Tuesday, February 28, 2023

சமூகப் பங்குப்பரிவர்த்தனை?:

2019-20 நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் நிதித் திரட்டும் வகையில் ‘சமூகப் பங்குப்பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும் என்று முன்மொழிந்தார்.

சமூக நிறுவனங்களுக்கும்,  நிதி வழங்குநர்களுக்கு இடையே ஒரு ஊடகமாக சமூகப் பங்குப்பரிவர்த்தனை செயல்படும். இத்திட்டத்தின்படி, லாப நோக்கற்ற நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சமூகப் பங்கு பரிவர்த்தனை தொடர்பான விதிகளை 2022ல் வெளியிட்டது.

இந்நிலையில், தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தளத்தில், சமூக பங்குப் பரிவர்த்தனைக்கென்று தனிப் பிரிவை அறிமுகம் செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.

செபியின் வரையறைக்கு உட்பட்ட லாபநோக்கற்ற நிறுவனங்களே சமூகப் பங்கு பரிவர்த்தனைப் பிரிவில் பதிவு செய்துகொள்ள முடியும். சமூகப் பங்குப்பரிவர்த்தனையில் பெருநிறுவன அமைப்புகள், அரசியல் அல்லது மத அமைப்புகள் , தொழில்முறை அல்லது வர்த்தக சங்கங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மலிவு விலையில் வீடுகளை அளிக்கும் நிறுவனங்களைத் தவிர பிற வீட்டு வசதி நிறுவனங்கள், இடம் பெற்று நிதி திரட்ட முடியாது. பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் லாப நோக்கற்ற நிறுவனங்களாக செபி அங்கீகரித்துள்ளது.

செபியின் கட்டமைப்பின்படி, சமூகப் பங்குபரிவர்த்தனைத் திட்டத்தில் லாப நோக்கற்ற நிறுவனங்களின் குறைந்தபட்ச வெளியீட்டு அளவு ₹1 கோடியாகவும், குறைந்தபட்ச விண்ணப்ப அளவு ₹2 லட்சமாகவும் இருக்கவேண்டும்.

2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் சில்லறை முதலீட்டாளர்கள் சமூகப் பங்குபரிவர்த்தனையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. நிறுவன முதலீட்டாளர்களே இதில் முதலீடு செய்யலாம். இலாப நோக்கற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிதிக்கருவிகளை இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்யக் கிடைக்காது.

இந்தியாவில் சமூகப் பங்குபரிவர்த்தனைத் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாக கருதப்படுகிறது. ஹோமியபதியில் வேண்டுமானால் விசத்தை விசத்தால் முறிக்கலாம். சமூக அறிவியலில் அது சாத்தியமா?. சமூகத்தில் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தி, நலிவடைந்தப் பிரிவினரை முதலாளித்துவ சந்தை அமைப்பு தான் உருவாக்குகிறது. அதே முதலாளித்துவ சந்தை அமைப்பு நேர்நிறைத் தாக்கங்களுடன் தான் உருவாக்கிய நலிவடைந்த பிரிவினரைத் பங்குச்சந்தையின் மூலம் தூக்கிவிடப்போகிறதாம்!. பெரும்பாலான லாப நோக்கற்ற தனியார் அமைப்புகள்  பெரு முதலாளிகள் தங்களது வருவாயை மடைமாற்றி வரிச்சலுகைகள் பெறவே ஏற்படுத்தப்படுகின்றன. தங்களது பெருலாபவேட்டையில் ஓரிரு பறுக்கைகளை எறிந்து தங்களை தொண்டு செய்யும் மனிதநேயமிக்க கொடைவள்ளல்களாகக் காட்டிக் கொள்கின்றனர். கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க முதலாளித்துவ சந்தை அமைப்புகளின் மூலம் கார்பன் உமிழ்வு வர்த்தகம் செய்யப்பட்டது. அதனால் கார்பன் உமிழ்வு அதிகரித்ததே ஒழியக் குறையவில்லை. சமூகப் பிரச்சினைகளுக்கு பங்குச்சந்தையில் தீர்வு காண்பதும் அதே போன்றதொரு தர்க்கப் பொருத்தமற்ற முயற்சிதான். பெரும் முதலாளிகளின் பணத்தை மடைமாற்ற மட்டுமே இத்திட்டம் உதவும். பங்குச்சந்தையில் நிதிதிரட்ட அரசியல் கட்சிகள் பட்டியலிடப்பட அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்டியலிடாமலே தேர்தல் பத்திரங்கள் மூலம் அதை சாத்தியமாக்கி தன் கட்சிக்கு நிதி திரட்டியது தான் பாஜக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை

 

 

 

 

 

Monday, February 27, 2023

எப்படி இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி:

 

 

2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு  ஏழு விழுக்காட்டு வளர்ச்சியை எட்டுவதற்கான பாதையில் உள்ளது என்று நிதி அமைச்சகம் ஜனவரி 2023க்கான அதன் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் கூறியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

 பாஜக அரசு கூறும் அதே தொனியிலே சர்வதேசப் பண நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடமாகத் திகழ்கிறது என்றும், டிஜிட்டல் மயமாக்கம் நாட்டின் பொருளாதாரத்தை தொற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுவித்ததாகவும் கூறியுள்ளார். விவேகமான நிதிக் கொள்கை மற்றும் 2023-24 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மூலதன முதலீடுகளுக்கு அளிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நிதியுதவி ஆகியவை வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உண்மையானஜிடிபி’ வளர்ச்சி 6.8 விழுக்காடாக இருக்கும், அடுத்த நிதியாண்டில்ஜிடிபி’ வளர்ச்சி 6.1 விழுக்காடாகக் குறையும் என சர்வதேசப் பண நிதியம் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சியில் 15 விழுக்காட்டை இந்தியா மட்டுமே பங்களிக்கும் என்றும் ஜார்ஜீவா  கூறினார். பணவீக்கத்தை மீண்டும் இலக்கு நிலைகளுக்குக் கொண்டு வருவதற்கு, கொள்கை வகுப்பாளர்கள் பணவியல் இறுக்கம் செய்யும் போக்கில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய மத்திய வங்கியின் பணக் கொள்கைக் குழு உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மாவின் மதிப்பீடு வேறுபட்டுள்ளது, அவர் ஒப்பீட்டளவிற்கு எதார்த்தமாக மதிப்பீடு செய்துள்ளார்.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.  அதிக வட்டி விகிதங்கள் தனியார் மூலதன முதலீட்டை மிகவும் கடினமாக்கும். அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்கிறது, இதனால் தனியார் மூலத்திலிருந்து பொருளாதாரத்திற்கான ஆதரவைக் குறைக்கிறது என்கிறார் ஜெயந்த் ஆர் வர்மா.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 'மிகவும் பலவீனமாக' இருப்பதாகத் தோன்றுகிறது, நமது மக்கள்தொகை சூழல் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் நமது தொழிலாளர்களின் உழைப்பு ஆற்றலின்  நலன்களை நிறைவுசெய்யத் தேவையானதைக் காட்டிலும் இது குறையக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், 2022-23ல் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் 2023-24ல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், வளர்ச்சி மிகவும் பலவீனமாக இருப்பதாக தோன்றுகிறது, மேலும் பண இறுக்கம் வேண்டலை (பொருளாதாரத் தேவையை/மக்களின் வாங்கும் சக்தியை  சுருக்குகிறது . மேலும் உயரும் மாதாந்திர தவணைக் கட்டணங்கள் (EMI) வீட்டு வரவு செலவுத் திட்டங்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது, செலவினங்களைக் குறைக்கிறது, உலகளாவிய காரணிகளின் காரணமாக ஏற்றுமதிகள் குறைந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

தற்போது அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஜெயந்த் ஆர் வர்மா, கொள்ளைநோய் மற்றும் உக்ரைன் போரிலிருந்து விநியோக அதிர்ச்சிகள் படிப்படியாக குறைந்துள்ளதால், வரும் மாதங்களில் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் குறையும் என்றார்.  பண இறுக்கம் உலகம் முழுவதும் வளர்ச்சியை ஆபத்தில் ஆழ்த்துகிறது. பணவீக்கத்தை விட அபாயங்களின் சமநிலை வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது என்றும், இந்த சூழலில் இந்தியாவில் வட்டிவீதத்தை உயர்த்தாமல்ல் இடைநிறுத்தம் செய்வது மிகவும் பொருத்தமானது என்றும் கருத்து தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெபோ எனப்படும்ந்குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் தற்போது 6.5 விழுக்காடாக உள்ளது.

 

 

Saturday, February 25, 2023

நங்கூரமுதலீட்டாளர்:

 

 கௌதம் அதானியின் பங்குச்சந்தை மோசடிகளை கண்டும் காணமல் விட்டுவிட்டு,  ஒரு ஒழுங்குமுறையாளராக காலத்துடன் நெறிப்படுத்தத் தவறிய இந்தியப் பத்திரங்கள்,  பரிவர்த்தனை வாரியம் - செபி தற்போது அதானிக்கும்,  அதானி நிறுவனங்களில் நங்கூர முதலீட்டாளர்களாக முதலீடு செய்த மொரிஷியஸை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களான  கிரேட் இன்டர்நேஷனல் டஸ்கர் ஃபண்ட், ஆயுஷ்மத் லிமிடெடுக்கும் இடையிலான உறவுகளை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தனை நாட்களாகத் தூங்கிய இந்தியப் பத்திரங்கள்,  பரிவர்த்தனை வாரியம் (செபி) அதானி நிறுவனப் பங்குகளில் இந்தியப் பங்குச்சந்தை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதையும், பங்கு விற்பனைச் செயல்பாட்டில் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா என்பதையும் விசாரணை செய்கிறதாம். விசாரணை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் முடியுமா என்று தெரியவில்லை.

இந்தியாவின் மூலதன வெளிப்படுத்தல் நிபந்தனை விதிகளின் கீழ், ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர் குழுவுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனமும் நங்கூரமுதலீட்டாளர் வகையின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியற்றது.

நிறுவனங்கள் முதன்மைச் சந்தையில் பொதுமக்களிடம் பங்குகளை விற்று மூலதனத்தைத் திரட்டும் நிகழ்வே ஆரம்பப் பொது வழங்கல் (IPO) எனப்படுகிறது.  ஆரம்பப் பொது வழங்கல் மூலம் பொதுமக்களிடம் மூலதனத்தைத் திரட்டுவதற்கு முன்பே நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட விலையில் பங்குகள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு நங்கூர முதலீட்டாளரும் குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடுகள் 30 நாட்களுக்குள் விற்க இயலாதவாறு பூட்டப்பட்டிருக்கும்.

தகுதிவாய்ந்த நிறுவனங்கள் நங்கூர முதலீட்டாளர்களாக முதலீடு செய்யும் முறை 2009 இல் செபியால் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் நன்கு ஆராய்ந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பதால் இம்முதலீடுகள் பொதுவாக நம்பிக்கை ஊக்கியாகக் கருதப்படுகிறது.

நங்கூர முதலீட்டாளருக்கான நெறிமுறைகள்:

ஒரு நங்கூர முதலீட்டாளர் குறைந்தபட்சம் ரூ. 10 கோடி முதலீடு செய்யவேண்டும்.

பங்குகளின் மொத்தப் பொது  வெளியீட்டு அளவில் 30% வரை நங்கூர முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம்.

நங்கூர முதலீட்டாளர் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டு பரஸ்பர நிதிகளுக்கு ஒதுக்கப்படலாம்.

நங்கூர முதலீட்டாளர்களுக்கு வெளியீடு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஆரம்பப் பொது வெளியீட்டில் பங்குகள் வழங்கப்படும்

நங்கூர முதலீட்டாளருக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 30 நாட்கள் பூட்டுதல் காலம் உள்ளது, எனவே நங்கூர முதலீட்டாளர் தனது ஒதுக்கப்பட்டப் பங்குகளை குறைந்தது 30 நாட்களுக்கு விற்க முடியாது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், வணிக வங்கியாளர் அல்லது விளம்பரதாரர்கள் எவரும் நங்கூர முதலீட்டாளர் பிரிவின் கீழ் பங்குகளுக்கு விண்ணப்பிக்க முடியாது

நங்கூர முதலீட்டாளர்களுக்குப் பங்குகள் ஒதுக்கப்பட்ட விலையை விட பொதுவெளியீட்டு விலை கூடுதலாக இருந்தால், நங்கூர முதலீட்டாளர்கள் கூடுதல் பணத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் நங்கூர முதலீட்டாளருக்கு ஒதுக்கப்பட்ட விலையை விடக் குறைவாக பொதுப்பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அதிகப்படியான தொகை அவர்களுக்குத் திருப்பித் தரப்படாது.

Friday, February 24, 2023

தமிழ்நாட்டில் அதானி செய்த ஊழல் (3):

 

அதானியின் சகோதரரின் வைர வியாபாரத் திட்டத்தை 2004-6 வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்தது. வைர விற்பனையில் கொள்கை முடிவுகளை அவர் தான் எடுத்துள்ளார். அதன் மூலமாக அரசிற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. கௌதம் அதானியின் மைத்துனன் வைர ஊழல் திட்டத்தின் தலைவராக செயல்பட்டுள்ளார். அதானி, வினோத் அதானி தனக்கு தொடர்புடைய நபர் அல்ல என அதாரி கூறியது நகைப்பிற்குரியது. ராஜேஷ் அதானி வைர ரீடிங்கில் முறைகேடுகள் செய்துள்ளார். அதானி குழுமத்தில் 22 தலைமைப் பதவிகளை 8 குடும்ப உறுப்பினர்களே கட்டுப்படுத்துகின்றனர். இதன்மூலம் சிறுபான்மை பங்கு உரிமையாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

அதானி மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தயாராக இல்லை. நிலக்கரி ஊழலில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) 14 நாடுகளுக்கு அதானி அந்தந்த நாடுகளில் பணத்தை எப்படி பதுக்கினார் என்பதைப் பற்றி விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியது. ஊழல் பணம் குறித்த தரவுகளைக் கேட்டுள்ளது. உடனே அதானி சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கு எந்தத் தகவலும் கொடுக்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்திய விசாரணை அமைப்புகளுக்கு எந்தத் தகவலும் கொடுக்கக்கூடாது என்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் தோல்வியும் அடைந்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபின் இந்த 14 கடிதங்களும் கைகழுவப்பட்டது, பிறகு இதற்கு உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது..

 

ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டு அரசையும், விசாரணை அமைப்புகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்போம் என்றும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டெண்டர் எடுத்த அதானி சிங்கப்பூர் நிறுவனம் நம் பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு மின்சார வாரியம் போன்றவற்றில் செய்யும் ஊழல் நம் இந்திய நாட்டின் மீதும் அதன் இறையாண்மை மீதும் செய்யப்படும் தாக்குதலாகும். இந்த பணத்தை உடனே அதானி போன்றவரிடம் இருந்து மீட்டெடுத்து நம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை காப்பாற்றுவது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சரின் முக்கிய கடமையாகும். லஞ்ச ஒழிப்புத் துறை மூலமோ அல்லது தன்னிச்சையான ஒரு விசாரணை அமைப்பு அமைத்தோ இந்த ஊழல்கள் மீது FIR பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்ததற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

அதானி ஊழல் மோசடிகளுக்கு நாட்டைக் காவு கொடுத்த நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பவேண்டியதே தற்போது எதிர்க் கட்சிகள் முன் இருக்கும் ஜனநாயகக் கடமை.

தமிழ்நாட்டில் நடந்த நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் அவர்களது ஊடகத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

Evidence: http://bit.ly/AdaniNathamCoalScam

தமிழகத்தில் இந்த ஊழலில் முன்னாள் மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின்சார வாரிய இயக்குனர் ஞானதேசிகன் IAS மற்றும் அதிகாரிகளும் கொள்முதல் நிறுவனங்களும் சேர்ந்து இந்த கூட்டு சதியை இயக்கியுள்ளது. ஞானதேசிகன் IAS டிசம்பர் 2014 ல் கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு வந்த ஒரே வாரத்தில் தலைமை செயலாளராக ஆக்கப்பட்டார். ஊழலுக்கு அவருக்கு கிடைத்த பரிசு அது. வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் அன்புநாதன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை சோதனை செய்த பொது பல பினாமி மற்றும் ஹவாலா சம்பந்த ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்பட்டது. மேலும் இந்த ஊழலின் மூலம் பெறப்பட்ட தொகை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பினாமிகள் மூலம் முதலீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. நத்தம் விஸ்வநாதனின் நண்பர் வைத்துள்ள NPR கல்லூரிகளில் (TITAN Educational Trust) ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்த ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கல்லூரிகளில் நிர்வாகத்தை நத்தம் விஸ்வநாதனின் சகோதரரும், சகோதரன் மகனும் பார்த்துக்கொள்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன் மீது எந்த நடவடிக்கையும் CBI இது வரை எடுக்கவில்லை. முழு விசாரணை கூட செய்யவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஊழலும் power purchase agreements ஊழலும்தான். இந்த சுமை அனைத்தும் சாதாரண மனிதன் மீது தான் சுமத்தப்படுகிறது. அறப்போர் இயக்கம் இந்த ஆவணங்கள் அனைத்தையும் பிரஷாந்த் பூஷன் வழக்கின் மூலம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கிறோம். நீதி கிடைக்க பாரபட்சமில்லாத நீதிமன்ற பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Thursday, February 23, 2023

தமிழ்நாட்டில் அதானி செய்த ஊழல் (2):

 

தமிழ்நாட்டில் செய்த நிலக்கரி ஊழலினால் மின்சாரக் கட்டணம் 1-1.50ரூபாய் உயரும். ஊழலின் விலை மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன்.

இந்த நிலக்கரி ஊழல் தமிழ்நாட்டில் மட்டும் செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எகனாமிகல் அண்ட் பொலிடிகல் வீக்லி பத்திரிக்கையில் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

அதானி-ஊழல் குறித்து ஜெயராம் வெங்கடேசன் பகிர்ந்தவை பின்வருமாறு:

இந்தியா முழுவதும் நடந்த நிலக்கரி ஊழலின் மதிப்பு 30000 கோடி ரூபாய். இதன் மீது ஏன் விசாரணை செய்யப்படவில்லை. நிலக்கரி ஊழலில் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை மேற்கொண்டிருக்கவேண்டும். சிபிஐ அஞ்சுகிறது. முதுகெலும்பில்லாத இயக்கமாக சிபி.ஐ செயல்படுகிறது. இந்த ஒட்டு முதலாளித்துவத்தில், நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் அதானி. இந்த ஒரே காரணத்தினால் எந்த விசாரணை அமைப்பும், அதானியை விசாரணை செய்ய அஞ்சுகிறார்கள். முதல் விசாரணை அறிக்கை மேற்கொள்ள சிபிஐக்கு துணிவு இல்லை. நமது வரிப்பணாத்தில் ஊதியம் பெறும் இவர்கள், இதற்குக்கூட பயப்படுகிறார்கள். நமது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதைப்பற்றி கேள்வி எழுப்பவேண்டுமா இல்லையா. இதனை விசாரணை மேற்கொள்ளச் செய்ய 1.5 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அலைந்துகொண்டிருக்கிறோம். சிபிஐ இடமும் கேட்டாகிவிட்டது, விசாரணை மேற்கொள்ளுங்கள், எஃப்.ஐ.ஆர் பதிவுபண்ணுங்கள் என்று. பலமுறை அலைந்துகேட்டாகிவிட்டது. ஆனால் பயம் பிரதமருக்கு நெருக்கமானவர் அதானி என்று பயம்.

இந்தியாவில் அதானி ஊழல் மோசடியில் பெற்றப் பணம் எங்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப்பணம் வரிப்புகலிடங்களுக்கு செல்கிறதா என்பதை விசாரணை மேற்கொள்ளவேண்டும். நிலக்கரி இறக்குமதி ஊழலிருந்து வந்த பணத்தை, வெளிநாட்டில் பார்க் செய்யப்பட்டப் பணத்தை பயன்படுத்தியிருக்கிறார்களோ, அதை மொரிசியஸ் மூலமாக ஷெல் நிறுவனங்கள் மூலமாகக் கொண்டுவருகிறார்களோ என்ற கேள்வியெல்லாம் கூட எழும்புகிறது. ஹிண்டன் பர்க் அறிக்கை 17 பில்லியன் டாலர் அளவிற்கு அதானி ஊழல், பங்குச்சந்தை, பண முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று கூறுகிறது. எப்படி அதானிக்கு இவ்வளவு பணம் வந்தது, பங்கு மதிப்பு எப்படி இந்தளவுக்கு உயர்ந்தது. செபி, ரிசர்வ் வங்கி இதன் மீது விசாரணை செய்திருக்கவேண்டும். ஹிண்டன்பர்க் இரண்டு வருடம் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதை இந்தியா மீதான தாக்குதல் என்கிறார் அதானி. ஆனால் அதானியில் தொழில்வணிகமே இந்தியா மீதானத் தாக்குதலாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை சூறையாடுவது, நம் வரிப்பணத்தை எல்லாம் சுரண்டியது; இது போல பல ஊழல்களை செய்ததால் இந்தியாவின் மீதானத் தாக்குதலைச் செய்தவர் அதானி தான். கடந்த 3 ஆண்டுகளில் அதானியின் சொத்துமதிப்பு 3 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. 8 லட்சம் கோடி ரூபாயை கடந்த 3 ஆண்டுகளில் பங்குகளின் மதிப்பேற்றம் மூலமாகப் பெற்றிருக்கிறார் . பங்குகள் இயல்பாக உயர்ந்திருக்கிறதா, செயற்கையாக உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இதில் 85% செயற்கையாக மதிப்புயர்த்தப்பட்டுள்ளது. ஊழல் பணங்களை மொரிசியசுக்கு மாற்றி அங்கிருந்து அவற்றை அதானி பங்குகளில் முதலீடு செய்வது. அந்த நிறுவனத்தின் நிலை என்ன, நிறையக் கடன் வாங்கியுள்ளனர். எல்.ஐ.சி, ஸ்டேட் வங்கி முதலீடு செய்கிறார்கள். 2 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன்களைப் பெற்றுள்ளார்.

தேசப்பற்றை மோசடியாளர்களின் கடைசிப்புகலிடமாகப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு நிதியமைச்சகத்திலிருந்து அனைவரும் பதில் சொல்லவேண்டியுள்ளது. எந்த அடிப்படையில் எல்.ஐ.சி. ஸ்டேட் வங்கியின் பணம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

ஒட்டு முதலாளித்துவத்தில் பெருமுதலாளிகளிடமிருந்து வாங்குவதற்காக சட்டபூர்வமாக ஊழல் செய்வதற்கு கொண்டு வரப்பட்டத் திட்டம் தான் தேர்தல் பத்திரம். அதானியிடமிருந்து தேர்தல் பத்திரம் மூலமாக பாஜகவிற்கு பணம் வந்ததா என்பதை பாஜக சொல்லவேண்டும். எவ்வளவு பணம் வந்தது. அதனால் தான் ஊழலைக் கண்டுகொள்ளாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்களா, எந்த விசாரணையும் சிபி.ஐ மேற்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இதுதானா.

ஊழல் தடுப்பு சட்டத்தில் (Prevention of corruption) ஒருவரை விசாரிப்பதற்கு கூட அனுமதி வாங்கவேண்டும். எல்லாவற்றிற்கும் தடை செய்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது எவ்வளவு கறுப்புப் பணத்தையும் வெள்ளைப் பணமாக்குகிறது.

(தொடரும்)

 

 

Wednesday, February 22, 2023

தமிழ்நாட்டில் அதானி செய்த ஊழல்:

 

தமிழ்நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் அதானி செய்த ஊழல்களையும். தமிழ்நாடு மின்சார வாரியம் எவ்வாறு சூறையாடப்பட்டது? என்பதையும் அறப்போர் இயக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2012லிருந்து 2016 வரை நிலக்கரி கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 100-200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி ஏலத்திற்கு 1000 கோடி ரூபாய் புரள்வு மதிப்பு கொண்ட நிறுவனங்களே தகுதியுடையவையாக மோசடியான முறையில் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக தமிழ்நாடு மின்சார வாரியம் டேஞ்சங்கோ நிர்ணயித்தது. இதனால் அதானி பிடிஇ லிமிடெட், நாலேட்ஜ் இன்டர்னேசனல் ஸ்டேரேட்டஜிஸ், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் எம்.எம்.டி.சி, எம்.எஸ்.சி.சி ஆகிய பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே நிலக்கரி கொள்முதலுக்கான ஏல அறிவிப்பு விடப்பட்டது. இதில் எம்.எம்.டி.சி, எம்.எஸ்.சி.சி ஆகியவை பொதுத்துறை நிறுவனங்கள். அதானி பிடிஇ லிமிடெட், நாலேட்ஜ் இன்டர்னேசனல் ஸ்டேரேட்டஜிஸ், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் எம்.எம்.டி.சி, எம்.எஸ்.சி.சி ஆகிய நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் 2012 முதல் 2016-வரை 2.44 கோடி மெட்ரிக்.டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. மொத்தக் கொள்முதலில் 49%% (1.19 கோடி மெட்ரிக் டன்)  அதானி பிடிஇ லிமிடெட்டிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பு, கொள்முதல் செய்த விவரங்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதியில் இரண்டு விதமாக ஊழல்கள் செய்துள்ளனர். ஒன்று 80 டாலர் நிலக்கரியை 100 டாலருக்கு விற்பது, 60 டாலர் நிலக்கரியை 80 டாலருக்கு விற்பது என . நிலக்கரியின் கொள்முதல் விலையை 20 டாலர் கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்று மோசடி செய்துள்ளனர். இரண்டாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியை விற்றுள்ளனர். 6000கிலோ கலோரி/கிலோகிராம் தரத்தில் நிலக்கரி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வாங்கப்படவேண்டும். ஆனால் 4500-5000 கிலோகலோரி/கிலோகிராம் தரமுடைய நிலக்கரி தான் வழங்கப்பட்டுள்ளது. சுங்கத்துறையின் சரக்கு சோதனையில் நிலக்கரியின் தரம் குறைவாக  4500கிலோகலோரி/கிலோகிராம் தான் உள்ளது என சான்றிதழ் அளித்துள்ளனர். அதே சரக்கிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் 6000 கிலோகலோரி/கிலோகிராம் தரமுள்ளது என்று மோசடி சான்றிதழ் அளித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு சரக்கு கொள்முதலில் இதனால் மட்டுமே 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என சிஏஜி அறிக்கை கூறுகிறது. தரம் தாழ்ந்த நிலக்கரியை கொள்முதல் செய்ததில் மட்டும் 2400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்குப் பாதி அதானியால் வழங்கப்பட்டுள்ளது. மட்டமான நிலக்கரியை அதானியிடம் வாங்கியதால் 1200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலையில் நடந்த ஊழலையும் சேர்த்துக் கணக்கிட்டால் அதானியால் மட்டுமே 3000 கோடி ரூபாய் சூறையாடப்பட்டுள்ளது. அதானியால் மட்டுமே தமிழ்நாடு மின்சார வாரியம் 3000 கோடி ரூபாய் இழந்துள்ளது.

 

(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...