Friday, March 31, 2023

இந்தியாவின் பணவீக்க உயர்விற்கு காரணமான ஐந்து பெரு நிறுவனங்கள்:

 


இந்தியாவின் பணவீக்க உயர்விற்கு ஐந்துப் பெரு நிறுவனங்களே பங்களிக்கின்றன. அந்த மிகப் பெரிய நிறுவனங்கள் உடைக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரும்.நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் பள்ளியில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் விரல் ஆச்சார்யா கூறுகிறார்.

ரிலையன்ஸ் குழுமம், டாடா குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம், அதானி குழுமம் மற்றும் பார்தி டெலிகாம் ஆகியவற்றை உள்ளடக்கிய "பிக் 5" உள்ளூர் சிறிய நிறுவனங்களின் இழப்பில் வளர்ந்துள்ளன என அவர் கூறுகிறார். விரல் ஆச்சார்யா 2017 - 2019க்கு இடையில் இந்திய மத்திய வங்கியின் துணை ஆளுநராக இருந்தார்.

சில்லறை விற்பனை, மூலப்பொருட்கள், தொலைத்தொடர்புத் துறைகளில் அபரிமிதமான விலை நிர்ணயம் செய்யும் ஆற்றலைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய கூட்டு நிறுவனங்கள், உயர்ந்த பணவீக்கத்திற்கு பங்களிக்கின்றன, அவை உடைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அரசின் "அதிகமான இறக்குமதி வரிகள்" வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியிலிருந்து இந்த கூட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கின்றன.

“புதிய இந்தியாவின் தொழில் கொள்கையாக பலரால் கருதப்படும் தேசிய வெற்றியாளர்களை உருவாக்குவது, விலையை உயர் மட்டத்தில் வைத்திருப்பதற்கு நேரடியாக ஊட்டமளிப்பதாகத் தோன்றுகிறது என்கிறார் அவர்.

போட்டியை அதிகரிக்கவும், விலை நிர்ணய சக்தியைக் குறைக்கவும் இதுபோன்ற கூட்டு நிறுவனங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். அது வேலை செய்யவில்லை என்றால், "ஒரு பெருநிறுவனத்திற்கான உற்பத்தித்திறன் ஆதாயங்களை உண்மையிலேயே பெரிதாக அடையாதவரை அவற்றிற்கு ஊக்கமளிக்காமல் பொருளாதார ரீதியாக பயனற்றதாக மாற்றுங்கள்" என்று அவர் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். வரலாற்று ரீதியாக, இந்தியாவின் பிரச்சனை எதிர்மாறாகக் கருதப்படுகிறது - நிறுவனங்கள் மிகவும் சிறியவையாக உள்ளன, அவற்றால் பெரிய நிறுவனங்களின் உற்பத்தித்திறன் ஆதாயங்களைப் பின்பற்ற முடியவில்லை.

‘பிக் 5’ நிறுவனங்கள் உலோகங்கள், கோக், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதால், இந்திய நுகர்வோர் உள்ளீட்டு விலை வீழ்ச்சியிலிருந்து முழுமையாகப் பயனடைய முடியவில்லை. கடந்த ஆண்டு வழங்கல்-பக்க சிக்கல்கள் தளர்ந்த பிறகு உலகளவில் சரக்குகளின் பணவீக்கம் குறைந்தாலும், இந்தியாவில் பொருட்களின் பணவீக்கம் அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் உயர்ந்த முக்கியப் பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகளை அதிகமாக்கியுள்ளது. நுகர்வோர் பணவீக்கத்திலிருந்து அதிக ஏற்ற இறக்கத்திற்கு உட்படும்  உணவு, எரிபொருள் விலைகளை நீக்குவதன் மூலம் முக்கியப் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. மத்திய வங்கி நுகர்வோர் விலைகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தியபோதிலும், முக்கிய பணவீக்கம் கொள்கை விவாதங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இந்தக் குறியீடு தொடர்ந்து 17 மாதங்களுக்கு 6%க்கு மேல் இருந்தது.

மே மாதத்திலிருந்து வட்டி விகிதங்களை 250 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்திய பிறகும், பணவீக்கம் குறையாததற்குக் காரணம், தொடர்ந்து உயர்ந்த முக்கியப் பணவீக்கம் என்று மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் கொள்கை விகிதத்தை உயர்த்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா பேரியல் பொருளாதார சமநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்கிறார் விரல் ஆச்சார்யா,. பெருநிறுவனங்களின் உயர்ந்துவரும் மையப்படுத்தும் ஆற்றல் பணவீக்கத்தை தொடர்ந்து நிலையானதாக ஆக்குகிறது . இந்தியாவின் வெளிப்புற நிதி உணர்திறன் கொண்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில், பாதிப்பை உருவாக்குகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Thursday, March 30, 2023

ஏற்றுமதியில் குறைந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்கு:

 

 

 இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்கு 45 விழுக்காடாக உள்ளதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இது சரியானதல்ல 45 விழுக்காடு பங்கு அவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல, அவற்றின் பங்குக் குறைவாகவே உள்ளது என்கிறார் வர்த்தகத் துறையின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (டிஜிஎஃப்டி) புள்ளியியல் ஆலோசகர் பிரபுல்ல சந்திர மிஸ்ரா.

 மொத்த ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களின் பங்க 2021ஆம் நிதியாண்டில் $264 லட்சமாக 9.1%ஆக இருந்தது 2022ஆம் நிதியாண்டில் $32.6 மில்லியனாக 7.7%ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் ஆலோசகர் பிரபுல்ல சந்திரா மிஸ்ரா பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உண்மையான பங்கு கணிசமாகக் குறைவாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்கு 45 விழுக்காடு எனக் கருதப்படுவதில் பெரிய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பங்களிப்பும் உள்ளடங்கும் எனவே இந்த பங்கு முற்றிலும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல.

ஃபிப்ரவரியில் மாநிலங்களவையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2020 ஆம் நிதியாண்டில் 49.77 விழுக்காடாக இருந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிப்பங்கு 2021 ஆம் நிதியாண்டில் இல் 49.35 விழுக்காடாகவும், 2022 ஆம் நிதியாண்டில் 45.03 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.

இருப்பினும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 2020 ஆம் நிதியாண்டில் $15,480 கோடியாகவும், 2021ஆம் நிதியாண்டில் $14,390 கோடியாகவும் இருந்தது 2022ஆம் நிதியாண்டில் $19,000 கோடியாக உயர்ந்துள்ளது.

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் ஏற்றுமதியானது, இறக்குமதிக் குறியீடுகள் அடிப்படையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குத் தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுபட்டது. 1,218 மொத்தப்பொருட்களில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குத் தொடர்பான 454 ஏற்றுமதி பொருட்களை சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் வணிக நுண்ணறிவு இயக்குநரகம், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து அடையாளம் கண்டுள்ளது.

இந்தப் பொருட்களின் ஏற்றுமதி பங்கு இது 2021 ஆம் நிதியாண்டின் போது $143,823 மில்லியனாக இருந்தது 2022ஆம் நிதியாண்டில் $189,768 மில்லியனாக உயர்ந்து 31.9 விழுக்காடு நேர்நிறையான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

ஆனால் மொத்த ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களின் பங்கு 2021ஆம் நிதியாண்டில் $264 லட்சமாக 9.1%ஆக இருந்தது 2022ஆம் நிதியாண்டில் $32.6 மில்லியனாக 7.7%ஆகக் குறைந்துள்ளது.

மொத்தத்தில் இத்தரவுகள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிப் பங்கு குறைந்துள்ளதையேச் சுட்டிக்காட்டுகின்றன. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையின் பயனாளர்களாக உள்ளவை பெரு நிறுவனங்கள் மட்டுமே. பெரு நிறுவனங்களை ஊக்குவித்து சிறு, குறு நிறுவனங்களைப் புறக்கணிப்பது தான் பாஜக அரசின் ஆத்மநிர்பர்.

Wednesday, March 29, 2023

நிதி மசோதா 2023:

 

2023-24 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யும் போது நிதிச் சட்டங்களில் 64 திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ‘நிதி மசோதா 2023’ஐயும் முன்மொழிந்திருந்தார்.  இந்த நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன் படி, பரஸ்பர நிதித் திட்டங்களின் முதலீடுகளில் 35 விழுக்காட்டிற்கும் குறைவாக  நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டால் அவற்றிற்கான நீண்ட கால மூலதன ஆதாயச் சலுகை (LTCG) நீக்கப்படும். குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்றும் பரஸ்பர நிதித் திட்டங்களின் மூலதன ஆதாயங்கள் வருமான வரிக்கு உட்படுத்தப்படும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை வங்கிகளின் வைப்புத்தொகைகளுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருப்ப வர்த்தகத்தின் (option trading) மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி 0.05 விழுக்காட்டிலிருந்து 0.0625 விழுக்காடாகவும், எதிர்கால ஒப்பந்தங்களின் (futures contract) மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி 0.01 விழுக்காட்டிலிருந்து 0.0125 விழுக்காடாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் அல்லாத நிறுவனங்கள் சம்பாதிக்கும் தொழில்நுட்ப சேவைகளுக்கான ராயல்டி மற்றும் கட்டணங்கள் மீதான பிடித்தம் செய்யும் வரி விகிதம் 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சரக்கு, சேவை வரிக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பாக்கித் தொகையை உரியகாலத்திற்குள் செலுத்தாவிட்டால் வரி விலக்கு கோர முடியாது என்றும் நிதி மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மசோதாவில் சட்டத் திருத்தங்களுடன் புதிதாக 20 சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

பான் மசாலா மற்றும் சிகரெட் உள்ளிட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் மீதான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வரை இவற்றின் விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டே  வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக அதிகபட்ச சில்லறை விலையின் (MRP) அடிப்படையில் வரி விதிக்கப்படவேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் புகையிலைப் பொருட்கள் மீதான வரிக்கட்டணம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய முறையை (NPS) ஆராய நிதித் துறை செயலகத்தின் கீழ் புதிய குழு அமைக்கப்படவுள்ளது. ஊழியர்களின் தேவைகளையும், அதே நேரத்தில் அரசின் நிதிச்சிக்கனத்தையும் கருத்தில் கொண்டும் ஓய்வூதிய முறையை ஆராய குழு அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கடன் அட்டை மூலம் பணம் அனுப்பும் நடைமுறையில் ஆரம்ப நிலையிலேயே வரிப் பிடித்தம் செய்தவதற்கான வாய்ப்புகளை ரிசர்வ் வங்கி ஆராயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 28, 2023

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-24 (3):

 

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாட்டில் சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும். சிறுதானியங்களை தொகுப்பாக சாகுபடி செய்து மதிப்புக்கூட்டி, லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் வகையில் 70 விழுக்காடு மானியம் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மிகக்குறைவாக உள்ளது. அடையாளத்திற்கு ஓரிரு மாவட்டங்களில் மட்டும் இயற்கை வேளாண்மையை செயல்படுத்துவதும், மற்ற மாவட்டங்களில் செயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும் தகுமா?.

அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் எனவும் இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசிற்கு இயற்கை விவசாயத்தை செயல்படுத்திப் பரவலாக்குவதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், நம்மாழ்வார் விருது அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் தமிழகமெங்கும் நஞ்சில்லா இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அதுவே அய்யா.நம்மாழ்வாரின் ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து போற்றுவதற்கான வழிமுறையாக இருக்கும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் வெறும் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சென்ற ஆண்டும் இதே அளவு நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

 திமுக தன் தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு ரூ.2,500-ம், கரும்பிற்கு ரூ.4000-மும் வழங்கப்படும் என்றும், வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிப்போம் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால் மூன்றாவது ஆண்டிலும் கூட எந்த விளைப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை அறிவிக்கவில்லை.

2023-24ல் நெல் கொள்முதல் செய்ய, ஊக்கத் தொகையாக ஒரு குவின்டாலுக்கு கூடுதலாக சன்ன ரகத்துக்கு வெறும் 100 ரூபாயும், பொது ரகத்துக்கு வெறும் 75 ரூபாயும் வழங்க ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை மிகக்குறைவாக உள்ளதாலும், நியாயமான குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கப்படாததாலும் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நிதிநிலை அறிக்கையில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களை ஆரம்பிக்கக் கூட தனியார் பங்களிப்பை நாடவேண்டுமா? எதற்கெடுத்தாலும் தனியார் பங்களிப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பது அரசின் சுயசார்பின்மையையும், தன்னம்பிக்கையற்ற முதுகெலும்பில்லாத கொள்கை-நடைமுறையையே சுட்டிக்காட்டுகிறது.

 

 

 

 

Monday, March 27, 2023

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-24 (2):

 

2023-24-ம் ஆண்டில் விவசாயம் மற்றும் அதுதொடர்பான துறைகளான கால்நடை பராமரிப்பு, மீன்வளம், நீர்வளம், எரிசக்தி, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு, வருவாய், வனம், பட்டு வளர்ச்சி, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளின்கீழ் ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, இ-வாடகை செயலியுடன் இணைத்து வாடகைக்கு விடப்படும். இதற்கு ரூ.500 கோடி நபார்டு வங்கி நிதியுடன் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ல் பயிர் காப்பீடு திட்டத்துக்கு 2339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ரூ.6,600 கோடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தடுப்பணை, பண்ணை குட்டைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 2,504 கிராம ஊராட்சிகளில் ரூ.230 கோடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். சென்ற ஆண்டும் இதே அளவு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ல் தமிழகத்தில், தொகுப்பு அணுகுமுறையில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கி, சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து பாசன சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க 2022-23 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் மத்திய, மாநில நிதியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2023ல் நுண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விவசாயிகள் அனைத்து விவசாய சேவைகளுக்கும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பிக்க வசதியாக 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் இ-சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

வேளாண்மை, தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக ரூ.2 லட்சம் வீதம் நிதியுதவி வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்ற ஆண்டிலும் இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

வேளாண் தொழில்பெருவழித்தடம் மூலம் வேளாண் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடத் திட்டம் செயல்படுத்தப்படும். இது பாஜக அரசின் கதிசக்தித் திட்டம் போன்றதொரு வாய்ச்சவடால் திட்டமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

ரூ.3 கோடி செலவில், 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று அயல் நாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

 நீலகிரி, தருமபுரி மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நீலகிரி, தருமபுரியை வேடிக்கை பார்க்கவேண்டுமா என்ன?. அனைத்து மாவட்டங்களிலும் பொதுவிநியோக முறையில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்களை வழங்கவேண்டும்.

(தொடரும்)

 

 

 

 

 

 

Saturday, March 25, 2023

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-24 (1):

 

2023-24ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மார்ச் 21 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

வேளாண்துறைக்கு 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2023-24ஆம் நிதியாண்டிற்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் 17.8% கூடுதலாக, அதாவது 5897 கோடி ரூபாய், கூடுதலாக ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 2022ல் 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2023ல் அதைவிடக் குறைவாக 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மானியத்திற்காக ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க 2022-23 நிதி ஆண்டில் 5,157.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது; 2922-23ல் ரூ.6536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022லும் இத்திட்டத்திற்கு 15 கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க சென்ற நிதி ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2023ஆம் நிதியாண்டில் டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் ரூ.25 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும் என்றும் 2,504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் 5 ஆயிரம் பவர்டில்லர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ.22 கோடி: பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் என்றும் இத்தகைய பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.25.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்கு  2022ல் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023ல் இத்திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் நாகை -திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 2,504 கிராம ஊராட்சிகளுக்குச் செயல்படுத்த ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன் வளர்ப்புக்கு சென்ற நிதி ஆண்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2023ல் காவிரி, பவானி, தாமிரபரணி மற்றும் கிளை ஆறுகளில் 40 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும். ரூ.1.20 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

 

 

 

 

 

Friday, March 24, 2023

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-24 (2):

 

ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் 39,748.42 கோடி ரூபாயாகவும்.  இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 27,444.64 கோடி ரூபாயாகவும் (16,214.83 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத்தொகை உட்பட) மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியம் 27,444.64 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 30.06.2022 முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2006-07ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 10 விழுக்காடாக இருந்த மாநிலத்தின் சொந்த வருவாய் தற்போது 7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. வருவாய் பற்றாக்குறையைக் குறைத்து புதியத் திட்டங்களுக்கும், முதலீடுகளுக்கும் நிதி ஆதாரத்தை உருவாக்க, மாநிலத்தின் வருவாயை உயர்த்த வழிவகைகளை கண்டறிவது மிகவும் அவசியம் என்பதையும், நமது மாநில வருவாயில் 85 விழுக்காடாக உள்ள விருப்புரிமையற்ற செலவினங்களைக் குறைத்து விருப்புரிமைச் செலவினங்களின் பங்கினை அதிகரிக்க வேண்டும் என்பதையும் நிதியமைச்சர் அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

2022-23ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 14 விழுக்காடு பெயரளவு வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டிலும் மாநிலத்தின் பெயரளவிலான பொருளாதார வளர்ச்சியானது 14 விழுக்காடாகத் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை அரசே உருவாக்கித்தருவதற்கானத் திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கானத் திட்டங்கள் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. வேலை இல்லாத அனைவராலும் தொழில்முனைவோராக முடியாது, புத்தொழில் நிறுவனங்களை தொடங்கமுடியாது. மூலதனம் இல்லாது வேலைவாய்ப்பும் இல்லாது தவிக்கும் மனிதவளத்திற்கு வேலை உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் அளிப்பது சமூக நீதியின் அடிப்படையில் செயல்படும் மக்கள் நல அரசின் கடமையாகும். அதன் மூலமே உள்ளடக்கிய நீடித்தப் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியும்.

தொழில்துறையையும், உற்பத்தித்துறையையும் விரிவாக்கம் செய்வதற்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தொழில்துறையும், உற்பத்தித்துறையும் வளர்ச்சியடையும் போதே அதைச் சார்ந்த சேவைத்துறைகளும் வளர்ச்சியடையும்

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி எரிபொருள் மானியம் மற்றும் அரசின் சமூகநலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நிதிநிலை அறிக்கையில் அரசுப் போக்குவரத்துக் கழக நலன், போக்குவரத்து தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது  எனத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்பது திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால் நிதிநிலை அறிக்கையில் அது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் அது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தில் காலியாக உள்ள நான்கரை லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கட்டாய தமிழ் வழிக்கல்வியை செயல்படுத்துவது, பள்ளியிறுதி வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்குதல். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தல் போன்ற தமிழ்த்தேசத்தின் இறையாண்மையை உறுதிசெய்யும் எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடுகள் நிரந்தரமானவை அல்ல. அந்நிய முதலீடுகள் தேசத்திலிருந்து நிகர நிதி வெளியேற்றத்திற்கே வழிவகுக்கும். புதுத்தாரளியக் கொள்கைகளின் வழிகாட்டுதலில் வெளி நாட்டு மூலதனங்களை மட்டுமே பெரிதும் நம்பியிருப்பது நீடித்த வளர்ச்சியையும், பொருளாதார தற்சார்பு நிலையையும் அடைவதற்குத் தடையாக அமையும்.

பெருமுதலாளிகள் யாரும் தங்கள் சொந்தப் பணத்தில் மட்டும் தொழிலில் ஈடுபடுவதில்லை. மக்களின் சேமிப்பு முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும் வங்கிகளிடம் கடன் பெறுவதன் மூலம் தான் பெருமுதலாளிகள் தொழில் செய்துவருகின்றனர். பெருமுதலாளிகளுக்கு வங்கிகள் அளித்த பல லட்சம் கோடிக் கடன்கள் வாராக்கடன்களாகித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் சேமிப்புகளை இவ்வாறு விரயமாக்கமால் பொதுமுதலீடுகளாக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும். உள்நாட்டில் வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் மூலம் திரட்டப்பட்ட சேமிப்புநிதிகளை பொதுத்துறை முதலீடுகளாக்குவதன் மூலம் தொழிற்துறையை விரிவாக்குதடன் கணிசமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கமுடியும். அதன் மூலமே தற்சார்பு பொருளாதாரத்தையும் வளங்குன்றா வளர்ச்சியையும் அடைந்திடமுடியும்.

 

 

Thursday, March 23, 2023

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-24 (2):

 

இவ்வாண்டு முதல்-தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS) 144 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைகளையும் கழிவு நீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் புத்தொழில் திட்டம் (Women Start-Up) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50 பின்தங்கிய வட்டாரங்களை கண்டறிந்து அவற்றில் தலா ரூ.5 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 5 கோடி ரூபாய் என்பது இத்திட்டத்திற்கு மிகக்குறைந்த ஓதுக்கீடு.

2022-23ல் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, 2023-24ல் ரூ.1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு 2022ல் 36,895.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2023ல் ரூ.40,299 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில் துறைக்கு ஒட்டுமொத்தமாக 3,268 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3,513 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் இத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கான 1107 கோடி ரூபாயும் உள்ளடங்கும். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான வழிமுறையை மாற்றி உதவித்தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்துகிறது. இதற்கான ஒதுக்கீட்டுத்தொகையையும் சேர்த்தால் இந்த ஆண்டிற்கான ஒதுக்கீடு 4352.19 கோடி ரூபாய் எனக் கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 2023-24ல் 22,561.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23ல் இத்துறைக்கு 26647.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2023-24ல் ஜல்ஜீவன் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்கு நேரடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதையும் கணக்கில் கொண்டால்  ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட 9.44% உயர்வுடன் 29,161.76 கோடி ரூபாயாக இருந்திருக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1,580 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இதுவரை சுமார் 24,712 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு 1000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கடன் தள்ளுபடிக்கு 3,993 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில் 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

(தொடரும்)

 

 

 

 

Wednesday, March 22, 2023

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-24 (1)

 

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 20, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 2-வது முழுமையான நிதிநிலை அறிக்கை ஆகும்.

நிதிநிலை அறிக்கையில் பகிரப்பட்டத் தரவுகளின் படி, 2023-24ஆம் நிதியாண்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,81,182.22 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 19.30% உயர்வாகும். 2023-24ல் அரசின் வரியல்லாத வருவாய் 32.10% உயர்ந்து, 20,223.51 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு நிதியை 30.06.2022க்கு மேல் நீட்டிக்காததால் மாநிலங்கள் முக்கியமான வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளன.

மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறும் மொத்த நிதியானது 2014-15ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 1% குறைந்துள்ளது. இந்த நிதிக்குறைவு 2022-23ஆம் ஆண்டில் சுமார் 24,840 கோடி ரூபாயாகவும், 2023-24ஆம் ஆண்டில் 28,327 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24ஆம் நிதியாண்டில் வருவாய் வரவினங்கள் 2,70,515.23 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23ன் திருத்த மதிப்பீடுகளை விட 10.12% உயர்வு.

தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 1.23% ஆகக் குறைத்துள்ளது. 2022-23 வரவு செலவு மதிப்பீடுகளில் 2,84,188.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள் திருத்த மதிப்பீட்டில் 2,76,135.68 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. திறமையான நிர்வாகமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சுணக்கமானப் பொருளாதாரச் சூழலில் அரசு செலவினங்களை வெட்டியுள்ளது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. 2023-24ஆம் நிதியாண்டில், மொத்த வருவாய் செலவினம் 3,08,055.68 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-24ல் தமிழக அரசு மூலதனச் செலவினங்களுக்கு 44,365.59 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2023-24க்கான மூலதனச் செலவினங்கள் 2022-23க்கான திருத்த மதிப்பீடுகளை விட 15.69% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்படும் சூழலில் நிதித்தூண்டல் அளிக்கும்விதத்தில் போதுமான அளவிற்கு மூலதன செலவினங்களை தமிழக அரசு உயர்த்தவில்லை.

நிதிநிலை அறிக்கையில் சில வரவேற்புக்குரியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH) அமைக்கப்படும். இந்த மையத்தில், இயந்திர மின்ணணுவியல் (Mechatronics), இணையவழிச்செயல்பாடு (Internet of things), அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology), துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்றத் தொழில்நுட்பங்களுக்கானப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளில் பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) உருவாக்குவதற்கான இத்திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் சுயதொழில் ஊக்குவிப்பு மானியங்கள் மூலம் பயன் பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கையை உயர்த்த அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் - தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS), 144 கோடி ரூபாய் அளவில் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சியைப் பரவலாக்க 85 தொழில் திட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், இதற்கு 1,44,028 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் 2லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முழுவதும் அரசு முதலீடுகளின் மூலம் செய்யப்படவுள்ளதா என்பது குறித்த விவரங்கள் அளிக்கப்படவில்லை.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

(தொடரும்)

 

Tuesday, March 21, 2023

விற்பனைத்துறையில் பாலின இடைவெளி:

 

இந்தியாவில் விற்பனைத்துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும் இந்தியாவில், விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச்சக்தியில் பெண்கள்  19% மட்டுமே உள்ளனர் என்று உலகின் மிகப்பெரிய இணைய தொழில்முறை வலைத்தளம்  லிங்க்ட்இன் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண் விற்பனை நிர்வாகிகள் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற அடுக்கு 1 நகரங்களில் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பச் சேவைகள், சில்லறை விற்பனைத் துறைகள் ஆகியவை விற்பனையில் பெண்களை உள்ளடக்கியவையாக இருக்கின்றன, ஆனால் அதிக பாலின இடைவெளியைக் கொண்ட துறைகளில் வாகனத் துறையும் உள்ளது.

விற்பனைப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இந்திய நிறுவனங்கள் இன்னும் பெண்களை விட ஆண்களையே அதிகம் வேலைக்கு அமர்த்துகின்றன என்றும் லிங்க்ட்இன் அறிக்கை கூறுகிறது.

 இந்தியாவில் விற்பனையில் பெண்களின் நிலை குறித்த அதன் தரவுகளின்படி, இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில் பெண்கள் 19% மட்டுமே உள்ளனர். விற்பனைத் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர்.

இந்தியாவில் உள்ள விற்பனைப் பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதி அளவைக் கூட பெண்கள் எட்டவில்லை என்றாலும், அடுக்கு-1 நகரங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் பாலின இடைவெளி சற்றுக் குறைவாகவே உள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி உள்ளது, ஆனால் முதலாளிகள் விழிப்பின்றி ஒரு சார்பானத் தேர்வுகளுக்கு பதில் திறமைகளுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்துவதால் பாலின இடைவெளி குறையும் என்ற  நம்பிக்கை உள்ளது என்று லிங்க்ட்இன் இந்தியாவின் திறமை, கற்றல் தீர்வுகளின் மூத்த இயக்குனர் ருச்சி ஆனந்த் கூறினார்.

ஹைதராபாத் (26%), பெங்களூரு (25%) மற்றும் சென்னை (22%) போன்ற அடுக்கு 1 நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விற்பனை நிர்வாகிகளாக உள்ளனர், ஆனால் அடுக்கு 2 நகரங்களான அகமதாபாத் (14%), லக்னோ (13%) மற்றும் ஜெய்ப்பூர் ( 13%) அதிகமான பெண்களை பணியிடங்களுக்கு கொண்டு வருவதற்கான பரந்த திறனை உறுதியளிக்கிறது என்று லிங்க்ட்இன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், சில்லறை விற்பனைத் துறைகள் பெண்களை  உள்ளடக்கியத் துறைகளாக உள்ளன, அவற்றில் முறையே 27% மற்றும் 23% பெண்கள் விற்பனைப் பொறுப்புகளில் பணிபுரிகின்றனர். மறுபுறம், மருந்து (10%), உற்பத்தி (14%) மற்றும் வாகனத் தொழில்கள் (14%) ஆகியவை அதிக பாலின இடைவெளியைக் கொண்டத் துறைகளாக உள்ளன.

துறைவாரியாக கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமே பாலின இடைவெளியைக் குறைக்கமுடியும். அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா குழிதோண்டி புதைக்கப்பட்டது. அது குறித்து நீண்ட காலமாகத் தொடரும் கள்ள மௌனத்தை கவிதா உடைத்துள்ளார். தெலங்கானா முதல்வரின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா. அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் இந்த நகர்வை முன்னெடுத்திருந்தாலும் பாராட்டுதலுக்குரியதே. ஆனால் அதுவும் ஒரு நாள் செய்தியாகிப் போனதுடன் சரி, கள்ளமௌனம் தொடர்கிறது. கள்ளமௌனத்தைக் கட்டிக் காப்பதில் ஆண் அரசியலாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். பெண்கள் அனைவரும் அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்காவிடில் இந்நிலையை எள்ளளவு கூட மாற்றமுடியாது, கள்ள மௌனம் என்றென்றும் நிரந்தரமாகிவிடும். ஆகவேத் தயாராகுங்கள் பெண்களே! போராட்டக்களத்திற்கு புறப்படுங்கள் பெண்களே!

 

 

Monday, March 20, 2023

பாலின சமத்துவத்தை அடைய 300 ஆண்டுகள் ஆகும் - ஐ.நா

 

மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் உரிமைக்கான .நா குழுவிடம் பேசிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தெரெஸ், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக செயல்படும் ஐ.நாவின் பெண்கள் அமைப்பின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி பாலின சமத்துவம் இன்னும்"300 ஆண்டுகள் தொலைவில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றம் "நம் கண்களுக்கு முன்பாக மறைந்து கொண்டிருக்கிறது" என்று அன்டோனியோ குத்தெரெஸ் பெண்கள் நிலை குறித்த ஆணையத்திடம் தெரிவித்தார்.

மகப்பேறு இறப்பு விகிதங்கள், சிறுவயதிலேயே சிறுமிகள் திருமணத்திற்குத் தள்ளப்படுவது, பள்ளிக்குச் சென்றதற்காக சிறுமிகள் கடத்தப்பட்டு தாக்கப்படுவது ஆகியவை, பாலின சமத்துவத்தை அடைவதற்கான நம்பிக்கையை "தொலைவாக்கியுள்ளது என்பதற்கு ஆதாரங்களாக குட்டரெஸ் மேற்கோள் காட்டினார். "உலகம் முழுவதும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, அச்சுறுத்தப்படுகின்றன, மீறப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு "பெண்கள் மற்றும் சிறுமிகள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்பட்டுள்ளனர்" என்றும் கூறியுள்ளார்.

திருமணமாகாத பெண்கள் உழைப்புச் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உள்ளனர்.  அவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பினும்கூட ஊதிய இடைவெளியும் அதிகரித்துள்ளது.

 

திருமணமாகாத பெண்களின் சராசரி வாராந்திர வருமானம், திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் சம்பாதிப்பதில் 92.1 விழுக்காடாகவே உள்ளது என்று வெல்ஸ் பார்கோவின் புதிய அறிக்கை தரவுகளை வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு, திருமணமாகாத பெண்களின் சராசரி வாராந்திர வருமானம் ஆண்களின் வருமானத்தில் 95.8 விழுக்காடாக இருந்தது, தற்போது இந்த இடைவெளி அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் தரவுகளின் படி, அமெரிக்காவில் ஆண்கள் செய்யும் வேலைகளில் 83 விழுக்காடு பெண்களும் செய்கிறார்கள். தாய்மைக்கான அபராதம் ஊதிய இடைவெளியின் பெரும்பகுதிக்குக் காரணமாக இருப்பினும் கூட, தனித்திருக்கும் பெண்களுடைய ஊதிய இடைவெளியும் திடுக்கிடும் விதத்தில் அதிகரித்து வருவதாகக் வெல்ஸ் பார்கோ பொருளாதார நிபுணர் சாரா ஹவுஸ் கூறியுள்ளார்.

பெண்கள் போராட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சிஎன்பிசி ஊடகத்திடம் கூறுகையில், அவர் தனது ஆண் சக ஊழியர்களுக்கு நிகராக இருப்பதற்கு "இரண்டு மடங்கு கடினமாக" உழைத்துள்ளதாகவும், தனது மகளும் தன் பேத்தியும் ஆண்களை விட கடினமாக உழைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை," என்றும் கூறியுள்ளார்.

பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்திய இலக்குகளை செயல்படுத்துவதன் மூலமே எட்டித் தொலைதூரம் சென்ற பாலினச் சமத்துவத்தை கிட்ட நெருங்கமுடியும்.

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...