அறிவியல் வளராத அந்த காலத்துல இருந்ததை விட இப்போ முதுமை ரொம்ப முன்னாடியே வந்துருது. அறிவியல் வளர்ந்துருச்சு, நம்மளும் அறிவியல் மனுசங்களா வாழ்ந்துருந்தா நம்ம தாத்தா பாட்டிகளை விட இன்னும் நீண்ட காலத்துக்கு நல்லா தான வாழனும், ஆனா ஏன் முப்பது வயசுலே முதுமை வருது. ஏன்னா அந்த காலத்தை விட இப்போ உள்ள உணவு தயாரிக்கும் முறைகளும் சரி, உணவுப் பழக்கவழக்கங்களும் சரி அறிவியல் அடிப்படையில மேம்படல, தரம் தாழ்ந்து போச்சு.
மனுசன் சமைச்சு
சாப்புட ஆரம்பிச்ச பெறகு தான் பல வகைப்பட்ட மாமிசம், விளைவிச்ச தானியங்கள், கிழங்குகள்,
பயறு வகைகள், காய்கறிகள் என எல்லாத்தையுமே உணவா எடுத்துக்க முடிஞ்சுச்சு. சமைக்காம
வெறும் பச்சையா சாப்புடுற பழக்கம் தொடர்ந்துருச்சுன்னா இன்னைக்கு உள்ள அளவுக்கு உலக
மக்கள் தொகை பல்கிப் பெருகி ஒசந்துருக்காது.
உணவுப் பொருட்களை
அடுப்புல வெச்சு சமைக்காம அப்புடியே சாப்பிடுறதைத் தான் இயற்கை உணவுன்னு (raw food) சொல்லுறாங்க.
உணவுப் பொருட்களை அடுப்புல வெச்சு சூடுபடுத்தி சமைக்கும் போது பல சத்துக்களும், என்சைம்களும்
(உயிர் வினையூக்கிகள்) அழிஞ்சு போயிடுது, அதுனால சத்துக்குறைபாடு ஏற்படுதுன்னு இயற்கை
உணவாளர்கள் சொல்றாங்க. இதுல ஓரளவுக்கு உண்மை இருக்குத் தான். அதிகமா சூடுபடுத்தி உணவை
சமைக்கும் போது நீரில் கரையுற விட்டமின்களான பி விட்டமின்களும், சி விட்டமினும், ஆக்ஸிஜனேற்றத்
தடுப்பான்களான ஆண்டி ஆக்ஸிடன்ட்களும் குறைஞ்சு
போயிடுது, என்சைம்களும் அழிஞ்சுபோயிடுது. நீரில் கறையுற விட்டமின்களும், ஆண்டி ஆக்ஸிடன்ட்களும்
நமக்கு தேவை. ஆனா உணவுல உள்ள என்சைம்கள் நமக்குத் தேவையில்லை ஏன்னா நம்மோட சீரண மண்டலத்துலே
நமக்கு தேவையான அளவுக்கு என்சைம்கள் உற்பத்தியாகுது. உணவுல உள்ள என்சைம்கள் மூலமா உயிராற்றல்
கெடைக்குதுன்னு சில பேர் சொல்றதும் பொய்.
வெறும் இயற்கை உணவை
மட்டுமே சாப்பிடும் போது எல்லா சத்துக்களும் போதுமான அளவுக்கு கெடைக்கிறது இல்ல. சமைக்கும்
போது தான் பல சத்துக்களை உடலால உட்கிரகிக்க முடியும், சமைக்காம இயற்கை உணவா சாப்புடும்
போது பல சத்துக்கள் உட்கிரகிக்க முடியாம கழிவா தான் வெளியேறும். இயற்கை உணவுல தானியங்கள்,
பயறு வகைகளை சாப்பிடமுடியாது. ரத்தசோகை வரும். கால்சியம் குறைபாட்டால எலும்புத் தேய்மானம்
ஏற்படும், போதுமான அளவுக்குப் புரதச் சத்து கெடைக்காது, கடுமையா எடை குறைஞ்சு மெலிஞ்சு
உருமாறி ஆளு அடையாளமே தெரியாம மாறிப்போயிடுவோம். பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரமே நின்னு
போயிடும். அதுனால முழுக்க முழுக்க வெறும், இயற்கை உணவுகளை சாப்பிடுறதும் இல்ல வெறும்
பழங்களை மட்டுமே சாப்பிடுறதும் ஆரோக்கியமான
சரிவிகித உணவுமுறை கெடையாது.
அதே நேரத்துல முழுக்க
முழுக்க சமைத்த உணவுகளை மட்டுமே சாப்புடுறதும் ஆரோக்யமானது கெடையாது. ஏன்னா நாம ஏற்கெனவே
சொன்ன மாதிரி அதுனால விட்டமின் குறைபாடுகள் குறிப்பா விட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடன்ட்
குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதுனால ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பழங்கள்,
காய்கறிகளை அப்படியே பச்சையா சாப்புடுறது நல்லது.
உணவை அதிக வெப்பத்துல
சமைக்கும் போது சத்துக்கள் குறைஞ்சு போறது மட்டும் நடக்கல. புதுசா நச்சுப் பொருட்களும்
உருவாகுது. அதே மாதிரி ரொம்ப நேரத்துக்கு அடுப்புல வெச்சு சமைக்கும் போது நச்சுப்பொருட்களோட
எண்ணிக்கையும் அதிகரிக்குது. அதுனால மிதமான சூட்டுல, விரைவா சமைக்கக்கூடிய உணவுகள்
தான் ஆரோக்யமானவை.
(தொடரும்)

No comments:
Post a Comment