந்த எண்ணுக்கு அழைங்க…

ஒரு குழந்த பொறந்த அடுத்த நொடிலேயே அதற்கான நிதித்திட்டமிடலை ஆரம்பிச்சுடனும், ஒரு நொடி தாமதமானா கூட வாய்ப்பு அங்க இழக்கப்படுது. இது போன்ற நூத்துக்கு நூறு உண்மையான பல அரிய தகவல்களை தேவன் தம்பி பகிர்ந்துருக்காரு…

இதையெல்லாம் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட வருத்தப்படாத வாலிப சங்கத்த சேர்ந்த அடைக்கலம் என்கிற பையன் தேவன் அய்யாவுக்கு ஃபோனை போட்டாரு. தேவன் எடுக்கல, ஒரு தேவி தான் எடுத்தாங்க… தான் நிதித்திட்டமிடல தொடங்கப் போரதாகவும், அதுக்கு தேவன் அய்யாவோட ஆலோசனையும் ஆசிர்வாதமும் வேணும்னான் பையன். அப்டினா நேருல வாங்கலேன்னு அலுவலக முகவரி கொடுத்தாங்க அந்த தேவி.

(தொடரும்)

Monday, May 29, 2023

பணம் பேசுறேன் (2) :

 

ஒரு விதத்துல என்னை சமத்துவமானவரா நீங்கக் கருதலாம். ஏன்னா நான், சாதி, மதம், இன வேறுபாடுகளை பார்க்குறதில்ல… ஒரு ரூபாயாக நான் ஏழையிடமும் இருப்பேன், பணக்காரனிடமும் இருப்பேன். யாருகிட்டேயும் குறிப்பா எனக்கு ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. கடவுளுக்கு பூசை செய்யும் பிராமண பூசாரி வைச்சிருக்கிற தட்சணை தட்டில் உள்ள பணம் நேற்று மீன் விற்கிறவர் போட்டதுனு தெரிஞ்சா, அய்யோ தீட்டாய்டுச்சுனு அதை அவர் குப்பைத்தொட்டியில போடப் போறாரா என்ன, இந்துத்துவவெறி  புடிச்ச சங்கி கையிலிருக்கும் பணம் நேற்று இஸ்லாமியரிடமும், அதற்கு முன்னர் சீக்கியரிடமிருந்து தான் வந்தது என்று தெரிஞ்சா அதைப் பயன்படுத்தாமல் தூக்கிவீசப்போறாரா என்ன. நான் சவால் விடுறேன் என் இருப்பை வைத்து என் பிறப்பையோ, நான் கடந்து வந்த பாதையையோ, நான் தங்கியிருந்த நபர்களையோ, நான் போக இருக்கும் பயணத்தைப் பற்றியோ ஒரு போதும் உங்களால் கணிக்கவேமுடியாது.

சரி அது இருக்கட்டும். அடுத்த சவாலுக்குத் தயாரா, நான் மணியோட சட்டைப்பையில் இருக்கிறேன்னு சொன்னேனே. அதை வைச்சு மணி எப்படி என்னை சம்பாதிச்சாரு, அவர் என்ன வேலைசெய்றாரு, அவர் ஒரு வணிகரா, தையல்காரரா, பேராசிரியரா, பாயா விற்பவரா இல்ல மாதாக்கோவிலில் மணியடிப்பவரா, இல்ல கோயில் பூசாரியா இல்ல, சாராயக்கடை நடத்துபவரா, உழைப்பில் ஈடுபடுபவரா இல்லை உழைப்பைச் சுரண்டுபவரா, இல்லை மணி ஒரு திருட்டுப்பயலா என்னைக், கொள்ளையடிச்சாரா, ஒருவேளை கொள்ளையடிச்சாருனா அதை சட்டப்பூர்வமாக அடிச்சாரா, சட்டத்துக்குப் புறம்பாகவா என்பத உங்களால கண்டுபிடிக்கமுடியுமா. என் முன் சட்டம் எல்லாம் தூசின்னு சொல்றீங்களா, அதுவும் உண்மைதான். நான் சாதி மத, பால், இன வேறுபாடுகளை களைபவராக, உழைப்பு, தொழில் வேறுபாடுகளை களைபவராக இருக்கிறேன்கிறது இப்போ தெரியுதா, இதை உங்களால் மறுக்கமுடியுமா, ஆனால் என்னா மாதிரியான சமத்துவம் இது, இணக்கமான முரணில்லாத சமத்துவமா, கிடையவே கிடையாது, பலவந்தமான வன்முறையால் கொண்டுவரப்பட்ட சமத்துவம், உண்மையா சொன்னா வன்முறையின் அடிப்படையிலான முரணுள்ள, பெயரளவிலான சமத்துவம், ஏன், எப்படி என்பது எல்லாம் போகப் போகத் தெரியும். …

பசுத்தோல் போர்த்தியப் புலி தான் நான். சமத்துவமின்மைகள், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு திரைபோட்டு சமத்துவத்தைப் போன்றத் தோற்றத்தை உருவாக்குவதும் நான் தான் என்பதை நீங்க கவனிச்சிருக்கீங்களா. பல சமூக முரண்பாடுகளை வெளித்தெரியாமல் மூடிமறைக்கும் முகமூடியா இருக்கேன், உழைப்புச்சுரண்டலை வெளித்தெரியாமல் தொடரச்செய்யும் போர்வையா இருக்கேன். மூலதன அவதாரத்தில் தொழிலாளர்களை வேட்டையாடும் வேட்டைக்காரனும் நானே தான்…

வில்லாதி வில்லனான நான் தான் முதலாளித்துவத்தின் கதாநாயகன். எப்படி கதாநாயகனானேன். ஒரு கோணத்தில் பார்த்தால் நான் தான் கதாநாயகன், இன்னொருக் கோணத்தில் பார்த்தால் நான் தான் வில்லன். அது நீங்க எந்தக் கோணத்தில் என்னைப் பார்க்கிறீங்கங்கறதப் பொருத்திருக்கு. இந்தப் புது உலகத்துல கடவுளே நான் தான்.

ஆனாலும் என்னால் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கண்ணதாசனைப் போலப் பாடமுடியாது, ஏன்னா நான் நிரந்தரமானவன் கிடையாது. எனக்கு ஒரு பிறப்பும் உண்டு, அதனால இறப்பும் உண்டு. நான் நல்லவனா, கெட்டவனா, நான் உங்களோட நண்பனா, பகைவனா, என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க. ஹும் சொல்லுங்க.. நண்பனாக நினைத்தால் என்னைப் புரிந்துகொள்ளுங்கள், எதிரியாக நினைத்தால் என் பலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னைப் புரிந்துகொள்ளாமல், என் பலத்தைத் தெரிந்துகொள்ளாமல் என்னை அழிக்கநினைத்தால் ஒம் பருப்பு வேகாது கண்ணு, அது நடக்கவே நடக்காது. ஆப்பு உங்களுக்குத்தான், எனக்கில்லை. நான் ஒவ்வொரு கணமும் புதிதாய் பிறக்கிறேன்.

(தொடரும்)

 

 

Thursday, May 25, 2023

சூதாடும் காட்டேரி (1)

 


வணக்கம், என்ன தெரியல! நான் தான் சூரி பேசுறேன், என்னது என்ன யாருனு தெரியலயா… அட கஷ்ட காலமே, சரி என் பழைய பேர சொல்றேன்… நிதி தான் என்னோட பழைய பேரு… இப்ப உங்களுக்கு என்ன ரொம்ப நல்லா தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்… நான் தான் இந்த புதினத்தின் கதாநாயகன். என்ன?  ஓ, கதாநாயகி யாருன்னா கேக்குறிங்க… ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு, நிலையில்லாம நொடிக்கு ஒன்னுன்னா பாத்துக்கோங்களேன், அதனால அதப்பத்திலாம் கேட்டுறாதிங்க… சொல்றதுக்கு எனக்கும் பொறுமையில்ல, கேட்கறதுக்கு உங்களுக்கும் நேரமில்ல…

எனக்கு எப்டி சூரி-ங்கற பேரு வந்துச்சுனு கேட்குறீங்கலா, அது ரொம்பக் கேவலமானக் கதைங்க… என் முதல் பெயர் காட்டேரி. ஏன் இப்படி ஒரு கொடூரமான பேரு, அப்டி என்ன கொலை பாதகத்தை நான் செஞ்சுட்டேன். செத்த பிணம் பேயாகி மனுசங்களோட ரத்தத்தைக் குடிச்சுட்டு அலையறத தான் காட்டேரி…ரத்தக்காட்டேரினு சொல்லுவாங்க, அது நெஜம் கிடையாது ஒரு மாயை, பொய்யான புனைவு, நான் பொய் கிடையாதுங்க… முழுக்க முழுக்க நெஜமான பேர்வளி, அதுசரி எனக்கும் அந்தக் காட்டேரிக்கும் என்னங்க சம்மந்தம்? அவங்க என்ன தெரியுமா சொல்றாங்க, நிதிங்கறது, மூலதனம்ங்கறது அதாவது நிதி மூலதனம்கிறது, பழைய சுரண்டப்பட்ட உழைப்போட திரண்ட வடிவமாம், அதாவது அது இறந்த உழைப்பாம், இறந்த உழைப்பின் திரண்ட வடிவமாக இருக்குற நிதி மூலதனமான நான் உயிருள்ள உழைப்பை ஸ்ட்ரா போட்டு குடிக்கிறேனாம். அதனால எனக்கு காட்டேரினு பேராம். என்ன அநியாயம் பாத்தீங்களா, சரி அடுத்த கொடுமைய கேளுங்க, என்னோட ரெண்டாம் பேரு சூதாடியாம், அது ஏன் அப்டி வெச்சாங்க… எனக்கு ஏன் அந்த பேருனு பாத்தீங்கனா நான் உதிரியா உள்ள ஒன்னும் தெரியாத அப்பாவி சில்லறை முதலீட்டாளர்களோட நிதியை சூதாடுறேனாம்… இதுக்கு என்ன ஆதாரம் இருக்குனு அவங்கள கேளுங்க, அதுக்கான முறையான ஆதாரத்தைக் காட்டச்சொல்லுங்க பாப்போம். என்னத்த சொல்றது, என்னோட முதல் பேரு சகிக்கல, ரெண்டாவது பேரும் படு ஒழிசலா இருக்கு அதான் முதல் பெயரில் உள்ள ‘ரி’யையும், ரெண்டாவது பேரில் உள்ள ‘சூ’வையும் ஒன்னா சேர்த்து சின்னதா அழகா சூரி-னு வெச்சுக்கிட்டேன். எப்டி? கெத்தா இருக்குல…

என்னை காட்டேரினு சொல்றாங்க, ஒட்டுண்ணினும் வையறாங்க, நான் எத்தனை பேரை வாழவெச்சுருக்கேன் தெரியுமா… அடுத்தவன் காசுல எப்படிடா வயித்தை வளர்க்கறது, அடுத்தவன் பணத்துல எப்படிய்யா அதிபதி ஆகுறது… சில பேர் அத சுலபம்குறான், சிலபேர் அத ரொம்ப கஷ்டம்கிறான். அதுக்கு ரொம்ப திறமையும், சாதுர்யமும் வேணுமோ, அப்டி தான சொல்லிக்கிறாங்க அது உண்மையானு குழம்பிப்போய் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தவங்களுக்கு நான் தானே வழி காட்டுனேன், வாழ்க்கை கொடுத்தேன்.

எத்தனை பேர் என்னை நம்பி பிஸினஸ் பண்றாங்க தெரியுமா… வியர்வையோ, ரத்தமோ சிந்தாம, கஷ்டப்படமா, திறமை, சாதுர்யத்தால பணம் பாக்குறாங்க, அதெல்லாம் என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சுருக்கணும்ல… என்னை நம்பி உள்ளவங்களையும் அவங்க சாறுண்ணிகள்னு தான் சொல்றாங்க… சரி, நான் கேட்குறேன்… ஒட்டுண்ணியாவோ, சாறுண்ணியாவோ இருக்கறதுல என்னங்க தப்பு இருக்கு, இயற்கையிலே ஆயிரக் கணக்கான உயிர்கள் ஒட்டுண்ணியாவும், சாறுண்ணியாவும் தான இருந்து அருமையா வாழ்க்கை நடத்துது, அப்போ இயற்கையே அத அனுமதிச்சுருக்குனு தானங்க அர்த்தமாகும், அப்போ அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம்னா அது சரிபடுங்கலா நீங்களே சொல்லுங்க…

சரி நான் பண்றதையெல்லாம் சொல்லிப்புடுறேன், நல்லதா, கெட்டதானு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஆமா சொல்லிப்புட்டேன்.

எனக்கு கீழ ஆயிரக்கணக்கான முகவர்கள் சேவைசெய்றாங்க… என்ன சேவை? நிதிச்சேவை தான்… அவங்க மொழில சொல்லனும்னா தரகுவேலை பார்க்குறாங்க… சரி நான் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்…

(தொடரும்)

Wednesday, May 24, 2023

பணம் பேசுறேன் (1)

 


எல்லோருக்கும் வணக்கம், எப்படி இருக்கீங்க. நான் தான் மணியோட சட்டைப் பையில இருக்குறப் பணம் பேசுறேன். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல, என்ன திகைச்சுப் போயிட்டீங்க. அப்டீனா, உங்களுக்கு என்னோட சக்தி தெரியல போல, சரி தெரியவைக்கிறேன்… சட்டைப் பையில இருக்குறதால நான் வெறும் 10ரூபாயாவோ, 100 ரூபாயாவோ தான் இருப்பேன்னு ரொம்ப கம்மியா எடை போட்டுடாதிங்க.   பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்குளா தான் வரும்… ஹே ஹே இந்தப் பணம் ஒரு நோட்டா இருந்தாலும் நூறு வாட்டி சுத்துனா, நூறு நோட்டுக்கு சமம்…

நான் மணியோட சட்டப்பையில இருக்குற மொபைல் வேலட்டுல உள்ள டிஜிட்டல் பணமாக் கூட இருக்கலாம் இல்லயா, இதெப்டி இருக்கு… அதனால அவசரப்பட்டு என்னைப் பற்றி சரியா தெரிஞ்சுக்காமா குறைச்சு மதிப்பிட்டுறாதிங்க. நிதானமா என்னைப் பத்தி நெனச்சுப் பாருங்க… சரி, அப்படியே அளவு அடிப்படையில நீங்க என்னைக் குறைச்சு மதிப்பிட்டாலும் பண்பு அடிப்படையில என்னப் பத்தி யோசிச்சுப் பாருங்க. அது முடிவிலாத முடிவிலி... என்னால சாதிக்கமுடியாதது இந்த உலகத்துல எதுவுமே கிடையாது. என்னால உங்களைக்கூட விலைக்கு வாங்க முடியும், ஏன் இந்த பூமியையே விலைக்கு வங்கமுடியும். நான் ஏழையைப் பணக்காரனாக்குவேன், பணக்காரனை ஏழையா ஆக்குவேன், இழிவானதையும் புனிதப்படுத்துவேன், புனிதமானதையும் விலைக்கு வாங்குவேன், இந்த உலகில் பட்டம், பதவி, புகழ், அறிவு, உயர்வாக, புனிதமானதாகக் கருதப்படற தாய்மை, நேசம், பாச பந்தம், காதலையும், சுருக்கமா சொன்னா எல்லா மனித உறவுகளையும், மனித உணர்வுகளையும் என்னால, என்னால மட்டும் தான் விலைக்கு வாங்கமுடியும்.

கண்ணு, உனக்கு உள்ளே உள்ள கல்வி, அறிவு, ஆற்றல், தேர்ச்சி, தொழில் வல்லமை, பண்புநலன் இதுக்கெல்லாம் இந்த சமுதாயத்தில மதிப்பு இருக்கா, இல்லையா என்பதை உனக்கு வெளியே இருக்கிற பணமாகிய -நான் தான்- என் இருப்பும், இல்லாமையும் தான் தீர்மானிக்குது. நான் தான் உங்களின் சமூக அந்தஸ்தையும் ,சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறேன்னு தெரியுமா உங்களுக்கு. என்னைக் கொண்டிருப்பது உங்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம், அதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் எதனுடனும் ஒட்டிக்கொள்வதில்லை. என்னடா இவ்ளோ திமிராப் பேசுறேன்னு பாக்குறீங்கலா. அது பிறப்பிலேயே வந்தது, பிறவிகுணத்தை மாத்தமுடியாது பாருங்க. நான் இவ்ளோ தூரம் இறங்கிவந்து உங்கக்கிட்டப் பேசுறதே பெரிய விசயம்னு நெனச்சுக்குங்க. நான் ரத்தக்கறையோட தான் பிறந்தேன், வளர்ந்தேன். சரி, எல்லோரும் எப்படி இருக்கீங்கனு கேட்டதுக்கு பதிலையே காணோம். நான் உங்கக் கைவசம் இருந்தா நல்லா தான் இருப்பீங்க. இல்லினா ரொம்ப மோசமான நிலையில இருப்பீங்க… என்ன, ஒத்துக்குறீங்களா.

அது சரி இங்கு நான் யாராகப் பேசுறேன்னு என்னைப் பத்தி நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? மணி என்பவரின் உடைமையாகவா, ரூபாய் நோட்டாகவா, அப்ப என்ன இந்தியாவின் குடிமகனாக, பிரதிநிதியாகப் பேசுறேன்னு நினைக்கிறீங்களா, இல்லவே இல்லை, நான் பண உலகின் பிரதிநிதியாக, மூலதனத்தின் உயிரணுவாக, சரக்குலகை ஆட்டிப்படைப்பவனாக, உங்களோடு பேசுறேன். ரூபாய், யெண், பெசோ, யுவான், டாலர் என்று எங்களுக்குள் பல வேறுபாடுகள், உயர்வு, தாழ்வு, ஏற்ற, இறக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையில் நாங்கள் ஒரே பண்புநலன்களைத் தான் கொண்டிருக்கிறோம். அதனால் எங்களை பாசபந்தமுள்ள சகோதர சகோதரிகளாக குறுக்கிவிட முடியாதுங்கோ. போட்டி, பொறாமை பொங்குற பங்காளிகள் நாங்க.

(தொடரும்)

 

Tuesday, May 23, 2023

பணவீக்கம்:

 


இந்தியாவின் சில்லறை பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு  ஏப்ரல் மாதத்தில் 4.70% உயர்ந்துள்ளது; பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் பணவீக்கம் 4.85 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் பணவீக்கம் 4.68 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. 2022 ஏப்ரலில் பணவீக்கம் 7.79  விழுக்காடாக உயர்ந்திருந்தது. 2023 ஏப்ரலில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 3.84% உயர்ந்துள்ளது. தானியங்களின் விலைவாசி 13.67% உயர்ந்துள்ளது. முட்டையின் விலைவாசி 3.10% உயர்ந்துள்ளது, மீன், இறைச்சியின் விலைவாசி 1.23% குறைந்துள்ளது, எண்ணெய்,கொழுப்புகளின் விலைவாசி 12.33% குறைந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 8.85% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.09% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 6.50% குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 5.28% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 17.43% உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.61% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலே அதிக அளவாக உத்தரகாண்டில் பணவீக்கம் 6.04% உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையிலான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 0.92 விழுக்காடு குறைந்துள்ளது. 2022 ஏப்ரல் 15.38 விழுக்காடாக உயர்ந்திருந்தது. ஏப்ரலில் எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 0.93% குறைந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 2.42% உயர்ந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் விலைவாசி 1.60% உயர்ந்துள்ளது. அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், ஆயத்த ஆடை, உணவு அல்லாத பொருட்கள், வேதிப் பொருட்கள், ரப்பர் மற்றும் நெகிழிப் பொருட்கள், காகித பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்ததால் பணவீக்கம் குறைந்துள்ளது.

மார்ச்சில் தொழில்துறை வளர்ச்சி:

 


மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீடு புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீடு 1.1 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. சென்ற ஆண்டு மார்ச்சில் 2.2% வளர்ச்சியடைந்திருந்தது. சுரங்கத் துறையின் உற்பத்தி 6.8% வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை வெறும் 0.5% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 1.6% குறைந்துள்ளது. மார்ச்சில் முதன்மை பொருட்களின் உற்பத்தி 3.3% உயர்ந்துள்ளது. மூலதன பொருட்களின் உற்பத்தி 8.1% உயர்ந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 1% உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளது. விரைவில் நுகரக்கூடிய பொருட்களின் வளர்ச்சி 3.1% குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 8.4% குறுக்கமடைந்துள்ளது.

வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் தொழில், உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை வெளியிட்டத் தரவுகளின் படி மார்ச் மாதத்தில் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 3.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி மார்ச் மாதத்தில் 12.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.8 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி  1.5 விழுக்காடு குறுக்கமடைந்துள்ளது. உரங்களின் உற்பத்தி 9.7% உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தி 8.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 0.8% குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி 1.8  விழுக்காடு குறைந்துள்ளது.

Monday, May 22, 2023

பணத்தின் தோற்றம் குறித்த மார்க்சின் கோட்பாடு - ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது? (16)

 


ஜப்பானிய மார்க்சியப் பொருளாதார அறிஞர் சமிசோ குருமா கூறுகிறார்:

ஏன் மார்க்ஸுக்கு முன்னர் பொருளாதார வல்லுநர்களால், குறிப்பாகச் செவ்வியல் பொருளாதார அறிஞர்களால் ஒரு சரக்கு எப்படி, எதனால், எதனூடாகப் பணமாகிறது எனும் வகையில் கேள்வியை முன்வைக்க முடியவில்லை (இதனால் அச்சிக்கலுக்கு தீர்வு காணமுடியவில்லை) என்பதற்கு பணத்தைப் பற்றிய மார்க்ஸ்-லெக்சிகன் தொகுதியில் அத்தியாயம் ஒன்றின் முதல் பிரிவில் உள்ள பத்திகளைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மார்க்ஸ் இறுதியில் சரக்கின் விலை வடிவத்தை பகுப்பாய்வு செய்கிறார்.

 [குருமா குறிப்பிடும் பகுதிகள் பின்வருமாறு]

“ஒரு சரக்கின் மதிப்பின் எளிய வெளிப்பாடு எவ்வாறு இரண்டு சரக்குகளுக்கு இடையேயான மதிப்பின் உறவில் உட்பொதிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கு , நாம் அவற்றின் அளவு அம்சத்திற்கு சுயாதீனமாக மதிப்பு உறவைப் பார்க்க வேண்டும். வழக்கமான செயல்முறை இதற்கு நேர்மாறானது: எந்த விகிதச்சாரத்தில் இரண்டு வகையான சரக்குகள் திட்டவட்டமான அளவுகளில் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும் என்பதை மட்டுமே ஒருவர் மதிப்பு உறவில் பார்க்கிறார். வெவ்வேறு சரக்குகள் பொதுவான அலகின் வெளிப்பாடாகக் குறுக்கப்படும்போது மட்டுமே சரக்குகளின் அளவுகள் ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதை ஒருவர் கவனிக்கவில்லை. அத்தகைய பொதுவான அலகின் வெளிப்பாடுகளாக மட்டுமே அவை ஒரே வகையினமாக, ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க அளவுகளாக உள்ளன (மார்க்ஸ் 1976a, பக். 140-1).

சரக்குகளின் பகுப்பாய்விலிருந்து மேலும் குறிப்பாக சரக்குகளின் மதிப்பு, மதிப்பின் வடிவம் அதாவது, எது மதிப்பை பரிமாற்ற மதிப்பாக மாற்றுகிறது என்பதைக் கண்டறிவதில் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பது 'செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தின் முக்கிய தோல்விகளில் ஒன்று. அதன் சிறந்த பிரதிநிதிகளான ஆடம் ஸ்மித்தும், ரிக்கார்டோவும் கூட, மதிப்பின் வடிவத்தை சரக்கின் இயல்பானத் தன்மையிலிருந்து வித்தியாசமானதாக அல்லது அதற்கு புறத்தே உள்ள ஒன்றாகக் கருதினர்.  இதற்குக் காரணம் அவர்களின் கவனம் மதிப்பின் அளவை பகுப்பாய்வு செய்வதில் மட்டுமே முழுமையாக மூழ்கியிருந்தது மட்டும் அல்ல. அது இன்னும் ஆழமானது.

உழைப்பின் விளைபொருளின் மதிப்பு வடிவம் மிகவும் அருவமான தன்மையுடையது, ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் மிகவும் பொதுவான வடிவமாகவும் உள்ளது. அதன் மூலம் அது சமூக உற்பத்தியின் குறிப்பிட்ட இனமாக முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முத்திரை குத்துவதுடன் அதன் வரலாற்றுரீதியான, தற்காலிகத் தன்மையையும் குறிக்கிறது. சமூக உற்பத்தியின் நிரந்தரமான வடிவமாக ஒருவர் முதலாளித்துவ உற்பத்திமுறையைக் கருதினால், மதிப்பு வடிவத்தின் தனித்தன்மையும் அதனுடன் அதன் விளைவாக சரக்கின் வடிவத்தையும், அதன் மேலும் வளர்ச்சியடைந்த பண வடிவத்தையும், மூலதன வடிவத்தையும் கவனிக்காமல் விட்டுவிடுவார்  (மார்க்ஸ் 1976a, . 174)]

நோபுகி டகேடாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் போது குருமா கூறுகிறார்: நான் முன்பு குறிப்பிட்டது போல், முழுமையான யதார்த்தம் பல அம்சங்கள், தருணங்களைக் கொண்டுள்ளது.. அவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகக் கருத்தில் கொள்ள, மற்றவற்றை ஒதுக்கி வைப்பது அவசியம். ஒரு பொருளை அறிவியல் பூர்வமாக சிந்தனாமுறையில் ஆய்வுசெய்ய அருவமாக்குவது என்பது இன்றியமையாதது. மற்ற விசயங்களிலிருந்து அருவமாக்குவது என்பது இயற்கையாகவே கொடுக்கப்பட்ட கோட்பாட்டு நோக்கத்திற்காக அவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கி வைப்பதைக் குறிக்கிறது, யதார்த்தத்தில் அவை ஒன்றாகவே உள்ளன. ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கூறுகள் அல்லது அம்சங்களை அடுத்த கட்டத்தில் பரிசீலிக்கலாம்.  இது ஒரு பொருளை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது.

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...